மார்கழி பிரதோஷம், அமாவாசை - டிசம்பர் 31 முதல் ஜனவரி 3 வரை சதுரகிரி மலைக்கு செல்ல அனுமதி
மார்கழி பிரதோஷம், அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர்: மார்கழி மாத பிரதோஷம் அமாவாசையை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு செல்ல, பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நீரோடைகளில் குளிக்க அனுமதி கிடையாது எனவும் இரவு நேரங்களில் கோயில் அமைந்துள்ள மலைப்பகுதியில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி கிடையாது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவில், சந்தனமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. சதுராசலம், சித்தர்கள் தேசம், சிவன்மலை, மூலிகைவனம் என்று பெரியோர்களால் போற்றப்படும் சதுரகிரி மலையில் கோயில் கொண்டுள்ளார், சுந்தர மகாலிங்கப் பெருமானார்.
மேற்குத் தொடர்ச்சி மலையின் தென் கோடியருகே மேற்பகுதி தட்டையான, சதுர வடிவிலான நான்கு மலைகள் உண்டு. நான்கு வேதங்களே சிவகிரி, விஷ்ணுகிரி, பிரம்மகிரி, சித்தர்கிரி என்ற பெயர்களில் மலைகளாகி நிற்க, அவற்றின் நடுவில் கம்பீரமாக அமைந்திருக்கிறது, சஞ்சீவிகிரி. இம்மலையே சதுரகிரி என்றனர் முன்னோர்கள். மூலிகைகள் நிரம்பிய மலையின் மேல் சிவபெருமான் வீற்றிருக்கிறார்.
சதுரகிரியை அகஸ்தியர் உள்ளிட்ட சித்தர்கள், இந்த மகாலிங்க மலையை சித்தர்கள் வாழும் பூமி என்கின்றனர். காய கல்ப மூலிகைகள் நிறைந்த வனப்பகுதியில், சுந்தர மகாலிங்க மூர்த்தியும் மலை உச்சியில் பெரிய மகாலிங்க மூர்த்தியும் கோயில் கொண்டுள்ளனர். சந்தன மகாதேவி சமேத சந்தன மகாலிங்கேஸ்வரரை தொழுதால், அனைத்து எண்ணங்களும் வாழ்வில் நிறைவேறும் என்கின்றனர் கோரக்கர் உள்ளிட்ட அனைத்து சித்தர்களும்.
இந்த ஆலயத்திற்கு வந்து மலையேறி சென்று ஏராளமானோர் சாமி தரிசனம் செய்வார்கள். வழக்கமாக அமாவாசை, பிரதோஷம், பவுர்ணமி ஆகிய நாட்களில் மட்டும் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் சில மாதங்கள் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் அவ்வப்போது வனப்பகுதியில் நிலவும் சூழ்நிலைக்கு ஏற்ப பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக வனப்பகுதியில் கனமழை பெய்து வருவதால் பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. மார்கழி மாத பௌர்ணமியில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் மார்கழி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு, வரும் 31ஆம் தேதி முதல் ஜனவரி 3ஆம் தேதி வரை, பக்தர்கள் மலை ஏறி சென்று, சாமி தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதனிடையே, நீரோடைகளில் குளிக்கவும் இரவு நேரங்களில் கோயில் அமைந்துள்ள மலைப்பகுதியில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி கிடையாது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.