வீறிட்டழுத அம்மா.. ஒன்னும் புரியாத வயசு... உயிர் எங்கே போகிறது?
எல்லா மரணங்களும் நம்மள யோசிக்க வைக்கிறது இல்லை. மனசுக்கு பிடிச்சவங்க ரொம்ப பெரியவங்க மரணிக்கின்ற சமயம்தான் ஏன் இந்த மரணம்? மரணம் என்ன செய்கிறது ஒரு உயிரை? மரித்துப்போன அவங்க எங்க போறாங்க? நாம் அவங்கள மறுபடி பாக்கவே முடியாதா அப்படின்னு ஒரு புரிதலும் இல்லாத குழப்பம் வந்து விடும்.
அதை ஏற்றுக்கொள்ளவே முடியாத ஒரு சோகம் கலந்த ஒரு விரக்தியில் தான் நமக்கு ஒரு எண்ணம் எழுந்து விடுகிறது. அது தான் உயிர் எங்கே போகிறது? நான் சந்தித்த என் இதயத்தை பாதித்த மரணங்கள் தான் இந்த உயிர் எங்கே போகிறது பதிவில மெல்ல மெல்ல பார்த்துக்கிட்டு இருக்கிறோம்.
இந்த வாரம் நாம பார்க்கப் போகிற பதிவு என் மனசை ஆழமா.. இல்லை ரொம்ப ரொம்ப ஆழமா பாதித்த ஒரு மரணம். பூப்போட்ட பாவாடை சட்டை போட்ட வயசு அது.. ரெட்டை ஜடை பின்னல் போட்டுக்கிட்டு வெட்கம் என்றால் என்ன என்று கொஞ்சம் அறியாத வயசு . சூரியன் விடைபெற மெல்ல மெல்ல கிளம்பி கொண்டிருந்த ஒரு அழகான சாயங்கால வேளை. நாங்கெல்லாம் சமத்தாக வீட்டு முற்றத்தில் விளையாடிகிட்டு இருந்தோம்.

மண்ணில் விளையாட்டு
அப்போ எல்லாம் பள்ளிக்கூடம் போய் விட்டு வந்ததும் ஓடி வந்து பார்க்க வீட்டில டிவி கிடையாது. எப்போதோ எங்கோ தூரமா ஒலிக்கிற ரேடியோ மட்டும்தான்.. ஸோ வீட்டுக்கு வந்தா விளையாட்டுதான்.. அடுக்கி வைத்து விளையாட எங்ககிட்ட பில்டிங் பிளாக்ஸ் கிடையாது, எங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் மண்ணில் விளையாடும் விளையாட்டு தான்.

சமையல் விளையாட்டு
நானும் அக்காவும் சேர்ந்து சமையல் பண்ற மாதிரி விளையாடுவதற்காக தேங்காய் சிரட்டை வச்சு விளையாடிக் கொண்டிருந்தோம். நான் ஏதோ வெளிய இலை எடுக்க போனேன். சமைக்க நல்ல கூட்டு வைக்கணும் இல்ல அதுக்கு தான். அக்கா "குழம்பு" செய்ய நான் "பொரியல்" தயார் செஞ்சுக்கிட்டு இருந்தேன். எப்போதும் அந்த காலத்தில எங்களுக்கு இதே விளையாட்டு தான். ஏனோ அது போர் அடிக்கவே இல்லை. எங்க ரெண்டு பேருக்கும்.

சோகச் செய்தி
அன்றைக்கும் அப்படி தான் வெகு சுவாரஸ்யமாக விளையாடிகிட்டு இருந்தோம். அப்போ கிரீச் அப்படின்னு ரொம்ப வேகமான ஒரு சத்தத்தோட ஒரு மோட்டார் வண்டி வந்து நின்னுச்சு. வேகமா ரெண்டு பசங்க வந்தாங்க. எல்லாம் நம்ம சொந்தக்கார பயலுக தான். என்ன செய்றது இப்ப மாதிரி அப்போ எல்லார்கிட்டயும் பேச தோணாது. நம்மையும் அறியாமல் ஒரு வெட்கம் வரும். வீட்டுக்கு யார் வந்தாலும் இந்தப் பக்கம் அவங்க வந்தா அந்தப் பக்கம் போறதுதான் அந்த வயசுல வழக்கம்.

அம்மாவுக்கு வந்த அழுகை
அதுவும் பசங்க வேற வந்துட்டாங்க. ஏன்னு நான் சொல்லவே வேண்டாம் உங்களுக்கு . நாங்க அப்படியே நழுவி போக எத்தனித்தோம். எப்பவும் கல கல னு சிரிப்போடு கையில் காபி டம்ளர் சகிதமாக உபசரிக்கும் அம்மா அதுவோடு மட்டும் நிறுத்துவங்களா என்ன. வயிறு முட்ட சாப்பாடும் போட்டு தான் வீட்டுக்கு அனுப்புவாங்க . ஆனா இன்னைக்கு சிரிப்பு சத்தத்திற்கு மாறா வழக்கத்துக்கு மாறா ஒரு ரொம்ப முரண்பாடா ஒரு சத்தம் கேட்டது.

ஏன் இந்த சோகம்
அது அம்மாவோட அழுகையா.. கூப்பாடா அல்லது கோபமா என்று எனக்கு புரியல. ஏன் கடவுளே இப்படி செஞ்ச? என் தங்கச்சி என்ன பாவம் செய்தா? இப்படி செய்து விட்டீர்களே! அப்படிங்கிற குரல் மட்டும் என் காதில் வந்து சுத்தியலால் அடிச்சமாதிரி இருந்தது. அதுக்கும் மீறிய ஒரு அழுகை அம்மா முகத்தில் இருந்து அப்படியே வெடிச்சிட்டு வந்துச்சு. "தம்பி சும்மா தானே சொல்ற?" அப்படின்னு அம்மா சொல்ல "எங்களுக்கு என்ன விளையாட்டா? இந்த விஷயத்தை வந்து இப்படி சொல்ல!" அப்படின்னு சொல்லிட்டு முகத்தை தொங்க போட்டுட்டு பசங்க திரும்பி போனாங்க.

ஏன் இந்த மரணம்
வீட்டுக்குள்ள வந்து எட்டிப் பார்த்த எங்களுக்கு அம்மா முகத்துல பொங்குற கண்ணீரையும் அம்மாவோட கண்ணில் ஈரத்தையும் தாங்க முடியல. எதுக்குமே கலங்காத அப்பா கல்லு மாதிரி பக்கத்துல நின்னுகிட்டு இருந்தாரு. பாவம் அவருக்கே அவரை சமாதானம் செஞ்சு கொள்ள நேரம் தேவைப்பட்டது. காலத்தை என்ன சொல்ல! கடவுளை தான் என்ன சொல்ல! கடவுளோட கணக்கு சில நேரங்களில் நமக்கு புரிகிறது இல்லை.
அப்போ எங்க அப்பாவுக்கு அந்த வயசுல அதை எப்படி எங்க கிட்ட சொல்ல அப்படின்னு சொல்ல தெரியாமல் எங்க அப்பா விக்கி நிக்கிறாரு. இப்ப அந்த விஷயத்தை உங்ககிட்ட எப்படி சொல்றது அப்படின்னு நான் விக்கி நினைக்கிறேன் .
(தொடரும்)
- இங்க்பேனா












Click it and Unblock the Notifications