கார்த்திகை தீபத்திருவிழா - லட்சதீபங்களில் ஜொலித்த மயிலை கபாலீஸ்வரர், மதுரை மீனாட்சி அம்மன் ஆலயங்கள்
கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்திலும், மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்திலும் லட்ச தீபம் ஏற்றப்பட்டது.
சென்னை: கார்த்திகை தீபத் திருவிழா தமிழகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டது. மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்திலும் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் ஆலயத்திலும் லட்சதீபம் ஏற்றப்பட்டது.
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் திருக்கார்த்திகையை முன்னிட்டு கோயிலில் லட்சதீபம் ஏற்றப்பட்டதை தொடர்ந்து கோயில் வளாகம் முழுவதும் விளக்குகளால் ஜொலித்தது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கார்த்திகை உற்சவ விழா நவம்பர் 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 23ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து தினமும் காலை , மாலை வேளைகளில் பஞ்சமூர்த்திகள் கோவில் வளாகத்தில் உள்ள ஆடி வீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளித்தனர்.
இந்நிலையில் இன்று திருக்கார்த்திகையை முன்னிட்டு கோவில் முழுவதும் லட்சதீபம் ஏற்றப்படும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் கோயில் பணியாளர்கள் பக்த சபையினர் மற்றும் பக்தர்கள் என ஏராளமானோர் பங்கேற்று பொற்றாமரைக்குளம், அம்மன் , சுவாமி சன்னதிகள் உள்ளிட்ட ஆலயம் முழுவதும் அகல்விளக்குகள் மூலம் லட்சதீபங்களை ஏற்றினர்.இதனால் கோயில் வளாகம் முழுவதும் விளக்கொளியில் ஜொலித்தது.
தொடர்ந்து சித்திரை வீதியில் அம்மன் சன்னதி முன்பாகவும், சுவாமி சன்னதி முன்பாகவும் என இரண்டு இடங்களில் சொக்கப்பனை ஏற்றப்பட்டது, உபய தங்கரத உலா மற்றும் உபய திருக்கல்யாணம் ஆகிய விசேங்கள் எதுவும் நடைபெறாது என திருக்கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார்த்திகை தீபத்தை முன்னிட்டு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் லட்ச தீபம் ஏற்றப்பட்டது. ஏராளமான பக்தர்கள் இன்று கார்த்திகை தீபம் பண்டிகை முன்னிட்டு சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் வந்து விளக்கேற்றி சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
இந்த கார்த்திகை தீபம் அன்று கோயிலில் வந்து விளக்கு ஏற்றி, சாமி கும்பிடுவதால் குடும்பங்களில் நல்ல விஷயங்கள் சுபகாரியங்கள் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இங்கு சாமி தரிசனம் செய்து விளக்கு ஏற்றுவதால் ஒரு மன நிம்மதி கிடைக்கும் அங்கு திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோவிலில் விளக்கேற்றும் நேரத்தில் இங்கு நாங்கள் விளக்கேற்ற வந்துள்ளோம், இதனால் மனதிற்கு ஒரு சந்தோஷமும் மன நிம்மதியும் கிடைப்பதாக பக்தர்கள் தெரிவித்தனர்.
இரண்டு ஆண்டுகளாக இந்த கொரோனாவால் வெளியே வரமுடியாத சூழ்நிலை இருந்தது, இன்றைய தினம் அண்ணாமலையார் சன்னதி முன்னால் கார்த்திகை தீபம் ஏற்றி கொண்டாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. வருங்காலங்களில் கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் விடுபட கடவுளின் அனுக்கிரகம் இருக்க வேண்டும் என்றும் பக்தர்கள் கபாலீஸ்வரரிடம் வேண்டிக்கொண்டனர்.
கார்த்திகை தீப திருநாளில் விரதமிருந்து விளக்கேற்றுங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்கும்