துபாயில் நடைபெற்ற இந்திய காட்டன் டெக்ஸ்டைல் கண்காட்சி
துபாய்: துபாயில் இந்திய காட்டன் டெக்ஸ்டைல் கண்காட்சி நவம்பர் 16 மற்றும் 17 ஆகிய இரு தினங்கள் டிரேடர்ஸ் ஹோட்டலில் நடைபெற்றது.
கண்காட்சியினை இந்திய கன்சல் ஜெனரல் அனுராக் பூஷன் திறந்து வைத்தார். அவர் தனது உரையில் அமீரகம் மற்றும் இந்தியா இடையே வர்த்தகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது போன்ற கண்காட்சிகள் தொடர்ந்து நடைபெற இந்திய வர்த்தக மற்றும் கண்காட்சி மையத்திற்கு இந்திய கன்சுலேட் உதவிகரமாக இருக்கும் எனக் குறிப்பிட்டார்.
ஷார்ஜா இந்திய வர்த்தக மற்றும் கண்காட்சி மைய இயக்குநர் ஜெனரல் ஸ்ரீபிரியா குமரையா இந்திய துணிகளின் மீது குறிப்பாக காட்டன் துணிகளின் மீது அமீரகம் அதிக ஆர்வம் கொண்டுள்ளது என்றார். நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இக்கண்காட்சிக்கு வந்திருக்கும் விற்பனையாளர்களுடன் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
டெக்ஸ்பிராசில் இணை இயக்குநர் ரவிக்குமார் உள்ளிட்ட பலர் உரை நிகழ்த்தினர்.
இந்தியாவைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இக்கண்காட்சியில் பங்கேற்றன. குறிப்பாக தமிழகத்தின் ஈரோட்டைச் சேர்ந்த ஆதித்யா எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் இக்கண்காட்சியில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
ஷார்ஜா இந்திய வர்த்தக மற்றும் கண்காட்சி மையம், காட்டன் டெக்ஸ்டைல்ஸ் எக்ஸ்போர்ட் புரமோஷன் கவுன்சில், இந்திய தூதரகம், மற்றும் கன்சுலேட் ஆகியவற்றின் ஆதரவுடன் இக்கண்காட்சியினை நடத்தியது.