காவிரியில் தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடகா.. உச்ச நீதிமன்றத்தை நாடியது தமிழக அரசு..விரைவில் விசாரணை
டெல்லி: காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கோரி தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடகா அரசு தமிழ்நாட்டுக்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விட வேண்டும். ஆனால் பல சந்தர்ப்பங்களில் கர்நாடகா காவிரியில் இருந்து தண்ணீர் தருவது இல்லை. இதுதொடர்பாக நீண்டகாலம் சட்ட போராட்டங்கள் நடந்தன. இது ஒருபக்கம் இருக்க தமிழ்நாட்டில் காவிரி நீரை நம்பி விவசாயிகள் குறுவை சாகுபடி செய்து உள்ளனர். ஆனால் தமிழ்நாட்டுக்கு திறந்துவிட வேண்டிய நீரை கர்நாடக அரசு தர மறுக்கிறது.

இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார். இதற்கு மத்தியில் டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழக தமிழக அரசு சார்பில் நீர்வளத்துறை கூடுதல் செயலாளர் சந்தீப் சக்சேனா உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். தமிழ்நாட்டுக்கு கர்நாடக அரசு முழுமையான அளவில் தண்ணீர் திறக்கவில்லை என்றும் காவிரியில் இருந்து உரிய நீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் வலியுறுத்தினர்.
ஆனால் அதனை கர்நாடகா அரசு ஏற்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் தமிழக அரசு அதிகாரிகள் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். தமிழ்நாட்டுக்கு உரிய முறையில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என கர்நாடகா அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. இருந்தபோதிலும் கர்நாடகா தண்ணீர் திறந்து விடவில்லை.
எனவே காவிரி நீர் பங்கீட்டு பிரச்சினையில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதை தவிர வேறு வழி இல்லை என அண்மையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கோரி தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்க தொடர்ந்துள்ளது. அந்த மனுவில், ஆகஸ்டு மாதத்துக்கான எஞ்சியுள்ள நாட்களுக்கு தமிழகத்திற்கு தேவையான 24 ஆயிரம் கன அடி நீரை உடனடியாக திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தப்படுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications