23ல் சாய் பாபா ஜெயந்தி: புட்டபர்த்தியில் 6 நாள் கொண்டாட்டம்
புட்டபர்த்தி: புட்டபர்த்தி சாய்பாபாவின் 85வது பிறந்தநாள் விழா வரும் 19ம் தேதி முதல் 24ம் தேதி வரை தொடர்ந்து 6 நாட்கள் கொண்டாட சாய் அறக்கட்டளை முடிவு செய்துள்ளது.
ஸ்ரீ சத்ய சாய் பாபா உடல் நலக்குறைவால் கடந்த ஏப்ரல் மாதம் 24ம் தேதி உயிர் இழந்தார். அவரது ஆசிரமமான பிரசாந்தி நிலையத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் மகா சமாதி கட்டப்பட்டது.
சாய் பாபா உயிரோடு இருக்கையில் ஒவ்வொரு குருபூர்ணிமா தினத்தன்றும் பக்தர்களுக்கு தரிசனம் தருவது வழக்கம். அதனால் பாபாவின் மகா சமாதி குருபூர்ணிமா தினமான ஜூலை மாதம் 15ம் தேதி பக்தர்கள் தரிசனத்திற்காக திறக்கப்பட்டது.
அன்று முதல் பாபா சமாதிக்கு ஆயிரக் கணக்கில் பக்தர்கள் வந்து செல்கின்றனர். சாய் பாபாவின் 85வது பிறந்தநாள் வரும் 23ம் தேதி வருகிறது. இதையொட்டி புட்டபர்த்தி ஆசிரமத்தில் வரும் 19ம் தேதி முதல் 24ம் தேதி வரை தொடர்ந்து 6 நாட்கள் சாய்பாபா ஜெயந்தி விழா நடக்கிறது.
இது குறித்து சாய் அறக்கட்டளை சார்பில் கூறப்பட்டதாவது,
சாய் பாபா மறைவிற்குப் பிறகு வரும் முதல் ஜெயந்தி விழா என்பதால் அதை வெகுசிறப்பாக கொண்டாடத் திட்டமிட்டுள்ளோம். இதற்காக சாய்பாபாவின் சமாதி அலங்கரிக்கப்படுகிறது.
இந்த விழாவில் கலந்துகொள்ள ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்பதால் ஆசிரமத்தில் பலத்த பாதுகாப்பு போடப்படும். விழாவுக்கு வரும் பக்தர்களுக்குத் தேவையான வசதிகள் செய்யப்படவிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.