சென்னை விழாவில் கவிஞர் தண்ணன் மூஸாவுக்கு இலக்கிய விருது

சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவ நேயப் பாவணர் மாவட்ட மைய நூலகத்தில் சமீபத்தில் நடைபெற்ற இவ்விழாவிற்கு இஸ்லாமிய ஆய்வுப் பண்பாட்டு நிலையத்தலைவர் கே.எஸ்.எம். ஷாஹுல் ஹமீத் ஆலிம் ஜமாலி தலைமை தாங்கினார். பி.எஸ்.எம். செய்யிது அப்துல் காதிர் வரவேற்புரையாற்றினார்.
கவிஞர் மு. முஹம்மத் மூஸா இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் 1930 ஆம் ஆண்டில் முஹம்மத் மைதீன், முஹம்மத் மர்யம், தம்பதியினரின் மகனாய்ப் பிறந்தார். அஸாதரன், கைவல்யன், தேசிகன், தென் துவாரகையார், மதுரகவி மோசசு தண்ணன் எனப் பல புனைப்பெயர்கள் இவருக்கு உண்டு.
செளந்தர்ய முத்திரை, வெற்றிச்சூடி ஆகிய இரண்டு நூல்களை எழுதியுள்ளார். செளந்தர்ய முத்திரை இஸ்லாமிய வாழ்வியலைக் கவிதை வடிவில் அழகாகப் பேசும் நூலாகும். வெற்றிச்சூடி ஈரடியில் எளிய நடையில் ஒழுக்க மாண்புகளை உணர்த்தும் நூலாகும்.
தண்ணன் மூஸா முஸ்லிம் தமிழ்க் கவிஞர் மன்றத்தின் அமைப்பாளராகவும் செயலாளராகவும் இருந்துள்ளார். பல்வேறு இலக்கியவாதிகளின் நூலுக்கு சாற்றுக்கவிகள் எழுதியுள்ளார். இஸ்லாமியத் தமிழ் இலக்கிய விழாக்கள் பலவற்றிற்கு உதவியுள்ளார். யுனிவர்ஸலின் கலைக் களஞ்சிய வெளியீட்டு விழாவை மாநாடு போல் நடத்திக் காட்டினார்.
இஸ்லாமிய நிறுவன அறக்கட்டளையின் இலக்கிய ஆலோசகராகப் பல்லாண்டுகள் பணியாற்றியுள்ளார். கார்லைல் மன்றம் எனும் பெயரில் பதிப்பகம் நடத்தி வந்தார். கவி.கா.மு. ஷெரீப் முதல் எழுத்தாளர் சின்னக்குத்தூசி வரை விரிந்து பரந்த இலக்கிய உறவுகளைப் பெற்றார்.
தற்போது உடல் நலன் குன்றி ஓய்வெடுத்து வருவதால் இலக்கிய விருதினை அவர் சார்பாக அவரது பேரர் ஷேக் இஸ்மாயில் பெற்றுக் கொண்டார். முப்பதாயிரம் ரூபாய் பரிசுத் தொகையைக் கொண்ட பொற்கிழியும் பாராட்டுப் பத்திரமும் அவருக்கு வழங்கப்பட்டது.
தண்ணன் மூஸாவின் இரு நூல்களில் உள்ள சிறப்புகளைக் குறித்து தமிழருவி மணியன் சிறப்புரை ஆற்றினார். உமர் அப்துல் காதர் நன்றி கூறினார். இந்த இலக்கிய விழாவில் ஏராளமான இலக்கியவாதிகளும் தமிழ் ஆர்வலர்களும் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.












Click it and Unblock the Notifications