மகாளய அமாவாசை: ராமேஸ்வரத்தில் புனித நீராடவும் திதி தர்ப்பணம் தரவும் பக்தர்களுக்குத் தடை
மகாளய அமாவாசையை முன்னிட்டு வரும் 5 மற்றும் 6ஆம் தேதி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் வழிபடவும், அக்னி தீர்த்த கடற்கரை பகுதிக்கு செல்லவும், புனித நீராடவும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்படுகிறது.
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடவும், வரும் 5 மற்றும் 6ஆம் தேதி திதி தர்ப்பணம் அளிக்கவும் ராமநாதசுவாமி கோவிலில் வழிபடவும் பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் மாவட்ட நிர்வாகத்தின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா கேட்டுக்கொண்டுள்ளார்.
பெற்ற தந்தையாக மகனான மகளாக நம்முடன் வாழும் பெற்றோர்களுக்கு ஆற்றவேண்டிய கடமைகள் இருப்பதுபோல, இறந்து போன நம் முன்னோர்களுக்கு நாம் ஆற்றவேண்டிய கடமைகள் உள்ளன. இறந்தபின் ஒரு குறிப்பிட்ட காலம்வரை நம் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுப்பது அவசியம். அவரவர்கள் தங்களின் குடும்ப வழக்கப்படி வீட்டிலோ அல்லது நதிக்கரைகளுக்கோ சமுத்திரக் கரைகளுக்கோ சென்று முன்னோருக்குச் செய்யவேண்டிய வழிபாட்டினை மேற்கொள்ளலாம். குறைந்தபட்சம் எள்ளும் தண்ணீரும் விட்டு வேண்டிக்கொள்வது அவசியம்.
மகாளய அமாவாசை தினம் வரும் 6ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அன்று நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் காசி,கயா, ராமேஸ்வரம், கன்னியாகுமரி உள்ளிட்ட புனித நீர் நிலைகளில் நீராடி இறந்தவர்களுக்கு திதி கொடுத்து வழிபடுவார்கள்.

தமிழ்நாட்டில் பவானி கூடுதுறை, திருச்சி காவிரி ஆறு, திருவையாறு, மயிலாடுதுறை ஆகிய காவிரி கரையோரங்களில் திதி கொடுத்து வழிபடுவது வழக்கம். கொரோனா பரவலைக்கட்டுப்படுத்தும் வகையில் கடந்த ஆண்டு திதி தர்ப்பணம் தர தடை விதிக்கப்பட்டதால் வீடுகளிலேயே மக்கள் திதி கொடுத்து முன்னோர்களை வழிபட்டனர். ஆடி அமாவாசை நாளிலும் மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு வீடுகளிலேயே திதி தர்ப்பணம் அளித்தனர்.
மகாளய பட்ச காலமாக இருப்பதால் கடந்த சில நாட்களாக ஏராளமானோர் ராமேஸ்வரத்தில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் அளித்து வழிபட்டு வருகின்றனர். கொரோனா மூன்றாம் அலை பரவலை தடுக்கும் வகையில் மக்கள் அதிகம் கூட தடைவிதிக்கப்பட்டுள்ளதால் வரும் 5,6ஆம் தேதிகளில் ராமேஸ்வரத்தில் திதி, தர்ப்பணம் தரவும், புனித நீராடவும் மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மக்கள் அனைவரும் மாவட்ட நிர்வாகத்தின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன. கோவில்களில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் வருகிற 6ஆம் தேதி புதன்கிழமை மகாளய அமாவாசை வருகிறது. இந்த நாளில் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய பொதுமக்கள் அதிக அளவில் கூடுவார்கள் என்பதாலும், கோவிலில் சாமி தரிசனம் செய்ய கூட்டம் அதிகமாகி, அதனால் கொரோனா தொற்று பரவும் சூழ்நிலை உருவாகக்கூடும் என்பதாலும் மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது.
அதன்படி வருகிற 5 மற்றும் 6ஆம் தேதி ஆகிய 2 நாட்களில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் வழிபடவும், அக்னி தீர்த்த கடற்கரை பகுதிக்கு செல்லவும், நீராடவும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்படுகிறது.
அரசு வழிகாட்டுதலின்படி வெள்ளி, சனி, மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதால் இன்று முதல் வருகிற 3ஆம் தேதி வரை பக்தர்கள் கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இதே போல இளம்பிள்ளை அருகே உள்ள கஞ்சமலை சித்தேஸ்வரர் கோவில் செயல் அலுவலர் பரமேஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொரோனா ஊரடங்கு நடைமுறைகளுக்கு உட்பட்டு கஞ்சமலை சித்தேஸ்வரர் கடந்த ஜூலை மாதம் 5-ந் தேதி முதல் காலை 6 மணியில் இருந்து இரவு 8 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறது. அரசு வழிகாட்டுதலின்படி வெள்ளி, சனி, மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதால் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 3ஆம் தேதி வரை பக்தர்கள் கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது.
அதேபோல் வருகிற 6ஆம் தேதி மகாளய அமாவாசை உற்சவத்தில் சாமி தரிசனம் செய்ய அதிகப்படியான பக்தர்கள் வருவார்கள் என்பதால் கொரோனா நோய் தொற்று பரவுதலை தடுக்கும் பொருட்டு பொதுமக்கள் தரிசனத்திற்கு அன்றைய தினமும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனவே 6ஆம் தேதியும் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு தடை உள்ளதால், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தவும், குளிக்கவும், பொங்கல் வைக்கவும், வழிபாடு செய்யவும், அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications