சீட் வாங்க கார்டனில் கண்ணீர் விட்ட முன்னாள் அமைச்சர் பாப்பா சுந்தரம்
குளித்தலை: கரூர் மாவட்டம், அதிமுக குளித்தலை சட்ட மன்ற தொகுதி நேர்காணல் நிகழ்ச்சியின்போது வயதைக் காரணம் காட்டி உள்ளே விட மறுத்ததால் கலங்கிப் போய் கண்ணீர் விட்டு விட்டாராம்.
திமுகவைப் போல இல்லாமல் அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்பி மனு கொத்தவர்களுக்கு ரகசிய நேர்காணல் நடத்தப்பட்டது.
கரூர் மாவட்டம், குளித்தலை தொகுதி நேர்காணல் நிகழ்ச்சி போயஸ் கார்டனில் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது.
அப்போது முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட அவைத் தலைவருமான பாப்பா சுந்தரம், குளித்தலை ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் கலைமணி, தோகமலை ஒன்றியச் செயலாளர் விஜயன் ஆகியோர் நேர்காணலுக்கு சென்றனர்.
தொகுதி நமக்குத் தான் என அவர்கள் கனவில் சென்று கொண்டு இருந்த போது, முன்னாள் அமைச்சர் பாப்பா சுந்தரத்தை கார்டனில் உள்ள முக்கிய நபர் ஒருவர் தடுத்து நிறுத்தி உள்ளே செல்ல அனுமதி இல்லை என கூறி வெளியேற்ற முயன்றுள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பாப்பா சுந்தரம் என்னை கூப்பிட்டதால் தான் நான் இங்கு வந்தேன். இல்லை வந்திருக்க மாட்டேன். நேற்று வரசொல்லிவிட்டு இன்று தடுத்தால் என்ன அர்த்தம் என குமுறி கண் கலங்கி விட்டாராம். பிறகு ஒரு வழியாக கார்டனுக்குள் அவரை அனுமதித்தார்களாம்.
தற்போது பாப்பா சுந்தரம் குளித்தலை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
பாப்பா சுந்தரத்திற்கு வயது 70க்கு மேல் என்பதால் இந்த வயதில் போட்டியிட்டு என்ன செய்யப் போகிறார் இவர் என்ற நினைப்பில்தான் உள்ளே விட மறுத்து விட்டார்களாம். இருந்தாலும் பாப்பா சற்றும் மனம் தளராமல் போராடியதால் உள்ளே செல்லவும் அனுமதி கிடைத்தது. இப்போது தேர்தலில் போட்டியிடவும் அனுமதி கிடைத்து விட்டது.