#காலபைரவாஷ்டமி - கால பைரவரை வணங்கினால் கவலைகள் நீங்கும் திருமணத் தடைகள் அகலும்
நவகிரகங்களும், 12 ராசிகளும் பைரவரின் உடம்பில் அடக்கம் என்பதால் பைரவரை வழிபட்டால் நிச்சயம் உடனே கைமேல் பலன்கள் கிடைக்கும். இவரின் அருள் இருந்தால் அஷ்ட சித்தியும் கைகூடும் என்பது நம்பிக்கை.
மதுரை: பைரவர் என்றால் பக்தர்களின் பயத்தை நீக்குபவர் என்று பொருள். காலத்தின் கடவுளான கால பைரவர் தலை விதியை மாற்றக்கூடிய ஆற்றல் கொண்டவர். சிவபெருமானின் அம்சமாக பைரவர் கருதப்படுகிறார். காசி நகரின் காவல் தெய்வம் இவர். நவ கிரகங்களையும், நட்சத்திரங்களையும் கட்டுப்படுத்துபவர் இவர்தான். கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி காலபைரவாஷ்டமியாகக் கடைபிடிக்கப்படுகிறது.
காலத்தின் கடவுளான கால பைரவர் தலை விதியை மாற்றக்கூடிய ஆற்றல் கொண்டவர். சிவபெருமானின் அம்சமாக பைரவர் கருதப்படுகிறார். காசி நகரின் காவல் தெய்வம் இவர். நவ கிரகங்களையும், நட்சத்திரங்களையும் கட்டுப்படுத்துபவர் இவர்தான்.
பைரவரை வழிபட்டால் நிச்சயம் உடனே கைமேல் பலன்கள் கிடைக்கும். இவரின் அருள் இருந்தால் அஷ்ட சித்தியும் கைகூடும் என்பதை உணர்ந்ததால் சமீபகாலமாக சிவ ஆலயங்களில் பைரவர் சன்னதியில் மக்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. சனீஸ்வரரின் குரு பைரவர் என்பதால், பைரவரை வணங்கினால், சனிபகவான் மகிழ்ந்து நமக்கு அதிக துன்பங்களைத் தரமாட்டார். எனவே நாம் சனிக்கிழமைகளில் பைரவரை வணங்கினால் சனி பகவானால் உண்டாகும் இன்னல்கள் எல்லாம் உடனே நீங்கும்.
திருக்கார்த்திகை தீபம், காலபைரவாஷ்டமி கைசிக ஏகாதசி - கார்த்திகை மாத விஷேச நாட்கள்
கார்த்திகை தேய்பிறை அஷ்டமி
காலபைரவர் அவதரித்த கால பைரவாஷ்டமி நாளில் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டால் எல்லாவித கஷ்டங்களும் நீங்கி சகல சௌபாக்கியங்களும் பெறுவார்கள் என்பது நம்பிக்கை. கார்த்திகை 11ஆம் தேதியன்று நவம்பர் 27ஆம் தேதி சனிக்கிழமை அனைத்து சிவாலயங்களிலும் கால பைரவாஷ்டமி வெகு விமர்சையாகக் கொண்டாடப்படும்.
பைரவருக்கு சிறப்பு யாகங்கள்
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் சதுர்சஷ்டி பைரவர் யாகம் நடைபெற உள்ளது. 64 பைரவர் யாகத்துடன் சொர்ண ஆகார்ஷண பைரவர் கால பைரவர் ஹோமமும் நடைபெறுகிறது. காசி பைரவர் ஆலயம், இலுப்பைக்குடி சொர்ணாகர்ஷண பைரவர் ஆலயம், சீர்காழி சட்டைநாதர் ஆலயம், வாஞ்சியத்தில் யோக பைரவர் சந்நிதி, புதுவை இடையார் பாளையம் சொர்ணாகர்ஷண பைரவர் ஆலயம் ஆகிய இடங்களில் பைரவருக்கான ஸ்ரீ ருத்ர ஹோமம், ஸ்ரீ பைரவர் ஹோமம் போன்றவை நடைபெறும்.
காவல் தெய்வம்
பைரவர் அவதரித்த கால பைரவாஷ்டமி நாளில் அவரை வணங்குவது, சிறப்பு பூஜைகள், யாகங்களில் கலந்து கொண்டால் சகல வித செல்வங்களும் கிடைக்கும். சொர்ண கமல ரேகை அமைந்திருக்கும் சொர்ணாகர்ஷண பைரவ மூர்த்தியை வணங்குவது இன்னும் சிறப்பானது.
எப்படி வணங்குவது
ராகு கேதுவை முப்புரி நூலாக அணிந்து இருக்கும் பைரவ மூர்த்தி மழு, பாசம், சூலம், தண்டம் ஏந்தி காண்பவரை மெய்சிலிர்க்கச் செய்யும் வடிவம் கொண்டவர். நம்பினோர்க்கு சாந்த வடிவமானவர். பைரவரின் உடம்பில் நவக்கிரகங்களும், அனைத்து ராசிகளும் அடங்கியுள்ளன. மேஷ ராசிக்காரர்கள் இவர் தலையினைப் பார்த்து கும்பிட்டால் தோஷம் தீரும். ரிஷபம் கழுத்து, மிதுனம் தோல் புஜம், கடகம் மார்பு, சிம்மம் வயிறு, கன்னி குறி, துலாம் தொடை, விருச்சிகம் முட்டி, தனுசு மகரம் முட்டியின் கீழ்பகுதி, கும்பம் கனுக்கால், மீனம் பாதம் ஆகிய பகுதிகளை பார்த்து கும்பிட்டால் தோஷம் தீரும்.
பைரவருக்கு நைவேத்தியம்
அபிசேகப்பிரியான சிவபெருமானின் அம்சம் என்பதால், பைரவருக்கு சந்தன அபிஷேகம் மிகவும் உகந்தது. வாசனை திரவியங்களான புனுகு, அரகஜா, ஜவ்வாது, கஸ்தூரி, கோரோசனை, குங்குமப்பூ. பச்சை கற்பூரம் ஆகியவையும் அபிசேகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. பால், இளநீர், தேன் ஆகியவற்றால் அபிஷேகம் செய்து, பீடத்தில் சந்தனம், குங்குமம் வைத்து சிகப்பு அரளி மலர்களால் அர்ச்சனை செய்து, கிழக்கு முகமாக அமர்ந்து தினம் 1008 முறை மந்திரம் கூறி வணங்க வேண்டும். சுண்டல், வடை, பாயசம், சர்க்கரைப் பொங்கல், நிவேதனம் செய்ய வேண்டும்.
தலைவிதி மாறும்
21 அஷ்டமி நாளில் பைரவரை வணங்கிய எவரும் வாழ்வில் துன்பத்தை அடைவதே இல்லை என்பது ஐதீகம். எனவே துன்பப்படும் எல்லா மக்களும் கால பைரவாஷ்டமி நாளில் பைரவருக்கு வில்வம் அல்லது செவ்வரளி மாலை சூட்டி, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடலாம். தேங்காயில் மூன்று கண்கள் இருக்கும் தேங்காய் மூடியில் ஐந்து எண்ணெய்களை ஊற்றி விளக்கிடுவது சிறப்பு.
திருமணம் கை கூடி வரும்
பைரவர் ஜெயந்தியை முன்னிட்டு தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் ஆயிரம் நன்மைகள் செய்யும் அஷ்ட கால பைரவருக்கு ஆயிரம் கிலோ விபூதியால் அபிஷேகம் நடைபெற உள்ளது. 6 சனிக்கிழமைகளில் 6 எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் தடைப்பட்ட அனைத்து காரியங்களும் நிறைவேறும். தடைப்பட்ட திருமணம் கைகூடும். குடும்ப ஒற்றுமை நிலைக்கும். ஞாயிற்றுக்கிழமைகளில் ராகுகால நேரத்தில் பைரவரை வணங்க வேண்டும். அதனால் உடனே நன்மை உண்டாகும். பில்லி, சூனியம், ஏவல் அகலும், திருமணம் கைகூடும்.