சபரிமலை ஐயப்பன் பிரசாதம் 6 நாட்களில் ரூ.5 கோடிக்கு விற்பனை.. இருவழிப்பாதையில் பக்தர்கள் அனுமதி
சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் வருகை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இருவழிப்பாதையை திறக்க தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது.
சபரிமலை: ஐயப்பனை காண வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அப்பாச்சிமேடு, நீலிமலை வழியாகவும் பக்தர்களை அனுமதிக்க தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது. கடந்த 6 நாள்களில் சபரிமலையில் அரவண பாயாசம், அப்பம் ஆகியவை மட்டும் 5 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது.
கார்த்திகை மாதம் மாலை அணிந்து கடுமையான விரதமிருந்து காடு, மலை தாண்டிச் செல்லும் சபரிமலை யாத்திரை என்பது பக்தர்களின் மனதுக்கு உற்சாகத்தையும் உடலுக்குப் பலத்தையும் அளிக்கக்கூடிய ஆன்மீக சுற்றுலாவாக உள்ளது.
ஐயப்பனைத் தரிசிக்க உலகெங்கும் இருந்து பக்தர்கள் பல வழிகளில் வந்தாலும், அவர்கள் சபரிமலைக்குச் செல்வது பெரிய பாதை, சிறிய பாதை என்ற இருவழிகளில்தான். உடலில் பலமும், போதுமான நேரமும் இருப்பவர்கள் பெரிய பாதையைத் தேர்ந்தெடுத்து பயணத்தைத் தொடர்கிறார்கள். மற்றவர்கள் சிறிய பாதையைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.
எருமேலியில் ஆரம்பித்து சபரிமலை வரை உள்ள 48 மைல் தூரம், பெருவழிப்பாதை எனப்படுகிறது. பம்பையிலிருந்து ஆரம்பித்து சபரிமலை வரையில் உள்ள 7 கி.மீ தூரம் சிறிய பாதை எனப்படுகிறது.
எருமேலி அடைந்த பக்தர்கள் அங்கு தர்மசாஸ்தா ஆலயத்துக்கு முன்பு பேட்டை துள்ளி வணங்குவார்கள். அப்போது வாவர் ஸ்வாமியை வணங்கி, மலைமீது ஏறிச்செல்ல அனுமதி பெறுவார்கள். அங்கிருந்து தொடங்கும் சபரிமலை யாத்திரை பேரூர் தோடு, காளைகட்டி, அழுதாநதி, அழுதாமலை, கல்லிடும் குன்று, இஞ்சிப்பாறைக் கோட்டை, முக்குழி தாவளம், கரிவலந்தோடு, கரிமலை ஏற்றம், கரிமலை இறக்கம், பெரியானை வட்டம், சிறியானை வட்டம் போன்றவற்றைக் கடந்து பம்பையின் அடிவாரத்தைச் சென்றடையும்.
பம்பைக்கு வந்து சேரும் பக்தர்கள், அங்கு நதியில் புனித நீராடிவிட்டுதான் மலையேற தொடங்குவர்.
இங்கிருந்து தொடங்குவதுதான் சிறிய பாதைப் பயணம். பம்பையில் இருந்து தொடங்கும் சிறிய வழிப்பாதையும் பலரால் விரும்பப்படுகிறது. நோயாளிகள், முதியவர்கள், குழந்தைகள் போன்றவர்களுக்கும் இந்தப் பாதையே எளிதாகவும் இருக்கிறது.
சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக நவம்பர் 15ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. நவம்பர் 16ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த பக்தர்கள் தினமும் 30 ஆயிரம் பேரை தரிசனத்திற்கு அனுமதிக்க தேவஸ்தானம் நிர்வாகம் முடிவு செய்த நிலையில், மழை காரணமாக கடந்த சில நாட்களாக குறைந்த அளவிலான பக்தர்களே வருகை தந்தனர். தற்போது மழை குறைந்திருப்பதால் பக்தர்களின் வருகை அதிகரித்து வருகிறது.
சபரிமலை ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்வது ஏன் தெரியுமா - இருமுடி தத்துவம்
தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களில் இருந்து அதிகளவில் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். காலையில் நடை திறக்கப்பட்ட 3 மணி நேரத்திலேயே சுமார் 5,000 பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்தனர். பக்தர்களின் வருகை அதிகரித்து வருவதால் கடந்த 6 நாள்களில் சபரிமலையில் அரவண பாயாசம், அப்பம் ஆகியவை மட்டும் 5 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது.
சபரிமலை யாத்திரை வழக்கமாக நீலிமலை, அப்பச்சி மேடு, சபரிபீடம் வழியாகத்தான் பெரும்பாலான பக்தர்கள் செல்வார்கள். கொரோனா காரணமாக இந்த வழிப்பாதை வழியே பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அப்பாச்சிமேடு, நீலிமலை வழியாகவும் பக்தர்களை அனுமதிக்க தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது.
வழக்கமாக கார்த்திகை மாதத்தில் நீலிமலையும் அப்பச்சி மேடும் சபரிபீடமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களால் நிரம்பி வழியும் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு குறைவான பக்தர்களே தரிசனம் செய்தனர். நடப்பாண்டு தினசரி 30ஆயிரம் பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 26ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.