பிறந்த வீட்டு ‘பொங்கசீர்’ வந்திருச்சா?
சகோதரர்கள் சீர் வரிசை
தலை தீபாவளி, தலை ஆடி, தலைப் பொங்கல் என திருமணம் செய்து கொடுத்தபின்னர் வரும் முதல் விசேசத்திற்கு அவரவர் வசதிக்கேற்ப பிறந்த வீட்டு சீர் கொடுத்து பெருமையை காப்பாற்றுவார்கள். இதோ வரப்போகிறது தைப்பொங்கல். ஊரெங்கிலும் பொங்கசீருக்காக கடை கடையாக ஏறி இறங்க ஆரம்பித்துவிட்டனர் அண்ணன் தம்பிகள். அப்படி என்னதான் சகோதரிகளுக்கு பொங்க சீர் கொடுப்பார்கள் என்று கேட்கிறீர்களா? பொங்கல் வைப்பதற்கு தேவையான அரிசி, வெல்லம் மட்டுமல்லாது பானை முதல் கரண்டி வரை எல்லமே புத்தம் புதிதாக எடுத்துக்கொடுத்து சீர் செய்வார்கள் சகோதரர்கள்.
பொங்கசீர் வரிசை
தமிழ்நாட்டில் புதிதாக மணம்முடித்த பெண்ணுக்கு, பிறந்த வீட்டில் இருந்து, இரண்டு வெண்கல பொங்கல் பானைகள், கரண்டிகள், 11 படி பச்சரிசி, 9 படி புழுங்கரிசி, கரும்பு, மஞ்சள் குலை, வாழைத் தார், ஒரு மூட்டை நெல் அல்லது அரிசி ஆகியவை பொங்கல் சீர் வரிசையில் முக்கியமாக இடம் பெறும். இவற்றோடு சாப்பாட்டுக்குரிய காய்கறிகள், மளிகை பொருட்கள், துணிமணி என அனைத்தும் இந்த சீரில் இடம்பிடிக்கும்.
‘தலைப்பொங்கல்' என்பது ‘தலை தீபாவளியைப் போன்ற சிறப்பு மிக்கது. பொங்கலுக்கு முன்பாக வரும் பதினைந்து, ஒன்பது, ஏழு என வசதிப்பட்ட ஒற்றைப்படை நாளில், சொந்த பந்தங்களை அழைத்துக் கொண்டு, பெண்ணைக் கட்டிக்கொடுத்திருக்கும் வாழ்க்கைப்பட்டிருக்கும் வீட்டுக்குச் சென்று இந்த சீர்வரிசையை கொடுப்பார்கள்.
விருந்து உபசரிப்பு
தனக்கு சீர் கொண்டு வந்திருக்கும் பெற்றோர்க்கும், சகோதரர்களுக்கும் கோழி அடித்தோ, கிடாக்கறி சமைத்தோ விருந்து கொடுத்து உபசரிப்பது மாப்பிள்ளை வீட்டாரின் வழக்கம். தலைப் பொங்கலில் இருந்து மூன்று பொங்கலுக்குத் தொடர்ச்சியாக பொங்கல் சீர் கொடுப்பது வழக்கமாக உள்ளது. தன் உடன் பிறந்தவளை கண் கலங்காமல் வைத்து வாழும் மாப்பிள்ளைக்கு காலம் பூராவும் பொங்கல் சீர் கொடுக்கும் வழக்கமும் சில ஊர்களில் இருக்கிறது. சிலர் பணமாகக் கூட கொடுப்பார்கள்.
தொட்டுத் தொடரும் பந்தம்
அண்ணன் தம்பிகளுடன் பிறந்து அவர்கள் கொடுக்கும் சீர் செனத்தியை அனுபவித்து பார்ப்பவர்களுக்குத்தான் அந்த ஆனந்தம் தெரியும். அண்ணன் தம்பிகள் இல்லாதவர்களுக்கு அவர்களின் அப்பாதான் சீர் சுமந்து வந்து கொடுத்துவிட்டுப் போவார். தமிழ்நாட்டில் காலம் காலமாக இந்தப் பழக்கம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.