கார்த்திகை தீபத் விழா: திருவண்ணாமலை மாட வீதிகளில் பஞ்ச ரதங்கள் உலா வருமா - பக்தர்கள் எதிர்பார்ப்பு
கார்த்திகை தீப திருவிழாவிற்கான பணிகள் விறுவிறுப்படைந்துள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.மகா தேரோட்டம் நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் தேர் மற்றும் அம்மன் தேரை சுற்றி அமைக்கப்பட்டுள்ள பைபர் கண்ணாடிகளை அகற்றும் பணியும் மேற்கொள்ளப்பட்டன. கார்த்திகை தீப திருவிழாவிற்காக பணிகள் விறுவிறுப்படைந்துள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த ஆண்டு பஞ்ச ரதங்களும் உலா வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை சிவபெருமானின் பஞ்ச பூதத்தலங்களில் நெருப்புத்தலமாக போற்றப்படுகிறது. அக்னி தலமான திருவண்ணாமலை தட்ஷிண கைலாயம் என்றும் பக்தர்களால் அழைக்கப்படுகிறது. இத்திருத்தலத்தில் சிவலிங்கமே மலையாக காட்சியளிப்பதாக ஐதீகம். இந்த மலையை இன்றைக்கும் ஏகப்பட்ட சித்தர்கள் அரூபமாக கிரிவலம் வருகின்றனர். இங்குள்ள மலையானது சுமார் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவானதாக வரலாற்று ஆய்வாலர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. டெல்டா மாவட்டங்களுக்கு எப்போது மழை? வானிலை மையம் தகவல்
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் அன்றாடம் விஷேசம் நடைபெற்றாலும் கூட கார்த்திகை மாதத்தில் நடைபெறும் தீபத்திருநாளும், அதையொட்டி 10ஆம் நாள் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றும் நிகழ்வு தான் அனைத்திற்கும் சிகரம் வைத்தார் போல் இருக்கும். இந்த மகா தீப தரிசனத்தை காண்பதற்கே லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருவதுண்டு.
கொரோனா லாக்டவுன்
கொரோனா ஊரடங்கு காரணமாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த ஆண்டு நடத்துவதற்கு அரசு அனுமதிக்கவில்லை. இதனால் மாடவீதியில் சாமி வீதிஉலா மற்றும் மகா தேரோட்டம் நடைபெறவில்லை கோவிலில் உள்ள 5ஆம் பிரகாரத்தில் உற்சவ மூர்த்திகள் பவனி வந்தனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு 2ஆம் அலையின் தாக்கத்திலிருந்து தமிழகம் மீண்டு வந்துள்ளதால் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
தீப விழா கொடியேற்றம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர் 7ஆம் தேதி தொடங்க உள்ளது. இதனை முன்னிட்டு கடந்த மாதம் 16ஆம் தேதி பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றதை தொடர்ந்து, தீப திருவிழாவுக்கான பணிகளை கோவில் நிர்வாகம் தொடங்கியது.
தேர்கள் சீரமைக்கும் பணி
முக்கிய நிகழ்வான மகா தேரோட்டம் நவம்பர் மாதம் 16ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக பஞ்ச ரதங்களை சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. விநாயகர், முருகன் மற்றும் சண்டிகேஸ்வரர் தேர்களை பாதுகாக்க வைத்திருந்த இரும்பு தகடுகளை அகற்றும் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இதையடுத்து அண்ணாமலையார் தேர் மற்றும் அம்மன் தேரை சுற்றி அமைக்கப்பட்டுள்ள பைபர் கண்ணாடிகளை அகற்றும் பணியும் மேற்கொள்ளப்பட்டன. இப்பணிகள் நிறைவு பெற்றதும் 5 தேர்களை சீரமைக்கும் பணி நடைபெற உள்ளது.
பரணி தீபம்
தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகாதீபத்திருவிழா 19ஆம்தேதி நடைபெறும். அதிகாலையில் கோவிலின் மூலவர் சன்னதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரமுள்ள அண்ணா மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.
அரசு முடிவெடுக்குமா
கார்த்திகை தீப திருவிழாவிற்கு ஏற்பாடு தயாராவதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொரோனாவால் தடை உத்தரவு காரணமாக பஞ்ச ரதங்கள் கடந்த ஆண்டு சீரமைக்க முடியவில்லை. இந்த ஆண்டு சீரமைக்க தொடங்கியுள்ளோம். இது தொடர்ந்து தேர் திருவிழாவை நடத்துவது குறித்து தமிழக அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என்றனர். கார்த்திகை தீபத் திருவிழாவையும் நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதிக்கும் என நம்பிக்கையுடன் பக்தர்கள் காத்திருக்கின்றனர். அண்ணாமலையார் தேரோட்டம் நடைபெறுமா அரசு அனுமதிக்கமா பார்க்கலாம்.