அச்சன்கோவில் அரசர் தர்மசாஸ்தாவிற்கு மஹோத்சவ விழா - திரு ஆபரண பெட்டியை தரிசித்த பக்தர்கள்
சபரிமலை ஐயப்பனுக்கு மண்டல பூஜையின் போது தங்க அங்கி அணிவிக்கப்படுவது போலவே, அச்சன்கோவில் தர்மசாஸ்தாவான ஐயப்பனுக்கும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு விஷேச பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்த
செங்கோட்டை: அச்சன்கோவில் தர்மசாஸ்தாவுக்கு மண்டல மஹோத்சவ விழாவின் போது அணிவிக்கப்படும் விலை உயர்ந்து ஆபரணங்கள் அடங்கிய பெட்டி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று தென்காசிக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பயபக்தியுடன் தரிசனம் செய்தனர்.
பரசுராமர் பூமி என்று சொல்லப்படும் கேரளாவில், அவரால் உருவாக்கப்பட்ட ஐயப்பன் கோவில்கள் ஐந்து. அவற்றில் அச்சன்கோவில் தர்மசாஸ்தா கோவில். சபரிமலையில் ஐயப்பன் பிரம்மச்சாரியாகவும், ஆரியன்காவு கோவிலில் அன்னை புஷ்கலா தேவியுடன் தம்பதி சமேதராகவும் பக்தர்களுக்கு காட்சியளித்து வரும் ஐயப்பன், அச்சன்கோவிலில் அரசராக, தர்மசாஸ்தாவாக அருளாசி வழங்கி வருகிறார்.
செங்கோட்டையில் இருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் தமிழக கேரளா மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ளது அச்சன்கோவில் தர்மசாஸ்தா கோவில். ஐயப்பனின் ஆறுபடைவீடுகளில் மிகவும் முக்கியமானது இக்கோவில். சபரிமலை ஐயப்பனுக்கு டிசம்பர் மாதத்தில், மண்டல பூஜை நடைபெறுவது போலவே, அதே நாளில் இங்கும் தர்மசாஸ்தாவுக்கு மண்டல மஹோத்சவ விழா வெகு விமரிசையாக நடைபெறும்.
மண்டல பூஜையின் போது சபரிமலை ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்படுவது போலவே, அச்சன்கோவில் தர்மசாஸ்தாவான ஐயப்பனுக்கும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு விஷேச பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு மண்டல மஹோத்சவ விழா இன்று காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழா வரும் டிசம்பர் 26ஆம் தேதி வரை நடக்கிறது.
மண்டல மஹோத்சவ விழா நடைபெறும் நாட்களில் தர்மசாஸ்தா ஐயப்பனுக்கும், பூரணபுஷ்கலா அம்பாள் மற்றும் காவல் தெய்வமான கருப்பனுக்கும் விலை உயர்ந்த நகைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இதையொட்டி, பலகோடி ரூபாய் மதிப்புடைய தங்கம், வைரம், கோமேதகம், வைடூரிய ஆபரணங்கள் மற்றும் தங்க வாள் அடங்கிய திருவாபரண பெட்டி கேரள மாநிலம் புனலூர் அரசு கருவூலத்தில் இருந்து எடுத்து வரப்பட்டது. பின்னர் அங்குள்ள கிருஷ்ணர் கோவில் வளாகத்தில் பொதுமக்கள் தரிசனத்திற்காக வைக்கப்பட்டது.
இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில், தங்க வாள் ஐயப்பன் உபயோகித்ததாக ஐதீகம். அதனால் தான், இந்த தங்க வாளின் எடையானது இடத்திற்கு இடம் வேறுபடும் என்று பக்தர்களால் நம்பப்படுகிறது.
தங்க வாள் உள்பட ஆபரணங்கள் அடங்கிய திருவாபரண பெட்டி பின்னர், நேற்று காலை செண்டை மேளம் முழங்க புனலூரில் இருந்து புறப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அங்கிருந்து புறப்பட்ட திருவாபரண பெட்டி, ஒற்றைக்கல், தென்மலை, கழுதுருட்டி, ஆரியங்காவு, எடப்பாளையம், கோட்டைவாசல், செங்கோட்டை, இலஞ்சி வழியாக பிற்பகல் 2 மணியளவில், தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோவிலுக்கு வந்தடைந்தது.
கோவில் முன்பாக திருவாபரண பெட்டி வைத்திருந்த வாகனம் நிறுத்தப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிர் வேட்டு மற்றும் மேள தாளங்கள் முழங்க வரவேற்பு அளித்தனர். பின்னர் பக்தர்களும் பொதுமக்களும் வரிசையாக ஆபரண பெட்டியை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர்.
முன்னதாக செங்கோட்டை பேருந்து நிலையம் முன்பாக அமைந்துள்ள வெற்றி விநாயகர் கோவில் முன்பு ஆட்டோ ஓட்டுநர்கள், சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள், பொதுமக்கள் சார்பாக திருவாபரண பெட்டிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் பிற்பகல் 3.15 மணியளவில் காசி விஸ்வநாதர் கோவிலில் இருந்து புறப்பட்ட திருவாபரண பெட்டி, இலஞ்சி, செங்கோட்டை, பண்பொழி, மேக்கரை வழியாக மீண்டும் அச்சன்கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.
இன்று கொடியேற்றத்துடன் தொடங்கிய மண்டல மஹோத்சவ விழாவில், சிறப்பு பூஜைகளும், அன்னதானமும் நடைபெற்றது. விழாவின் 3ஆம் நாள் முதல் 5ஆம் நாள் வரை உற்சவபலியும், 6, 7, 8 ஆம் நாட்களில் கருப்பன் துள்ளல் நிகழ்ச்சியும், 9ஆம் நாள் தேரோட்டமும், 10ஆம் நாளில் ஆராட்டு விழாவும், முக்கிய நிகழ்வான 11ஆம் நாளில் மண்டல பூஜையும் நடைபெறவுள்ளது.