நீங்க சிகரெட் குடிப்பவரா? அப்ப இந்த செய்தி உங்களுக்குத்தான்!
டெல்லி: சமீபத்திய மத்திய அரசின் புள்ளிவிவர கணக்கின் படி நாட்டில் 29 லட்சம் பேர் கேன்சரால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறதாம் .
இதற்கு காரணம் இந்திய சிகரெட்டுகளில் உள்ள அதிக நிகோடின்தான் என்று அச்சுறுத்துகின்றனர் நிபுணர்கள். உலக அளவில் விற்பனையாகும் சிகரெட்டுகளோடு ஒப்பிடுகளில் வரையறுக்கப்பட்ட அளவை கட்டிலும் இந்திய சிகரெட்டுகளில் அதிக நிகோடின் மற்றும் கேடு விளைவிக்கும் தார் இருக்கிறதாம்.
இதன்மூலம் புகைப்பிடிப்போர்களின் உடல் நலம் வெகுவாக பாதிக்கப்படும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

ஆபத்தான தகவல்
மத்திய புகையிலை ஆய்வு தொழிற்கூடம் சமீபத்தில் சிகரெட்டுகளை ஆய்வு செய்ததில் உயர்மட்ட அளவில் நிகோடினும், தாரும் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இது மிக ஆபத்தான விஷயம் என்கின்றனர் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள்.

தார் அதிகம்
உலக அளவில் கட் ஆப் ரேஞ்ச் படி ஒரு சிகரெட்டில் 10 மில்லி கிராம் தார் அளவு இருக்கலாம். ஆனால் இந்திய சிகரெட்டுகளில் 15 மில்லி கிராம் தார் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

அதிக நிகோடின்
அது போல் அனுமதிக்கப்பட்ட நிகோடின் அளவை விட நிகோடின் அதிகம் உள்ளது. அதாவது ஒரு சிகரெட்டில் அனுமதிக்கப்பட்ட நிகோடின் அளவு ஒரு மில்லிகிராம். இதனை விட அதிகம் அளவீடு இருப்பதாகவும் தெரிகிறது. இது மத்திய புகையிலை சட்டத்தின் மீறல் ஆகும்.

லாபம்தான் காரணம்
லாபம் மற்றும் விற்பனையின் முக்கியத்துவம் கருதி இந்திய சிகரெட்டுகளில் அதிக நிகோடின் அளவீடு கொண்ட சிகரெட் விற்கப்படுகிறது. இது உலக அளவின் வரைமுறையை விட அதிகம்.

ஆய்வுக்கூடம்
இதனை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுப்பதற்கு இந்தியாவில் மத்திய அரசு தரப்பில் ஆய்வுக்கூடங்களை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தலைமை ஆய்வுக்கூடம் முதன்முதலில் பஞ்சாப் மாநிலம் சண்டிகாரிலும் , தொடர்ந்து முக்கிய நகரங்களில் மண்டல அலுவலகங்களிலும் அமைக்கப்படுகிறது.

சென்னை, மும்பையில்
இது போல் மண்டல அளவில் சென்னை, மும்பை, ஆமதாபாத், கோல்கட்டா, நகரங்களிலும் அமைக்கப்படும். இதற்கான ஆயத்த பணியில் மத்திய சுகாதார அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

நிகோடின் மானிட்டர்கள்
இந்த ஆய்வகத்தில் பணியாற்றும் நிபுணர்களுக்கு அமெரிக்காவின் ஜாவ் ஹாப்கின்ஸ் யுனிவர்சிட்டி மூலம் சில பயிற்சிகள் நடத்தப்படும். மேலும் நகரங்களில் காற்றில் நிகோடின் அளவு குறித்த மானிட்டர்களும் நிறுவப்படவிருக்கிறது.

தெளிவா போடனும்
புகைப்பழக்கம் உடல் நலத்துக்கு கேடு என்று விளம்பரம் செய்தாலும் வாங்கி ஊதிக்கொண்டுதான் இருக்கின்றனர். எனவே சிகரெட்டுகள் தயாரிப்பு விவரங்கள் அதில் உள்ள கன்டெய்ன்ஸ் தகவல்கள் துல்லியமாக சிகரெட் பாக்கெட்டுகளில் இடம் பெறவேண்டும் என்ற ஒரு புதிய நடைமுறை மற்றும் பல்வேறு விதிமுறைகளும் கொண்டு வர உள்ளது மத்திய சுகாதார துறை அமைச்சகம்.

30 லட்சம் புற்றுநோயாளிகள்
தற்போது நாட்டில் 29 லட்சம் பேர் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆண்டு தோறும் இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே மத்திய சுகாதார அமைச்சகத்தின் கண்காணிப்பின் மூலம் நாட்டில் வேகமாக அதிகரித்து வரும் புற்றுநோயாளிகளின் நோய் அளவை குறைக்க முடியும் என மருத்துவ ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
புகைப் பிடிப்பவர்கள் அடுத்த முறை சிகரெட்டை வாயில் வைக்கும் முன் யோசித்துக் கொள்ளுங்களேன்.












Click it and Unblock the Notifications