திருமலையில் வைகுண்ட ஏகாதசி- பக்தர்களுக்கு இலவச தரிசனம்: சுதர்சன தரிசன டிக்கெட் ரத்து
திருமலை: ஆங்கில புத்தாண்டு, ஏகாதசி, துவாதசி ஆகிய 3 நாட்களுக்கு கோவிலில் நடைபெறும் ஆர்ஜித சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும், அதிகாலை 4 மணி முதல் இலவச தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
மேலும் ஜனவரி 1,5,6 ஆகிய 3 நாட்களும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் ஒரு வயது குழந்தைகள் வைத்துள்ள பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்றும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான துணை அதிகாரி கூறியதாவது:
ஜனவரி ஒன்று ஆங்கிலப்புத்தாண்டு, ஜனவரி 5 வியாழக்கிழமை ஏகாதசி, 6 ந் தேதி வெள்ளிக்கிழமை துவாதசி ஆகிய விசேச தினங்களில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மூன்று நாட்களும் அதிகாலை 4 மணியில் இருந்து இலவச தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இதனையொட்டி நாடு முழுவதும் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தின் மூலமாக, இ சேவா மூலம் வழங்கப்படும் 50 ரூபாய் சிறப்பு தரிசன சுதர்சன டோக்கன் ரத்து செய்யப்படுகிறது.
நடைபாதை பக்தர்கள்
திருமலை திருப்பதி தேவஸ்தான தகவல் மையம் மூலமாக இந்த ஆண்டு 100 ரூபாய் பிரத்யேக தரிசன டிக்கெட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி சென்னை 2,500, ஐதராபாத் 2,500, விசாகப்பட்டிணம் 1,750, பெங்களூர் 1,500, மும்பை 1,500, விஜயவாடா 1,000, கோயம்புத்தூர் 750, சேலம் 750 உள்பட 25 ஆயிரம் டிக்கெட்டுகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த 100 ரூபாய் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யும் பக்தர்கள் திருப்பதி அலிபிரி திருமலை, ஸ்ரீவாரிமெட்டு திருமலை ஆகிய நடைப்பாதை வழியாக நடந்து வந்தால் மட்டுமே ஏழுமலையானை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
5ஆயிரம் டிக்கெட்டுகள் விநியோகம்
சுதர்சன டி.க்கெட்டுகளுக்கு பதிலாக 300 ரூபாய் பிரத்யேக தரிசன டிக்கெட்டுகள் கொடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி சென்னை 500, ஐதராபாத் 750, விசாகப்பட்டிணம் 500, பெங்களூர் 300, மும்பை 300, கோயம்பத்தூர் 150, சேலம் 150 உள்பட நாடு முழுவதும் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான தகவல் மையம் மூலமாக சுமார் 5 ஆயிரம் டிக்கெட்டுகள் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
விஐபி தரிசனம் முன்பதிவு
மேலும் அடுத்த மாதம் 1 ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆங்கில புத்தாண்டு, ஏகாதசி, துவாதசி ஆகிய 3 நாட்கள் வி.ஐ.பி. தரிசனம் செய்பவர்கள், வருகிற 25 ந் தேதிக்குள் அவர்களுடைய பெயர், விலாசம், செல்போன் நம்பர் ஆகியவற்றை திருமலை திருப்பதி தேவஸ்தான துணை அதிகாரி அலுவலகத்திற்கு "பேக்ஸ்'' மூலம் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. வருகிற 30 ந் தேதிக்குள் அவர்களுக்கு தரிசன டிக்கெட்டுகுள் கிடைத்ததா இல்லை என்ற தகவல் செல்போன் மூலமாகவே அல்லது எஸ்.எம்.எஸ். மூலமாகவே திருமலை திருப்பதி தேவஸ்தான துணை அதிகாரி அலுவலகத்தின் வாயிலாக தெரியப்படுத்தப்படும்.
ஒரு வயது குழந்தைகள்
ஆங்கில புத்தாண்டு, ஏகாதசி, துவாதசி ஆகிய 3 நாட்களுக்கு பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் ஒரு வயது குழந்தைகள் வைத்துள்ள பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. ஜனவரி 1,5,6 ஆகிய 3 நாட்களும் கோவிலில் நடைபெறும் ஆர்ஜித சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.