ஜெ.வுக்கு தென்துருவத் தமிழ்ச் சங்கங்களின் சம்மேளனம் கோரிக்கை
அந்த அமைப்பு முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், மூன்றாவது முறையாகத் தமிழ் நாட்டு மக்கள் தங்களை முதலமைச்சராகத் தேர்வு செய்துள்ளனர். இப்பொறுப்பு மிக்க பதவியை ஏற்றிருக்கும் தங்களுக்கு, தென்துருவத்தில் வாழும் புலம்பெயர் ஈழத் தமிழர்கள் மற்றும் ஈழம் வாழ் தமிழ் மக்களின் நலன் குறித்துக் கடந்த 27 வருடங்களாகச் செயலாற்றிவரும் தென்துருவத் தமிழ்ச் சங்கங்களின் சம்மேளனம் பாராட்டுக்களையும், உளம்கனிந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.
தம்மினம் ஈழத்தில் செத்து மடிவதைக் கைகட்டிப் பார்த்து நின்ற அரசொன்றைத் மக்கள் தூக்கி எறிந்துள்ளனர். ஈழ மக்களை காக்க தங்கள் மீது நம்பிக்கை வைத்து ஆட்சியில் அமர்த்தியுள்ளனர். நீங்கள் முதன்முதலாக அளித்த பேட்டியில், ஈழத் தமிழினத்திற்கு எதிராக நடைபெற்ற போர்க்குற்றத்திற்கு எதிராகச் சர்வதேச நீதி விசாரணைக்கு குரல் கொடுப்பேன் என்று அடித்துச் சொல்லியிருப்பது ஈழத் தமிழர்களின் உள்ளங்களை மட்டுமன்றி, தமிழக மக்களின் இதயங்களையும், உலகில் பரந்து வாழும் சகல தமிழ் நெஞ்சங்களையும் தொட்டிருப்பதோடு எமக்கெல்லாம் ஆறுதலையும், நம்பிக்கையையும், நியாயமான எதிர்பார்ப்புக்களையும் தந்துள்ளது.
தங்களது இந்தக் கருத்திற்குச் செயல் வடிவம் கொடுக்க, அதிவிரைவில் இதுபற்றித் தங்களது சட்டசபையில் வலுவான தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி அதன்மூலம் பிரதமர் மன்மோகன்சிங் அவர்களது மத்திய அரசிற்கு அழுத்தத்தைக் கொடுக்குமாறு தங்களை அன்புடனும், உரிமையுடனும் கோருகிறோம்.
ஈழத்தமிழ் மக்களின் நியாயமான விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவளித்து அவர்களின் பாதுகாப்பில் அக்கறை கொண்டு செயல்பட்ட மாண்புமிகு முதல்வர் காலம் சென்ற எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்களின் வழிகாட்டலில் வளர்ந்த தாங்கள், அதே
மக்களின் நியாயமான, சுதந்திரமான அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்ய முன்வருவீர்கள் என்ற திடமான நம்பிக்கையுடன், மீண்டும் ஒருமுறை தங்களை வாழ்த்தி விடைபெறுகிறோம் என்று கூறப்பட்டுள்ளது.