சங்கரன்கோவில் ஆடித்தபசு காட்சி கண்டால் தம்பதியர் ஒற்றுமை அதிகரிக்கும் திருமணத்தடைகள் நீங்கும்
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆடித்தபசு நிகழ்ச்சிகள் அனைத்தும் கோயிலுக்குள் நடக்கின்றன. இதில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சங்கரன்கோவில்: ஆடித்தபசு இன்று சங்கரன்கோவில் சங்கரநாராயணர் ஆலயத்தில் கோவிலுக்குள்ளேயே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆடித்தபசு காட்சியை நேரில் தரிசிக்க முடியாவிட்டாலும் நேரலையில் ஒளிபரப்பாகும் காட்சியை தரிசனம் செய்தாலும் திருமணத்தடைகள் நீங்கும்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மிக முக்கியமான ஆலயங்களில் சங்கரநாராயணர் ஆலயம் தனிச்சிறப்பு வாய்ந்தது. இந்த ஆலயத்தில் சிவபெருமானும், மகாவிஷ்ணுவும் ஒன்றாக இணைந்து காட்சி தருகிறார்கள் என்பது மட்டும் அல்ல அந்த ஆலயத்தின் மகிமை, அவர்கள் ஒன்றாக காட்சி தர ஏற்பாடு செய்தவரே சிவபெருமானின் மனைவியும், மகாவிஷ்ணுவின் சகோதரியாக போற்றப்படும் அன்னை பார்வதி தேவிதான். அன்னை பார்வதி இங்கு கோமதிஅம்மனாக எழுந்தருளியுள்ளார் என்று கூறும் போது இந்த ஆலயத்தின் மகிமை கூடுகின்றது.
சங்கரன்கோவில் சங்கரநாராயணர் ஆலயம் காலசர்ப்ப தோஷம் போக்கும் ஸ்தலமாகவும், ராகு கேது தோஷம் நீக்கும் ஸ்தலமாகவும் விளங்குகிறது. செவ்வாய் தோஷத்தை நீக்கி திருமணத்தடை அகற்றும் ஸ்தலமாகவும் சங்கரன்கோவில் விளங்குகிறது . சங்கரநாராயணர் திருக்கோவில் ஆடி மாதத்தின் உத்திராட நாளில் சங்கரநாராயணர் கோமதி அம்மனுக்கும், சங்கன், பதுமன் ஆகியோருக்கும் காட்சியளித்த நாளை நினைவுகூரும் வகையில் இவ்விழா இன்று கொண்டாடப்படுகிறது.

கோவிலுக்குள் ஆடித்தபசு
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆடித்தபசு திருவிழா ஆண்டு தோறும் வெகு சிறப்பாக 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு விழா கடந்த 13ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சமுதாய மண்டகப்படியில் வைத்து திருவிழா நடத்த அனுமதிக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக கோயில் உள்பிரகாரத்தில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் மண்டகப்படிதாரர்கள் 50 பேர் மட்டும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

தேரோட்டம் ரத்து
தினசரியும் கோமதி அம்மன் அலங்கார ரூபினியாக எழுந்தருளி அருள்பாலிக்கிறார். திருவிழாவில் 9வது நாளான நேற்று தேரோட்டம் நடைபெற வேண்டும். கொரோனா பரவல் காரணமாக இரண்டாவது ஆண்டாக தேரோட்டம் நடைபெறவில்லை. கோயிலுக்குள் வைத்து, சுவாமி மற்றும் அம்பாளுக்கு அபிஷேக, அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

கோவிலுக்குள் தபசுக் காட்சி
ஆடித்தபசு திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தபசுக் காட்சி இன்று மாலை நடைபெறுகிறது.
வழக்கமாக ஆடித்தபசுக் காட்சி கோயிலுக்கு வெளியே தெற்கு ரத வீதியில் நடைபெறும். இதனைக் காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். ஆனால், நடப்பாண்டு இந்நிகழ்ச்சிகள் அனைத்தும் கோயிலுக்குள்ளேயே நடக்கின்றன.

சங்கரநாராயணர் காட்சி
ஊசி முனையில் ஒற்றைக்காலில் தவமிருக்கும் கோமதி அம்மனுக்கு இன்று மாலை 6 மணியளவில் ரிஷப வாகனத்தில் சுவாமி எழுந்தருளி சங்கரநாராயணராக காட்சியளிக்கிறார். பின்னர், இரவு 8 மணியளவில் யானை வாகனத்தில் எழுந்தருளி சங்கரலிங்க சுவாமியாக காட்சியளிக்கிறார்.

கோவிலுக்குள் அனுமதியில்லை
இன்று முழுவதும் உள்ளூர், வெளியூர் பக்தர்கள் கோயிலுக்குள் தரிசனம் செய்ய அனுமதிக்கக் கூடாது என மண்டகப்படிதாரர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே கோயிலுக்குள் பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை. இரு மண்டகபடி சமுதாயத்தைச் சேர்ந்த 100 பேர் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். உள்ளூர், வெளியூர் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.

தபசுக்காட்சி ஒளிபரப்பு
விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் கோவில் இணையதளத்திலும், உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. தபசுக் காட்சியை நேரடியாக காண முடியாதவர்கள் நேரலையில் கண்டு தரிசனம் செய்யலாம். விழாவையொட்டி, மாவட்ட கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் கலிவரதன் தலைமையில் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications