104வது பிறந்தநாள்: தியாகசீலர் கக்கன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
மதுரை: தியாகசீலர் கக்கனின் 104வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மாவட்ட கலெக்டர் அன்சுல் மிஸ்ரா மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கக்கன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தியாக சீலர் கக்கன் ஜூன் 18, 1908 ம் ஆண்டு மதுரை மாவட்டம், மேலூர் தாலுக்காவில் உள்ள தும்பைபட்டி கிராமத்தில் ஒரு தலித் குடும்பத்தில் பிறந்தார். விடுதலைக்காக போராடிய அவர் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் குழு (கமிட்டித்) தலைவராக இருந்தார்.
மேலும் 1957ம் ஆண்டு முதல் 1967ம் ஆண்டு வரை நடைபெற்ற காங்கிரஸ் அரசாங்கத்தில் பல பொறுப்புகளை வகித்தார். தலைசிறந்த அரசியல்வாதியாகவும் திகழ்ந்தார். அவருக்கு மேலூர் வட்டம் தும்பைபட்டி ஊராட்சியில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று அவரது 104 வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை மாவட்ட செய்தி-மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அவரது சிலைக்கு மாவட்ட கலெக்டர் அன்சுல் மிஸ்ரா, சட்டமன்ற உறுப்பினர்கள் மேலூர் ஆர்.சாமி, கே.தமிழரசன், எம்.வி.கருப்பையா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்பு, மணிமண்டபத்தில் கக்கனின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில் வைக்கப்பட்டுள்ள புகைப்படங்களை பார்வையிட்டனர். கக்கன் அவர்களின் மூத்த மகன் பாக்கியநாதன் மற்றும் அவரது துணைவியார் சரோஜினிதேவி உள்ளிட்ட பலரும் மரியாதை செலுத்தினர்.