வளமான வாழ்க்கைக்கு துணை நிற்பது சொந்தமா, சொத்தா?: துபாயில் நடந்த பட்டிமன்றம்
துபாய்: துபாயில் பொங்கல் விழாவையொட்டி ராயல் செஃப் நிறுனத்தின் ஆதரவுடன் டிடிஎஸ் இவென்ட்ஸ் சிறப்பு பட்டிமன்றம் நிகழ்ச்சியை 21.01.2016 அன்று மாலை நடத்தியது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
துபாயில் ஒவ்வொரு ஆண்டும் ஆலியா முகம்மது டிரேடிங் நிறுவனத்தின் ராயல் செஃப் தஞ்சாவூர் பொன்னி அரிசியின் சார்பில் பொங்கல் விழா சிறப்புடன் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் இந்த விழா வியாழக்கிழமை மாலை இந்தியப் பள்ளியின் புதுப்பிக்கப்பட்ட ஷேக் ராஷித் அரங்கத்தில் வெகு சிறப்புடன் நடைபெற்றது. துவக்கமாக குத்து விளக்கு ஏற்றப்பட்டது.

விழாவுக்கு ஆலியா முகம்மது டிரேடிங் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.எம். ஷேக் தாவூது தலைமை வகித்தார். டிடிஎஸ் இவென்ட்ஸ் நிறுவனத்தின் தலைவி முனைவர் ஜெயந்தி மாலா சுரேஷ் முன்னிலை வகித்தார்.
முனைவர் எம்.எம். ஷேக் தாவூது தனது தலைமை உரையில், தனது நிறுவனத்தின் ராயல் செஃப் தஞ்சாவூர் பொன்னி அரிசி, சக்தி நெய், நரசுஸ் காபி, பிரிமியர் வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்டவற்றை வாங்கி தனது வர்த்தகம் சிறப்பான வகையில் உயர்வடைவதற்கு உறுதுணையாக இருந்து வரும் தமிழர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த பொங்கல் விழா ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற புதிய பார்வை இதழின் ஆசிரியர் நடராசன் கடல் கடந்தும் தமிழர்களின் பெருமையை நிலைநாட்டி வரும் தமிழர்கள் ஏற்பாடு செய்துள்ள இந்த பொங்கல் விழாவிற்கு ஏற்பாடு செய்த அனைவரையும் பாராட்டுவதாக கூறினார்.
சுகி. சிவம் தலைமையில் வளமான வாழ்க்கைக்கு துணை நிற்பது சொந்தமா, சொத்தா என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடந்தது. இந்த பட்டிமன்றத்தில் மோகனசுந்தரம், விஜயசுந்தரி, மணிகண்டன், சுமதி, சண்முகவவேல் உள்ளிட்ட குழுவினர் பங்கேற்றனர். அனைவரும் நகைச்சுவையுடன் கூடிய கருத்துக்களை முன்வைத்து
அரங்கம் அதிரும் வகையில் செயல்பட்டனர். நள்ளிரவு நேரமானாலும் அனைவரும் சிறப்புடன் ரசித்தனர். இறுதியில் சொந்தமே என தீர்ப்பளிக்கப்பட்டது.
விழா மேடையில் கேக் வடிவில் பொங்கல் வைக்கப்பட்டது. விழாவில் வெஸ்டர்ன் ஆட்டோ நிறுவனத்தின் கமால், பவர் குரூப்பின் முஹம்மது ஹுசைன் உள்ளிட்ட பலர் கௌரவிக்கப்பட்டனர். கவிதா பிரசன்னா மற்றும் சந்திரா கீதாகிருஷ்ணன் அவர்களின் வழிகாட்டுதலில் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவில் சமூக சேவகர் கே. குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஆயிரக்கணக்கானோர் இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை லியாக்கத் அலி, தாஹா, பாலா, விஜயராகவன், பிரசன்னா, கீதாகிருஷ்ணன், சுந்தர், விஜயேந்திரன் உள்ளிட்ட குழுவினர் சிறப்புடன் செய்திருந்தனர்.
விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் ராயல் செஃப் தஞ்சாவூர் பொன்னி அரிசி, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது.












Click it and Unblock the Notifications