கஷ்டம் தீர்க்கும் கால பைரவர் #காலபைரவாஷ்டமி
காலபைரவர் மனிதர்களின் கஷ்டங்களையும், கடன் தொல்லைகளையும் போக்குபவர். இவர் பயத்தையும் போக்குபவர்.
சென்னை: வாழ்க்கையில் எதைக் கண்டாலும் பயம் என்று கூறுபவர்கள் வணங்க வேண்டிய தெய்வம் கால பைரவர். அச்சம் போக்கி மனதில் தைரியத்தை அளிப்பவர். கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு ஜென்ம அஷ்டமி ஆகும். பைரவருக்குப் தேய்பிறை அஷ்டமியில் பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும்.
தேய்பிறை அஷ்டமி தினத்தை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி அன்று பைரவர் வழிபாடு நடத்தப்படுகிறது. ஒருவரின் உண்மையான கோரிக்கைகளை நம்பிக்கையுடன் பைரவரிடம் வேண்டும்போது 30 தினங்களுக்குள் நிறைவேறுகிறது.
சிவ ஆலயங்களில் ஈசான மூலையில் தெற்கு நோக்கு நின்ற காவல் இருப்பவர் பைரவர். இன்றைக்கு பைரவர் வழிபாடு அதிகரித்து வருகிறது. தேய்பிறை அஷ்டமி, வளர்பிறை அஷ்டமி நாட்களிலும், ஞாயிறு மாலை ராகு காலத்திலும் பைரவரை வழிபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
காவல் தெய்வம்
சிவன் கோயில்களில் இரவு பூஜை முடிந்த பின் சன்னிதிகளைப் பூட்டி சாவியைக் கால பைரவர் காலடியில் வைத்து வீடு செல்வார்கள். மறுநாள் அதிகாலையில் அந்தச் சாவிகளை எடுத்து சன்னிதி திறந்து பூஜைகள் செய்யத் தொடங்குவர். அந்த அளவுக்குத் திருட்டுப் பயம்கூட இன்றி வாழ்ந்தனர்.
காக்கும் கடவுள்
அமாவாசை மற்றும் பெளர்ணமி ஆகிய திதிகளுக்கு அடுத்த எட்டாம் நாளான அஷ்டமி திதியன்று கால பைரவரை வணங்க உகந்த நாட்களாகும். அன்றைய தினம் கால பைரவருக்கு அபிஷேகம், அர்ச்சனை ஆகியவற்றைச் செய்யலாம். கால பைரவரை வணங்கினால் உடைமைகள்கூடக் களவு போகாது என்பது ஐதீகம்.
செவ்வரளி பூக்கள்
ஸ்ரீ பைரவருக்குப் தேய்பிறை அஷ்டமியில் இலுப்பை எண்ணை, விளக்கு எண்ணை, தேங்காய் எண்ணை, நல்லஎண்ணை, பசு நெய் இவற்றினை தனித்தனி தீபமாக அகல் விளக்கில் ஏற்றி வழிபட எண்ணிய காரியங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம். ஆறு தேய்பிறை அஷ்டமிகளில் பைரவரை சிவப்பு நிற அரளியால் வழிபட்டால் நல்ல மக்கள் செல்வங்களைப் பெறலாம்.
வழக்குகளில் வெற்றி
அஷ்டமி திதியில் ஆயில்யம், சுவாதி, மிருகசீரிஷம், நட்சத்திர தினங்களிலும் பைரவரை வழிபட்டால் உத்தியோகத்தில் மதிப்பும், பதவி உயர்வும் கிட்டும். தொழிலில் லாபம் கிட்டும். சனி பிரதோஷத்தன்று பைரவருக்கு தயிர் அன்னம் படைத்து வழிபட்டால் வழக்குகளில் வெற்றி கிட்டும்.
பயம் போக்கும் பைரவர்
தை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை தொடங்கி ஒவ்வொரு செவ்வாய் தோறும் பைரவரை வணங்கி கால பைரவ அஷ்டகம் படித்து வந்தால் எதிரிகள் அழிந்து, கடன்கள் தீர்ந்து, யம பயம் மட்டுமில்லாது எவர் பயமுமின்றி நீண்டநாள் வாழலாம்.
பலன் தரும் பைரவர்
வாழ்க்கையில் வறுமை வராமல் காத்து செல்வச் செழிப்பை வழங்குபவர். ஸ்வர்ணாகர்ஷண பைரவரை வடக்கு திசை நோக்கி அமர்ந்து வழிபடுவது சிறப்பு. திருவாதிரை நட்சத்திரத்தில் வழிபடுவதால் சிவனது அருள், செல்வம் கிட்டும், தாமரை மலர் மாலை, வில்வ இலை மாலை போடலாம். ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால நேரத்தில் பைரவருக்கு 11 நெய் தீபம் ஏற்றி விபூதி அல்லது ருத்திராபிஷேகம் செய்த, வடைமாலை சாற்றி சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
வறுமை நீக்கும் பைரவர்
நம்பிக்கையுடன், பக்தியுடன் சொர்ணாகர்ஷண பைரவர் படத்தை வீட்டில் வைத்து தினந்தோறும் தூப தீபம் காட்டி வழிபட்டு வருவதுடன் தேய்பிறை அஷ்டமி திதியில் திருவிளக்கு பூஜை செய்து பலவிதமான மலர்களைக் கொண்டு பூஜித்து வணங்கி வந்தால் வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படும். வியாபாரிகள் கல்லாப் பெட்டியில் சொர்ண ஆகர்ஷண பைரவர், பைரவி சிலை அல்லது படத்தை வைத்து பூஜித்து வர கடையில் வியாபாரம் செழித்து செல்வம் பெருகி வளம் பெறுவார்கள். நீண்ட நாட்கள் வறுமையில் இருந்தவர்கள் வளம் பெறுவார்கள்.