அபுதாபியில் தமிழகத்தை நினைவூட்டிய 'கலை விழா'
அபுதாபி: அபுதாபி நண்பர்கள் குழுவின் சார்பில் கலை விழா கடந்த 10ம் தேதி நடைபெற்றது.
அபுதாபி நண்பர்கள் குழுவின் சார்பாக கடந்த 10ம் தேதி அன்று மாலை 5.30 மணி அளவில் இந்திய சமூக கலாச்சார மையத்தில் 6வது ஆண்டு விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு கலை விழா என்ற பெயரிடப்பட்டிருந்தது.
தலைப்பிற்கு ஏற்றார் போல் இயல், இசை, நாடகம் என்று முப்பெரும் விழாவாக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நம் கலாச்சார முறைப்படி குத்து விளக்கு ஏற்றி மங்களகரமாக தொடங்கி, வரவேற்புரை வழங்கி அனுசரணையாளர்கள் முறையாக கௌரவிக்கப்பட்டார்கள்.
பல இளம் சிறார்களுக்கு முதல் மேடை அமைத்து கொடுத்த பெருமையை அபுதாபி நண்பர்கள் குழுவின் அங்கத்தினர்கள் தட்டிச் சென்றனர். இயல், இசையில் நனைந்து கொண்டிருந்த வேளையில் திரு. கங்காதுரை அவர்கள் இயக்கிய "மாற்றம் வேண்டும்" என்ற நாடகம் அனைவருடைய கண்களிலும் புதிய மாற்றத்தை கொண்டு வரும் விதமாக இருந்தது. நிகழ்ச்சி இரவு 11 மணியளவில் இனிதே நிறைவடைந்தது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் அறுசுவை இரவு விருந்து வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் முடிவில் இயல், இசை மற்றும் நாடக நிகழ்ச்சிகளில் பங்குபெற்ற குழந்தைகள் மற்றும் பெரியவர்களை பாராட்டி பரிசுக் கோப்பைகளும், பதக்கங்களும் வழங்கப்பட்டன.