விஜயதசமி வித்யாரம்பம் - அரிசியில் அச்சரம் எழுதி கல்வியை துவங்கிய குழந்தைகள்
விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு கோவில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் நெல், பச்சரிசி ஆகியவற்றில் அட்சரம் எழுதி குழந்தைகள் கல்வியை தொடங்கினர்.
சென்னை: நவராத்திரியின் முக்கிய விழாவான விஜயதசமியை முன்னிட்டு கோவில்களிலும், பள்ளிகளிலும் வித்யாரம்பம் நடைபெற்றது. சரஸ்வதி ஆலயத்திலும், கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலிலும் ஏராளமானோர் நெல், பச்சரிசியைக் கொண்டு அச்சரம் எழுதி குழந்தைகள் தங்களின் கல்வியை தொடங்கினர்.
நாடு முழுவதும் நவராத்திரி பண்டிகை கடந்த 9 நாட்களாக கொண்டாடப்பட்டது. பல ஊர்களிலும் கொலு வைத்தும் பிரம்மாண்ட சிலைகளை வைத்தும் மக்கள் வழிபட்டனர். ஒன்பதாம் நாளான நேற்றைய தினம் ஏராளமானோர் தங்களின் வீடுகளிலும் தொழில் நிறுவனங்களிலும் சாமி படங்களை அலங்கரித்தும் தேங்காய், பூ, பழங்கள் வைத்து வழிபட்டனர்.

இன்றைய தினம் பத்தாம் நாள் விஜயதசமி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. விஜயதசமிக்கு பல சிறப்புகள் இருக்கின்றன. அகில உலகையும் ஆட்டி படைத்த மகிஷாசுரனை அழிக்க தேவியானவள் துர்க்கையாக அவதரித்தாள். 9 நாட்கள் நீடித்த போர், விஜயதசமியன்று முடிவுக்கு வந்தது. தீய சக்தியான மகிஷாசுரனை துர்கா தேவி வதம் செய்தாள். நல்ல சக்தியின் வெற்றி திருவிழாவாக விஜயதசமி பண்டிகைக் கொண்டாடப்படுகிறது.
சூதாட்டத்தில் ஆட்சி, அதிகாரம், நாடு உள்பட சகலமானதையும் இழந்த பாண்டவர்கள் 12 ஆண்டு வனவாசம், ஓராண்டு மறைவு வாழ்க்கை முடிந்து, விஜயதசமியன்றே மீண்டும் அனைத்து ஆயுதங்களையும் தாங்கள் இழந்த பலம் ஆகியவற்றையும் பெற்றனர் என்று கூறப்படுகிறது.
விஜயதசமி நாளில் கல்வி, கலைகள் என இந்நாளில் எது தொடங்கினாலும் ஜெயமாக முடியும் என்பது நம்பிக்கை. குழந்தைகளின் கை பிடித்து, பரப்பி வைத்திருக்கும் நெல்லில் 'அ' என்று எழுத கற்றுக் கொடுப்பது 'வித்யாரம்பம்' எனப்படுகிறது.
நவராத்திரியின் நிறைவு நாளான இன்று விஜயதசமி நன்னாளில் வித்யாரம்பம் என்றழைக்கப்படும், குழந்தைகளுக்கான கல்வி கற்பிக்கும் பணியை பெற்றோர் முன்னிலையில், வேதவிற்பன்னர்கள் துவக்கி வைத்தனர்.
மழலை குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும் பாட்டு, இசைக் கருவிகள் பயிற்சி, நடன பயிற்சி, பிறமொழி பயிற்சி, புதிதாக ஒரு தொழிலை கற்றுக்கொள்வது ஆகியவற்றை இந்த நாளில் தொடங்கினால் சரஸ்வதி தேவியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்று நம்பிக்கை.
இதனையொட்டி சென்னை மயிலாப்பூரில் பல்வேறு கோவில்கள், பள்ளிகளில் வித்யாரம்பம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.. ஏராளமான பெற்றோர் தங்களின் குழந்தைகளை அழைத்து வந்து பச்சரிசியில் அச்சரம் எழுதிப் பழக்கினர்.
கோவை சித்தாபுதூரில் உள்ள ஐயப்பன் கோவிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. பச்சரிசி, வெற்றிலை உள்ளிட்ட பூஜை பொருட்களோடு பெற்றோர் குழந்தைகளோடு கோவிலுக்கு வந்து, வித்யாரம்பம் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இந்தியாவில் தனி சன்னதி கொண்ட சரஸ்வதி கோயில்கள் ஒரு சில மட்டுமே உள்ளது. இதில் பிரசித்தி பெற்ற கூத்தனூர் மஹா சரஸ்வதி அம்மன் திருக்கோயில் தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியம் பூந்தோட்டத்தில் அமைந்துள்ளது. இந்த கோயில் புலவர் ஒட்டக்கூத்தரால் வணங்கி வழிபாடு செய்யப்பட்டு பாடல் பாடப் பெற்ற தலமாகும். இந்த ஆலயத்தில் விஜயதசமி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஏராளமான பள்ளி மாணவர்கள் நோட்டு, பேனாவை வைத்து வணங்கினர். சிறு பிள்ளைகளை அழைத்து வந்த பெற்றோர்கள் பச்சரிசியில் அச்சரம் எழுதி பழக்கினர்.
Recommended Video
கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, பெற்றோர் மற்றும் குழந்தைகள் முன்னெச்சரிக்கையாக இருக்க கோவில் நிர்வாகம் அறிவுரை வழங்கியுள்ளது. விஜயதசமி தினமான இன்று கோவில்கள் திறக்கப்பட்டுள்ளதால் ஏராளமானோர் இன்று மகிழ்ச்சியுடன் சாமி தரிசனம் செய்தனர்.












Click it and Unblock the Notifications