நெருப்பே, ஆசை அடங்கியதா?
கள்ளமற்ற மழலைகள்
கருகித் துடித்ததை
எண்ணிப் பார்க்கவே
இதயம் பதைக்குதே!
வஞ்சமில்லா பிஞ்சுகள்
வதங்கி மடிந்ததை
நினைக்க நினைக்க
நெஞ்சம் வெடிக்குதே!
பள்ளிக்கு போய் வருகின்றோம்
என்று பெற்றவர்க்குப்
பாசத்துடன் சொல்லி
விடை பெற்றவரை
அள்ளிக் கொண்டு போன
செந்நெருப்பே,
உன் ஆசை அடங்கியதோ,
அழித்து முடித்த பின்னே!
நீக்கமற எங்கும்
கொழுந்து விட்டெரிந்து
நீ இந்தக் கொடுமையை
ஏன் செய்தாய்?
காக்க யாருமின்றி
கட்டியணைத்துக் கதறியும்
கருணையே இன்றி
ஏன் கருக்கினாய்?
துள்ளி விடைபெற்றுச்
சென்ற தம்பிள்ளைகள்
மீண்டும் இனி வீடு வந்து சேரார்
என்று சொல்லிச் சொல்லி
கதறியழும் பெற்றவரை
ஆற்றிடத்தான் உன்னால் முடிந்திடுமா?
(கவிதையாக்கம்: காமினி நடராஜசிங்கம்)
இந்தக் கவிதை வாசிப்பைத் தொடர்ந்து ஐபிசி வானொலியைத் தொடர்பு கொண்ட நூற்றுக்கணக்கான தமிழர்கள்தங்களது கண்ணீர் அஞ்சலியை செலுத்தினர். அவர்களது அஞ்சலி செய்திகளையும் இந்த வானொலிஒலிபரப்பியது.