அல் அய்னுக்கு சுற்றுலா சென்ற துபாய் தமிழ்ச் சங்க உறுப்பினர்கள்
துபாய்: துபாய் தமிழ்ச் சங்க அங்கத்தினர்கள் அமீரகத்தின் பூங்கா நகரம் என்று அழைக்கப்படும் அல் அய்ன் நகருக்கு 15.02.2013 அன்று சுற்றுலா சென்று வந்தனர்.
துபாய் தமிழ்ச் சங்க அங்கத்தினர்கள் காலை 8.30 மணிக்கு துபாயில் இருந்து மூன்று பேருந்துகளில் புறப்பட்டுச் சென்றனர். பேருந்து பயணத்தின் போது பேருந்திலேயே பலரும் தங்களது தனித்திறமைகளை பாடல்கள் மூலம் வெளிப்படுத்தினர். அல் அய்ன் நகரில் உள்ள ஹிலி பூங்காவில் மதிய உணவு மற்றும் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
முன்னதாக ஜெபல் ஹபித் பகுதியில் வெந்நீர் ஊற்று மற்றும் அங்குள்ள பூங்காவினைப் பார்த்தனர்.
ஹிலி பூங்காவில் ஆண்கள் ஏ மற்றும் பி அணிகளாக பிரிக்கப்பட்டு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் ஏ அணி கோப்பையினை வென்றது. 18 வயது முதல் 60 வயதுடையோர் வயது வித்தியாசமின்றி கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. பெண்களுக்காக பாட்டுக்கு பாட்டு உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. சிறுவர்களுக்கான ஓட்டப்போட்டி, பாட்டுக்கு பாட்டு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கலந்துரையாடல் நிகழ்ச்சியில் இவ்வாண்டு நடைபெற இருக்கும் பல்வேறு நிகழ்ச்சிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அல் அய்ன் தமிழ்க் குடும்ப நிர்வாகிகள் நரசிம்மன் மற்றும் பாலாஜி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று துபாய் தமிழ்ச் சங்கத்தின் சந்திப்பு நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெறுவதற்கு உறுதுணையாக இருந்தனர். மாலை 6 மணிக்கு அல் அய்ன் சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு மகிழ்வுடன் துபாய் திரும்பினர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை துபாய் தமிழ்ச் சங்க பொதுச் செயலாளர் ஜெகநாதன், பொருளாளர் கீதா கிருஷ்ணன், துணைப் பொருளாளர் சுந்தர், பொழுதுபோக்குத் துறை செயலாளர் ஏ. முஹம்மது தாஹா, கமிட்டி உறுப்பினர்கள் பிரசன்னா, விஜயராகவன், விஜயேந்திரன் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.