அக்னி நட்சத்திரம் 2021: நோய்களில் இருந்து தப்பிக்க தண்ணீர், நீர் மோர் தானம் செய்யுங்கள்
மதுரை: அக்னி நட்சத்திர காலத்தில் தண்ணீர், நீர் மோர், விசிறி உள்ளிட்ட பொருட்களை தானம் செய்வதன் மூலம் கொப்புளம், அம்மை, அக்கி போன்ற கோடை கால நோய் பாதிப்புகளில் இருந்து தப்பிக்கலாம் என ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா பரவல் காலத்தில் கோடை கால நோய்களும் தீவிரமடையும் நோய் பாதிப்புகளில் இருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும் என்றும் ஜோதிட ரீதியாக கோடை காலத்தில் ஏற்படும் நோய்களுக்கு என்ன காரணம் என்றும் அதற்கான பரிகாரத்தையும் பார்க்கலாம்.
சூரியன் சித்திரை மாதம் மேஷ ராசியில் நுழையும் போது உச்சமடைகிறார். உச்சமடைந்த சூரியனின் கதிர்கள் நம்மை சுட்டு பொசுக்குகிறது. கார்த்திகை நட்சத்திரத்தின் அதிபதி சூரியன், அதிதேவதை அக்னி. சித்திரை மாதம் பரணி நட்சத்திரத்தின் மூன்றாம் பாதம் தொடங்கி ரோகிணி நட்சத்திரம் 1 பாதம் வரை சூரியன் பயணிக்கும் போது நெருப்புக்கு இணையான வெப்பத்தை சூரியன் கக்குவதால் அக்னி நட்சத்திரம் என்கின்றனர்.
அக்னி நட்சத்திரம் இன்று முதல் தொடங்கி விட்டது. இன்று மே 4 முதல் 28வரை இனி வெயில் வாட்டி எடுக்கும். தலையில் படும் நேரடி வெயிலினால் மூளை நரம்புகள் பார்வை நரம்புகள் போன்றவை பாதிக்கப்பட்டு பித்தம் அதிகரித்த நிலையில் ஒற்றை தலைவலி மற்றும் பார்வை கோளாறுகள்,முடி கொட்டுதல் ஏற்படுகின்றது. வெயில் காலத்தில் கோடை கால நோய்களான வேனல் கட்டி, அம்மை, கண் பாதிப்புகள் ஏற்படும்.
எப்பத்தான் கைய நீட்டுவாங்க.. காத்திருக்கும் நாய்கள்.. சைகை காட்டியதும் பாய்ச்சல்தான்
நோய்களின் மூலம்
கோடையில் ஏற்படும் நோய்களுக்கு முக்கூட்டு கிரகங்களான சூரியன்+புதன்+சுக்கிரன் ஆகிய மூன்று கிரங்களோடு செவ்வாயும் சேர்ந்து அதிக விளைவுகளை ஏற்படுத்தினாலும் அனேக வியாதிகளுக்கு சுக்கிரனே காரணமாக அமைந்துள்ளது. தற்போது மேஷ ராசியில் சூரியன் சஞ்சரிக்கிறார். ரிஷப ராசியில் ராகு, புதன், சுக்கிரன் இணைந்திருக்க இன்னும் சில தினங்களில் சூரியனும் இந்த கூட்டணியுடன் இணைந்து விடுவார். இந்த கிரகங்களின் கூட்டணியால் மக்களுக்கு பலவித நோய்கள் ஏற்படுகின்றன.
கோடை கால நோய்கள்
சரும நோய்களுக்கு சுக்கிரன்தான் காரகம். கோடை நோய்களை தவிர்க்க சுக்கிரனின் அம்சமான சுத்தமான குடிநீரை நிறைய குடித்து வந்தாலே பல பல வியாதிகளை தவிர்த்துவிடலாம் என ஆயுர்வேதமும் மருத்துவ ஜோதிடமும் கூறுகிறது. சுக்கிரனை காரகமாக கொண்ட இளநீரை கோடை காலத்தில் அதிகம் குடிக்கலாம்.
சரும நோய்கள்
கொரோனா பரவல் பாதிப்பு பலரது மன அழுத்தத்திற்கு காரணமாக உள்ளது. சந்திரன் மனதிற்கு காரகர். மன அழுத்தம் ஏற்பட்டால் சருமம் வறட்சியடைகிறது. இதனால் தோல்நோய்கள் எளிதாக ஏற்படுகிறது. தூக்கக் குறைபாடும் ஏற்படுகிறது. எனவே கோடை காலத்தில் அதிக அளவில் தண்ணீர் பருகவேண்டும். இயற்கையான பழ ஜூஸ்களைக் குடிக்கலாம்.
சூரியனை வணங்கலாம்.
கோடை வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்பை தணிக்க வேப்பிலை, மஞ்சள் கொண்டு வீட்டை தூய்மைப்படுத்தவேண்டும்.
உஷ்ணநோய் பாதிக்காமல் இருக்க, அரிசி மாவினால் சூரிய நவகிரக கோலமிட்டு, 'அஸ்வத் த்வஜாய வித்மஹே! பாஸ ஹஸ்தாய தீமஹி! தன்னோ சூர்ய ப்ரசோதயாத்!' என சூரிய காயத்ரீ சொல்லி வழிபடுவது சிறப்பு. பாஸ்கராய வித்மஹே! மஹத் யுதிகராய தீமஹி! தன்னோ ஆதித்ய ப்ரசோதயாத் என்று கூறி சூரியனை வழிபட பாதிப்புகள் நீங்கும்.
விலங்குகள் பறவைகளுக்கு தண்ணீர்
ஏழைகள், அந்தணர்கள் இயலாதவர்களுக்கு விசிறி, காலணி, குளிர்ந்த நீர், மோர், இளநீர், பானகம், தயிர்சாதம் கொடுப்பது விசேஷம். முடிந்தால் பறவைகள், ஆடு மாடு போன்ற விலங்குகளுக்கும் வீட்டு வாசல் மொட்டை மாடியில் குடிக்க தண்ணீர் வைக்கலாம்.
அம்மன் தரிசனம்
அக்னி நட்சத்திர காலத்தில் தான தருமம் செய்வதோடு முருகனையும், அன்னை மீனாட்சியையும் வழிபடலாம். பரணி நட்சத்திரத்திற்கு உரிய தேவதையான துர்க்கையையும், கார்த்திகை நட்சத்திரத்திற்கு உரிய அக்னி தேவன்,ரோகிணி நட்சத்திரத்திற்கு உரிய பிரம்மாவையும் வழிபடலாம். முருகன், சிவன் அக்னியின் அம்சம். மேலும் சீதளா தேவியை வணங்குவதால் அம்மை போன்ற நோய்கள் வராமல் தடுக்கப்படும். இந்த கால கட்டத்தில் கோவிலுக்கு செல்ல முடியாது என்பதால் வீட்டிலேயே வணங்கலாம்.