ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் கஜேந்திரனுக்கு மோட்சம் அளித்த நம்பெருமாள்
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு கஜேந்திர மோட்சம் நடைபெற்றது. கோவிலில் கைங்கரியம் செய்து வரும் ஆண்டாள் யானைக்கு மோட்சம் அளித்தார் நம்பெருமாள்.
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் சித்ரா பவுர்ணமி தினத்தை முன்னிட்டு கஜேந்திர மோட்சம் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. ஆண்டாள் யானையை கஜேந்திரனாக கருதி மோட்சம் அளித்தார் நம்பெருமாள். பெருமாள் சார்பில் ஆண்டாள் யானைக்கு சந்தனம் மற்றும் சடாரி மரியாதை ஆகியவை வழங்கப்பட்டன.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சித்திரை மாதம் நடைபெறும் நம்பெருமாள் கோடை திருநாள் வெளிக்கோடை, உள்கோடை என தலா 5 நாட்கள் வீதம் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டிற்கான நம்பெருமாள் வெளிக்கோடை திருநாள் கடந்த 17ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி வரை 5 நாட்கள் நடைபெற்றது.
வெளிக்கோடை திருநாள் 22 ஆம் தேதி தொடங்கியது. வெளிக்கோடை திருநாளின் நிறைவு நாளான நேற்று இரவு 7 மணிக்கு உற்சவர் நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு வெளிக்கோடை நாலுகால் மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார். அங்கு புஷ்பம் சாத்துப்படி கண்டருளினார். பின்னர் அங்கிருந்து உள்கோடை மண்டபத்திற்கு இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு சென்றார். அங்கிருந்து இரவு 9 மணிக்கு வீணை வாத்தியத்துடன் புறப்பட்டு இரவு 10 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானம் சென்றடைந்தார்.
ரெம்டெசிவர் உயிர்காக்கும் மருந்தா? உண்மையும் கட்டுக்கதையும்!
சித்ராபவுர்ணமி அன்று ஆண்டு தோறும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் உற்சவர் நம்பெருமாள் காவிரி அம்மாமண்டபம் படித்துறைக்கு வந்து ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளுவார். மாலையில் புராண சம்பவத்தை சித்தரிக்கும் வகையில் கஜேந்திர மோட்சம் நிகழ்ச்சி காவிரி ஆற்றுக்குள் நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா பரவலை முன்னிட்டு ஸ்ரீரங்கநாதர் ஆலயத்திற்குள்ளேயே கஜேந்திர மோட்சம் நடைபெற்றது.
நம்பெருமாள்
கஜேந்திர மோட்சம் என்பது பெருமாளான விஷ்ணு, முதலையின் பிடியில் சிக்கிய கஜேந்திரன் என்னும் யானைக்கு மோட்சம் அளித்த பாங்கை கூறும் ஒரு உற்சவம். சித்ரா பவுர்ணமி அன்று ஸ்ரீரங்கத்தில் மிகவும் விமர்சையாக கொண்டாடப்படும் இந்த உற்சவத்தின்போது, எம்பெருமான் அம்மாமண்டபம் படித்துறைக்கு வந்து யானைக்கு மோட்சம் அளிப்பார்.
பாகவத புராணம்
கஜேந்திர யானையாக தற்போது கோவிலில் கைங்கரியம் செய்து வரும் ஆண்டாள் யானைக்கு மோட்சம் அளிப்பதாக நிகழ்வு நடக்கும். இந்த கஜேந்திர மோட்சமானது பாகவத புராணத்தில் 8 ஆவது ஸ்கந்தத்தில் வரும் பகுதி. இதை பரீட்ஷித்த மன்னருக்கு ஸ்ரீசுகர் அருளினார்.
உயிருக்கு போராடிய கஜேந்திரன்
கஜேந்திரன் என்னும் பெயர் கொண்ட யானை துமதா என்னும் வனத்தில் வாழ்ந்து வந்தது. அந்த துமதா வனத்தை வருணபகவான் திரிகூடமலை என்னும் இடத்தில் உருவாக்கினார். கஜேந்திரன் தனது யானை கூட்டத்தின் தலைவனாகவும் விளங்கியது.ஒரு நாள் தாகம் தணிக்க தனது யானை கூட்டத்துடன் நீர்நிலையை நோக்கி சென்றது. குளத்தில் இருந்த தாமரையை பறிக்க போன போது அந்த குளத்தில் வாழ்ந்து வந்த ஒரு முதலை கஜேந்திரனின் கால்களை பற்றியது. முதலையின் வாயில் அகப்பட்ட கால்களுடன் உயிருக்கு போராடிய கஜேந்திரனை மற்ற யானைகள் காப்பாற்ற முயன்று தோல்வியுற்றன.
கஜேந்திரனுக்கு மோட்சம்
தனது இறுதி காலம் நெருங்குவதை உணர்ந்த யானை, ஒரு தாமரை மலரை தனது தும்பிக்கையால் பற்றி வான் நோக்கி ஆதிமூலமே என பெருமாளை மனமுருகி வேண்டியது. தனது பக்தனின் துயர் துடைக்க விரைந்து வந்த விஷ்ணு, சுதர்ஷன சக்கரத்தால் முதலையின் தலையை துண்டித்து யானையை விடுவித்து மோட்சம் அளித்தார். இதில் யானையாக கூறப்பட்ட கஜேந்திரன் தனது பூர்வ ஜென்மத்தில் அரசன் இந்திரதுய்மனாக நாட்டை ஆண்டு வந்தார். இவர் ஒரு சிறந்த விஷ்ணு பக்தனாக திகழ்ந்தார். அகந்தை அவரது கண்களை மறைக்கவே அகஸ்திய முனிவரின் சாபத்தால் யானையாக பிறப்பெடுத்து, பின் இறைவனால் அகந்தை ஆணவம் அழிக்கப்பட்டு, மோட்சம் அடைந்தார்.
முனிவர் கொடுத்த சாபம்
முதலையின் பிடியில் இருந்த கஜேந்திரன், விஷ்ணுவை நோக்கி துதித்த பாடல், கஜேந்திர ஸ்துதியாக போற்றப்படுகிறது. இது சஹஸ்ரநாமத்தில் முதல் ஸ்லோகம். முதலையாக சாபம் பெற்றது ஒரு கந்தர்வன். ஒரு முறை முனிவர் தேவலா அவரை காண வந்தார். இரு வரும் சேர்ந்து நீராடினர். முனிவர் சூரியநமஸ்காரம் செய்கையில் விளையாட்டாக கந்தர்வன், அவரது கால்களை இழுத்தார். இதில் கோபமடைந்த முனிவர், முதலையாக பிறப்பாய் என சாபமிட்டார்.
காவிரி கரையில் சாப விமோசனம்
தன் தவறை உணர்ந்த கந்தர்வன் சாப விமோசனம் வேண்டினான். பிறவியின் முடிவில் கஜேந்திரன் கால்களை பிடிக்க, விஷ்ணுவால் சாப விமோசனம் பெறுவாய் என கூறினார். அதன்படி கந்தர்வனும் அரசனும் முறையே முதலையாகவும், யானையாகவும் பிறவியெடுத்து தங்களது சாப விமோசனத்தை பெற்றனர். இந்த நிகழ்வு ஸ்ரீரங்கம் காவிரிக் கரையில் நடைபெற்றது.
ஆண்டாள் யானைக்கு மரியாதை
அதை நினைவுக்கூரும் வகையில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி அன்று ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் படித்துறையில் கஜேந்திர மோட்சம் நடை பெறும். இந்த ஆண்டு கொரோனா தடுப்பு நடைமுறைகளினால் பெருமாள் காவிரியாற்றுக்கு வரவில்லை. கோவில் வளாகத்திற்குள்ளேயே புறப்பாடு நடைபெற்றது. நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு கருட மண்டபத்தில் எழுந்தருளினார். மாலையில் சம்பிரதாய நிகழ்ச்சியாக ஆண்டாள் யானை அங்கு வரவழைக்கப்பட்டு பெருமாள் சார்பில் அதற்கு சந்தனம் மற்றும் சடாரி மரியாதை ஆகியவை வழங்கப்பட்டன. பக்தர்களின்றி கோவில் பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் மட்டும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.