குட் நியூஸ்.. இனி மீண்டும் திருப்பூர் தென் திருப்பதியில் வழிபடலாம்.. 2 ஆண்டுகளுக்கு பிறகு அனுமதி
திருப்பூர்: திருப்பூரில் அமைந்துள்ள திருப்பதி ஏழுமலை கோயிலில் தரிசனத்திற்கு பக்தர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வனப்பகுதியின் நடுவே அமைந்துள்ள இந்த கோயிலில் மூலவராக வெங்கடாச்சலபதியும், உற்சவராக சீனிவாச பெருமாளும் பக்தர்களுக்கு அருபாளிக்கின்றனர்.
கொரோனா தொற்றையடுத்து இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய வனத்துறையினர் அனுமதியளித்துள்ளனர்.

இரண்டாண்டுகளுக்கு பிறகு
திருப்பூர் மாவட்டத்தின் உடுமைலையில் உள்ள நீலகிரி மலைத்தொடரின் அடிவாரத்தில் அமைந்திருக்கிறது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,000 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த கோயில் வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. கருடாழ்வார் இங்கு இறைவனை பார்த்தவாறு அமர்ந்திருக்கிறார். இக்கோயிலில் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பக்தர்கள் அதிக அளவில் வழிபட்டு வந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

புரட்டாசி மாதம்
இந்நிலையில் இந்த ஆண்டு வழிபாட்டிற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். வரும் 18ம் தேதி முதல் புரட்டாசி மாதம் தொடங்குகிறது. இந்த சனிக்கிழமைகளில் பக்தர்கள் அதிக அளவில் தரிசனத்திற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடாக பக்தர்கள் நடந்து வரும் வழிகளை வனத்துறையினர் சீரமைத்துள்ளனர். இக்கோயிலில் ஆண்டு தோறும் தேர்த்திருவிழா விமர்சையாக நடைபெறும்.

பக்தர்கள் வருகை
திருத்தேரில் மலையப்ப சுவாமிகள் ஸ்ரீதேவி-பூதேவியுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சிதருகிறார். அதேபோல சனிக்கிழமைகளில் இக்கோயிலில் பூஜை நடத்தப்பட்டாலும், புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்படுகிறது. இங்கு சுவாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் தமிழ்நாடு மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா என அண்டை மாநிலங்களிலிருந்தும் வருகின்றனர். இக்கோயில் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனச்சரகத்தில் அமைந்துள்ளதால் இந்த கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகின்றன.

பாதுகாப்பு பணியில் வனத்துறையினர்
இக்கோயில் வழிபட விரும்பும் பக்தர்களுக்கு தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. அதேபோல பாதுகாப்பு பணியில் வனத்துறையினருடன் காவல்துறையினரும் ஈடுபட்டுள்ளனர். சுவாமி தரிசனம் செய்வோர் அவல், அரிசி, வெல்லம் ஆகியவற்றை வைத்து வழிப்படுகின்றனர். தென் தமிழ்நாட்டில் மலைக்கோயில்களில் இந்த கோயிலும் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications