கனெக்ட்டிகட்டில் தாராவின் அரங்கேற்றம்
கனெக்ட்டிகட் ஆக்ஸ்போர்ட் ஹை ஸ்கூலில் ஸ்ரீதர் சேஷன் மற்றும் ஜெயந்தி சேஷனின் மகளான தாரா சேஷனின் பரத நாட்டிய அரங்கேற்றம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
தாரா சிறு வயது முதலே ஜெயந்தி சேஷன் மற்றும் காயத்ரி பாலகுருனாதனிடம் முறைப்படி பரதம் பயின்றவர். இவருடைய தாயார் இவருக்கு குருவுமாக அமையப் பெற்றது இவரது கூடுதல் சிறப்பு.
ஸ்ரீதர் சேஷனின் வரவேற்புரையைத் தொடர்ந்து கம்பீர நாட்டை ராக புஷ்பாஞ்சலியுடன் நிகழ்ச்சி தொடங்கியது.
பிறகு ஆரபி ராகத்தில் அமைந்த கிருஷ்ண கௌத்துவமும் ரிஷப பிரியாவில் அமைந்த ஆனந்தக் கூத்தாடினார் என்ற பாடலும் வெகு அற்புதம்.
அடுத்து வந்த சுவாமி நான் உந்தன் அடிமை என்ற நாட்ட குறிஞ்சி ராக வர்ணத்துக்கு சுமார் 45 நிமிடங்கள் சிறிதும் தொய்வில்லாமல் ஆடி அவையோரின் ஆரவாரக் கைத்தட்டல்களைப் பெற்றார்.
ஒவ்வொரு பாடலுக்கு மத்தியிலும் ஜெயந்தி சேஷன் மற்றும் காயத்ரி பாலகுருநாதனின் நட்டுவாங்கத்திற்கு விறு விறுப்புடன்
ஆடி அனைவரையும் வியக்க வைத்தார்.
அடுத்து வந்த ரஞ்சனி மாலா என்ற தேவி க்ருதியிலும், டாக்டர் அன்னி பெசன்ட் எழுதிய வசந்த கால மகிழ்ச்சியைக் குறிக்கும் பாடலிலும் தாராவின் அற்புதமான திறமை வெளிப்பட்டது.
அடுத்து மோகன ராகத்தில் அமைந்த ஸ்ரீ ஜெய தேவரின் அஷ்டபதியில் தாராவின் அபிநயத்தில் ராதையின் உணர்வுகள் அழகாக வெளிப்பட்டன. இதில் சாந்தா தனஞ்சயனின் நட்டுவாங்கம் கூடுதல் சிறப்பம்சமாகும்.
இறுதியாக பெஹாக் ராகத்தில் அமைந்த தில்லானாவுக்கு சிறப்பாக ஆடி பார்வையாளர்களின் பலத்த கரகோஷத்தைப் பெற்றார்.
பாபு பரமேஸ்வரனின் குரலிசையும் ரங்கநாதன் சேகரின் ம்ருதங்கமும், சுதாகர் மகாலிங்கத்தின் குழலிசையும், வினோத் கே. மனாவின் வயலினும் நிகழ்ச்சிக்குப் பெரிதும் உதவின.
இடைவேளையின்போது பாபு பரமேஸ்வரன், கர்நாடக இசை, ஹிந்துஸ்தானி மற்றும் மேற்கத்திய இசைகளுக்கிடையே உள்ள வேறுபாடுகளை செயல்முறை விளக்கத்துடன் மிகவும் சுவாரஸ்யமாகவும் பயனுள்ள வகையிலும் விளக்கினார்.
இறுதியாக நடன மேதை தனஞ்சயன் வாழ்த்திப் பேசிய பிறகு, திரு. ஸ்ரீதர் சேஷனின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.












Click it and Unblock the Notifications