பவித்ரமான தர்ப்பையினை அணிந்தால் சனி தோஷம் நீங்கும்!
அஸ்ட்ரோ சுந்தரராஜன்
சென்னை: சுப காரியம் அல்லது அசுப காரியம் எதுவாய் இருந்தாலும் அங்கே தர்ப்பை புல்லுக்கு முக்கியமான இடம் உண்டு
தர்ப்பைப் புல்லின் மகத்துவம்:
தர்ப்பைப் புல்லை பிராமணர்களிடமும்
நாட்டு மருந்து கடைகளிலும், கிரகணத்தின்போது கோயில்களிலும் பார்த்திருப்போம்.தர்ப்பை புல்லுக்கு இன்னொரு பெயர் 'குசா' என்பதாகும். இராமபிரானின் இரண்டாவது மகனின் பெயர் குசா. அவருடைய பெயரைக் குறிக்கும் அளவில் இந்தப் புல்லின் பெயரை வைத்துள்ளார்கள்.
புனிதமான தர்பை:
தர்ப்பையானது புனிதத்தன்மையை தருகின்றன. நமது உடலில் வெளியிலிருந்து உள்ளே புகும் தீமையைத் தடுக்கிறது.எனவேதான் நாம் எந்த ஒரு செயல் (வைதீககார்யங்கள்) செய்ய ஆரம்பிக்கும் போதும் தர்பத்தில் உட்கார்ந்து,கையிலும் தர்ப்பவித்ரத்தை அணிகிறோம்.
எந்த ஒரு புனிதச்செயல் செய்யும் நேரத்திலும் நமது சக்தி தடைபடாமலிருக்க நாம் கையில் தர்பத்தினாலான பவித்ரத்தை தரிக்கிறோம்.முழுமையாக அந்த வேலை பூர்தியாகும் வரை கழற்றாமலிருப்பது நம் செயலுக்கு உதவுகிறது பாணிணி முனிவர் கௌமுதியை எழுதும் போது "பவித்ர பாணியாக உட்கார்ந்து ஆலோசித்து எழுதினார்" என்று மஹாபாஷ்யத்தில் கூறப்படுகிறது.
தீய கதிர்களைத்தவிர்க்கும் தர்பை:
சந்திர,ஸூர்ய க்ரஹணகாலங்களில் வீடுகளில் பெரியவர்கள் தொன்று தொட்டு ஊறுகாய் போன்ற நீடித்துப்பயன்படுத்தும் உணவுபொருட்களில்(ஜாடி,பாட்டில்) தர்பையைக்கிள்ளி அதன் துண்டை உள்ளே போடுகிறார்கள்.ஏனெனில் வெளியிலே அந்த நேரத்தில் வரும் தீயகதிர்கள் வாயிலாக உணவுபொருட்களில் கெடுதல் ஏற்படாதவாறு தர்பை தடுக்கும் தன்மை வாய்த்தது.இவ்வாறு நமது மூதாதையர்கள் பயன்படுத்தி வரும் தர்பைக்கு பலப்பல விசேஷங்கள் உள்ளன. உடல் வலிமையும் புத்திகூர்மையும் கூட அவற்றால் ஏற்படும் என்று ஊகிக்க முடிகிறது.
தர்ப்பையும் விருத்திராசுரனும்:
விருத்திராசுரன் என்ற அசுரன், தேவர்களுக்கும், பூலோக உயிர்களுக்கும் பெரும் கொடுமைகள் புரிந்து வந்தான். இதனால் கோபங்கொண்ட தேவேந்திரன். தனது வஜ்ஜிராயுதத்தை பிரயோகித்து அவனை அழிக்க முயன்றும் பலனில்லை, அசுரன் மீண்டும் மீண்டும் தேவேந்திரனை போருக்கு அழைத்தான், திகைத்தான் இந்திரன். இதைக் கண்ட பிரம்மா, வஜ்ஜிராயுதத்தை தனது கமண்டல தீர்த்தத்தில் நனைத்து கொடுத்து இப்போது பிரயோகிக்குமாறு கூற தேவேந்திரனும் அவ்வாறே செய்தான்.
தீர்த்தத்தின் மகிமையால் பலம் பெற்ற வச்சிராயுதம் விருத்திராசுரனின் அங்கங்களை கண்ட துண்டமாக வெட்டியது. வஜ்ஜிராயுதத்தின் பலத்துக்கு காரணம் புனித தீர்த்தங்களே என்று அறிந்த விருத்திராசுரன், உலகிலுள்ள எல்லா தீர்த்தங்களுக்கும் சென்று, ரத்தம் வழியும் தனது உடலை நனைத்து தீர்த்தங்களின் புனிதத்தை மாசுபடுத்த முயன்றான். இத கண்ட பிரம்மா தீர்த்தங்களை எல்லாம் தர்ப்பை புட்களாக மாற்றி விட்டாராம்.
தர்பையின் உபயோகங்கள்:
தர்ப்பத்தினாலான ஜப ஆஸனம் (பாய்) மிகவும் விசேஷம். தர்பாஸனத்தில் அமர்ந்து செய்யும் பூஜை மற்றும் ஜெபங்களுக்கு பலமடங்கு சக்தி உண்டு.
கர்மாக்களின் துவக்கத்தில் கணவன் ஸங்கல்பம் செய்யும் போது மனைவி கணவனை நேரிடையாக தொட்டுக் கொள்வதில்லை. தர்ப்பங்களினால் தான் கணவனை ஸ்பரிக்கச் சொல்லியுள்ளது. தர்ப்பங்கள் தான் அவர்களுக்கு அங்கே இணைப்பாக உபயோகப் படுத்தப்படுகிறது.
க்ரஹண காலங்களில் (சூர்ய மற்றும் சந்திர) இல்லத்தில் ஏற்கெனவே பக்குவமாக்கி இருக்கும் பதார்த்தங்களிலும் குடிநீரிலும், தர்ப்பங்களைப் போட்டு வைத்தால் எந்த தோஷமும் அவற்றுக்கு ஏற்படாது.
ஹோமங்களில் பரிஸ்தரணம், ஆயாமிதம், ப்ரணீதா போன்றவைகளிலும் தர்ப்பங்கள் இடம் பெற்றுள்ளன, ச்ராத்த மற்றும் தர்ப்பண காலங்களில் ஸ்தல சுத்தி, ஆஸனம், கூர்ச்சம் போன்றவைகள் தர்ப்பங்களினால்தான் செய்யப்படுகின்றன.
குறிப்பாக தர்ப்பங்களில் தர்ப்ப கூர்ச்சத்தினால்தான் (அல்லது தர்ப்ப ஸ்தம்பம்) ப்த்ருக்களை ஆவாஹணம் செய்யச் சொல்லியுள்ளது.
கலச ஸ்தாபனம் போதும். மாவிலை கொத்து தேங்காயுடன் தர்ப்ப கூர்ச்சம் வைப்பது இன்றியமையாதது.
கல்யாணத்தில் கல்யாண பெண்ணிற்கும், அதே மாதிரி உபநயனனத்தில் விடுவிற்கும் இடுப்பில் தர்ப்பங்களினாலான கயிற்றை மந்த்ர பூர்வமாக கட்டும் ப்ரயோகமும் இருந்து வருகின்றது.
உபயோகப்படுத்தும் தர்ப்பங்களின் நுனி உடையாமல் இருக்க வேண்டும். ப்ரயோகங்களில் நுனி இல்லாத தர்ப்பங்கள் (ஆஸனத்தைத் விர) உபயோகப்படுவதில்லை.
தர்ப்ப முஷ்டியிலிருந்து (கட்டிலிருந்து) நமக்குத் தேவையான தர்ப்பங்களை எடுத்துக் கொள்ளும் போது மேலிருந்து (நுனி பக்கம்) எடுக்கக்கூடாது. மேலிருந்து எடுப்பது வசதியாக இருந்தாலும் அவ்வாறு செய்வதைத் தவிர்க்க வேண்டும். கட்டின் அடியிலிருந்து தான் உருவ வேண்டும்.
தர்ப்பங்களைக் கீழே வைக்கும் போது (அல்லது சேமித்து வைக்கும் போது) அதன் நுனி மேற்கு அல்லது தெற்கு நோக்கி இருக்கக்கூடாது. கிழக்கு அல்லது வடக்கு நோக்கித்தான் நுனி இருக்கும்படி வைக்க வேண்டும்.
தர்ப்ப முஷ்டியையோ அல்லது தர்ப்பங்களையோ வெறும் தரையில் வைக்கக்கூடாது.
தர்பையை காலில் மிதிபடும்படியாக வைக்கக்கூடாது. காலில் மிதிபட்ட தர்பையை உபயோகிக்ககூடாது.
தர்ப்பங்களை விரல் நகத்தினர் கிள்ளக்கூடாது.
உபயோகத்திற்காக சேமித்து வைத்திருக்கும் தர்ப்பங்களை அலட்சியமாக பார்க்கக் கூடாது.
தர்ப்பையின் மகத்துவம் :
தர்பையில் செய்த பவித்ரம் நம்மை சுத்தமாக்குகின்றது. கர்மா நன்கு நடைபெற நமக்கு நல்ல பாதுகாப்பாகவும் செயல்படுகின்றது. பவித்ரபாணி சுத்தமானவன். இதில் சந்தேகம் வேண்டாம். தர்பையை கையில் தரித்துச் செய்த ஜபம், தானம், ஹோமம் ஆகியவற்றின் புண்யத்திற்கு கணக்கில்லை என்கிறார்கள் மகரிஷிகள்.
மேலும் 'இந்த்ரனின் கையில் வஜ்ரம் போலவம், பரமேஸ்வரனின் கையில் சூலம் போன்லவும், விஷ்ணுவின் கையில் சக்ராயுதம் போலவும், பிராஹ்மணன் கையில் தர்பை உள்ளது. பூதங்கள், பிசாசங்கள், ப்ரேதங்கள் வேறு ப்ரஹ்மராக்ஷசர்கள் என்ற எல்லோரும் ப்ராஹ்மணர் கைவிரலில் உள்ள தர்பையை பார்த்தால் தலைகுனிந்தவர்களாய்த் தூரத்தில் செல்லுகின்றனர்.
ஜோதிடத்தில் தர்ப்பை:
ஜோதிடத்தில் தர்ப்பைபுல்லுக்கு காரகராக மூன்று கிரகங்களை கூறலாம். தர்ப்பையின் புனிதத்தன்மையின் காரணமாக குருவையும் பித்ருகாரியங்களுக்கும் பயன்படுவதாலும் மருத்துதன்மையின் காரணமாகவும் சனியை காரகராகவும் புல்வகை தாவரங்களுக்கு கேது காரகர் எனவும் கூறலாம்.
ஆன்மீக உச்சத்தில் இருப்பவர்கள் அனைவருக்கும் குரு சனி மற்றும் கேதுவின் சேர்க்கை இருக்கும்.
அதிகப்படியான பயன்பாடு பித்ருகாரியங்களில் வருவதால் தர்ப்பையின் முதன்மை காரகராக சனியை கூறலாம். மேலும் புகழ்பெற்ற சனைஸ்வர பகவான் பரிகார ஸ்தலமான திருநள்ளாரு அருள்மிகு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் தர்ப்பை காட்டில் அமைந்ததால் இப்பெயர் ஏற்ப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
திருநள்ளாறு கோயிலுக்கு ஒரு காலத்தில் ஆதிபுரி என்றும், சிவனை வழிபட்டு பிரம்மா பரிகாரம் பெற்றதாக ஸ்தலபுராண வரலாறு சொல்கிறது. பிரம்மதேவர் பூஜித்த சிவனுக்கு 'தர்ப்பாரண்யேஸ்வரர்' என்பது பெயராகும். இங்குள்ள ஸ்தல விருட்சம் தர்ப்பை ஆகும
சுவாமி : தர்ப்பாரண்யேஸ்வரர்.
அம்பாள் : பிராணேஸ்வரி, பிராணாம்பிகை, போகமார்த்த பூண்முலையாள்.
தீர்த்தம் : நள தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், வாணி தீர்த்தம்.
தலவிருட்சம் : தர்ப்பை.
தலச்சிறப்பு : சனி பார்வையில் உள்ள பக்தர்கள் இத்தலத்திற்கு சென்று எள்ளுடன் கூடிய தீபம் ஏற்றி அன்னதானம் செய்தால் சனிபகவான் அருள் பரிபூரணமாக கிட்டும்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த தர்ப்பையின் மகத்துவம் அறிந்து அதை போற்றி பாதுகாக்கவேண்டிது நம் அனைவரின் கடமையாகும்.
தர்ப்பைப்புல் எல்லா இடங்களிலிலும் வளராது. மிகவும் தூய்மையான இடங்களில்தான் வளரும்.
தர்ப்பைப்புல் கதிர்வீச்சினை எதிர்க்கும் சக்தி கொண்ட தாவரமாகும். எனவே கிரஹன காலங்களில் உணவு பொருட்களில் கதிர்வீச்சின்றி காக்க தர்ப்பையை பயன்படுத்துகிறோம்.
தர்ப்பைப்புல் இருக்கும் இடத்தில் துர்சக்திகளின் நடமாட்டம் இருக்காது.