கார்த்திகை கடைசி சோம வார விரதம் : நோய் தீரும் ஆரோக்கியம் செல்வ வளம் அதிகரிக்கும் ருத்ர ஹோமம்
கார்த்திகை மாதம் கடைசி சோமவாரத்தை முன்னிட்டு வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரருக்கு சிறப்பு பூஜை நடைபெற உள்ளது.
சென்னை: கார்த்திகை சோமவாரத்தில் சிவபெருமானை வேண்டி நடைபெறும் ஹோமங்களிலும் பூஜைகளிலும் பங்கேற்று வழிபட்டால் கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். மேலும் நோய்கள் நீங்கும் உடல் ஆரோக்கியமடையும் என்பது நம்பிக்கை. இன்று கார்த்திகை மாத கடைசி சோம வாரம் இந்த நாளில் விரதம் இருந்து சிவ ஆலயம் சென்று வழிபட்டால் உடல் ஆரோக்கியத்தோடு நீங்க செல்வ வளமும் பெரும் என்பது ஐதீகம். ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரருக்கு ருத்ர ஹோமத்துடன் விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளது.
சோமன் என்றால் சந்திரன், அவனுக்கு உரிய தினம் திங்கள் கிழமை. அந்தக் கிழமையை சோம வாரம் என்று குறிப்பிடுவர். பன்னிரண்டு மாதங்களில் கார்த்திகை மாத சோம வாரம் மிகச் சிறப்பானது. இந்த தினங்களில் சிவபெருமானை வழிபட்டு விரதம் இருந்தால் பெருமான் மிகவும் மகிழ்ந்து, திருப்தியடைந்து வேண்டும் வரம் எல்லாம் தந்திடுவார் என்பது முன்னோர் சொன்ன வழி. காரணம், இந்த சோம வார விரதச் சிறப்பை, சிவபெருமானே பார்வதி தேவிக்குச் சொல்லுவதாய் புராணங்களில் கூறப்பட்டுள்ளன
சிவபெருமானுக்குரிய விரதங்களில் மிகவும் விசேஷமானது கார்த்திகை சோம வார விரதம். கார்த்திகை மாதத்தின் திங்கள் கிழமைகளில் இவ்விரதம் கடைபிடிக்கப்படுகின்றது. கார்த்திகை சோம வார விரதம் அனுஷ்டித்தால் அந்த சிவனுக்கே பிடித்தமானவராகி விடுவோம்.
சிறப்பு யாகங்கள்
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் வருகிற 16.12.2019 திங்கள்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரருக்கு ருத்ர ஹோமத்துடன் விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து மாலை 5.00 மணிக்கு சிவலிங்க ரூபமாக உள்ள 468 சித்தர்களுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற உள்ளது.
சிவனுக்கு பிடித்த விரதம்
கார்த்திகை சோம வார விரதம் அனுஷ்டித்த சந்திரன் தனது நோய் நீங்கி சிவனின் தலையிலேயே இடம் பெற்றார். சந்திரனுக்கு அருள்புரிந்த சிவன், தனது முடிமேல் சூடிக்கொண்டு சந்திரசேகரர் என்ற பெயரை பெற்றார். பெண்கள் சௌபாக்கியத்துடன் திகழவும், கணவனுக்கு மேன்மைகள் உண்டாகவும், கணவன் மனைவி ஒற்றுமை ஏற்படவும், நோய்நொடிகள் இல்லாமல் இருக்கவும், இந்த விரதத்தைக் கடைப்பிடிக்கலாம்.
உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும்
இத்தகைய சிறப்புகள் வாய்ந்த கார்த்திகை சோமவாரத்தில் சிவபெருமானை வேண்டி நடைபெறும் ஹோமங்களிலும் பூஜைகளிலும் பங்கேற்று வழிபட்டால் கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். மேலும் நோய்கள் நீங்கும் உடல் ஆரோக்கியமடையும், ஒருவர் தன் வாழ்வில் செய்த பாவங்கள் அகலும், மணப்பேறு, மகப்பேறு, வாக்கு, கல்வி, செல்வம் யாவும் கிட்டும், நோய்கள் நீங்கும், அகால மரண பயமின்மை என எல்லா நற்பலன்களையும் அடையலாம்.
ஸஹஸ்ரநாம அர்ச்சனை
முன்னதாக ஞாயிறு கிழமையன்ற வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் பிணி தீர்க்கும் தன்வந்திரி பெருமாளுக்கு 16 ஆம் ஆண்டு ஸஹஸ்ர கலசாபிஷேகத்துடன் ஸஹஸ்ரநாம அர்ச்சனை நடைபெற்றது. இதில் கோ பூஜை, மங்கள இசை, வேதபாராயணம், மஹா தன்வந்திரி ஹோமம் நடைபெற்று கலச புறப்பாடு நடைபெற்றது.
திருமஞ்சனம்
தொடர்ந்து விசேஷ மூலிகைகள், வாசனாதி திரவியங்கள், புனித தீர்த்தங்களுடன் 1008 கலசங்கள் அமைக்கப்பட்டு, அக்கலசங்களுக்கு விசேஷ ஆராதனைகள் நடைபெற்று 1008 பக்தர்கள் ஊர்வலமாக கொண்டு வந்து, பால், மஞ்சள், சந்தனம், நெல்லிப்பொடி, பன்னீர் போன்ற திரவியங்களால் உலக மக்களின் உடல் பிணி உள்ளது பிணி நீங்க ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் திருக்கரங்களால் திருமஞ்சனம் நடைபெற்று ஸஹஸ்ர கலசாபிஷேகம் நடைபெற்றது.
இறை பிரசாதங்கள்
தொடர்ந்து ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. மேலும் பங்கேற்ற பக்தர்களுக்கு ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளை வழங்கி இறை பிரசாதங்கள் வழங்கினார். இதனை தொடர்ந்து சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.