அழகர் மலையில் கருட வாகனத்தில் எழுந்தருளும் கள்ளழகர் மண்டூக மகரிஷிக்கு நாளை சாப விமோசனம்
கள்ளழகர் மதுரைக்கு வந்து வைகையில் இறங்காவிட்டாலும் மண்டூக மகரிஷிக்கு நாளை சாப விமோசனம் தரப்போகிறார்.
மதுரை: அழகரை காணாத கண்ணும் கண்ணல்ல என்று கவலைப்படும் மதுரைவாசிகளுக்கு ஒரு நற்செய்தி. நேரில் வந்து வைகையில் இறங்கி தரிசனம் தராவிட்டாலும் மண்டூக முனிவருக்கு அழகர்மலையிலேயே கருட வாகனத்தில் வந்து காட்சி தந்து சாப விமோசனம் தரப்போகிறார். இந்த நிகழ்ச்சிகளில் பக்தர்கள் நேரடியாக கலந்துகொண்டு தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்பதால் https://tnhrce.gov.in என்ற இணையதளம், யூடியூப் மற்றும் முகநூல் மூலமாகவும் நிகழ்ச்சிகள் அனைத்தும் நேரடியாக ஒளிபரப்ப திருக்கோவில் நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மதுரைக்கு அருகில் உள்ளது அழகர்மலை. இந்த மலைக்கு திருமாலிருஞ்சோலை, உத்யான சைலம், சோலைமலை, இருங்குன்றம் உள்ளிட்ட பெயர்கள் உள்ளன. இதன் அடிவாரத்தில் தொன்மையான அழகர் கோயில் உள்ளது. இது, 93வது திவ்விய தேசம். கருவறையில் மூலவராக பெருமாள் ஸ்ரீபரமசுவாமி கல்யாண சுந்தரவல்லி தாயார் சமேதராக காட்சி அளிக்கிறார். இத்தலத்தில் மூலவரை விட உற்சவருக்கே பெருமை அதிகம் அவர்தான் அழகர், சுந்தரராஜ பெருமாள். பாண்டிய நாட்டு வைணவ தலங்களில் சிறப்பான இந்த தலம் பல ஆழ்வார்களால் பாடப்பெற்றுள்ளது.
Recommended Video
மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை மூலவர் ஸ்ரீபரமசுவாமி பெருமாளுக்கு நடத்தப்படும் தைலபிரதிஷ்டை மிகவும் சிறப்பு பெற்றதாக உள்ளது. இந்த தைலபிரதிஷ்டை உற்சவம் தை அமாவாசை அன்று தொடங்கி ஆடி அமாவாசை வரை ஆறு மாத காலம் நடைபெறுகிறது. இந்த நாட்களில் பக்தர்கள் உற்சவரை மட்டுமே வழிபட முடியும்.
அழகான அழகர்
கள்ளழகர் பெயருக்கு ஏற்றார் போல பலரது உள்ளங்களை கொள்ளை கொண்ட கள்வன்தான். இந்த அழகர் விக்ரகம் அபரஞ்சி என்ற உயர்ரக தங்கத்தினால் செய்யப்பட்டது. உலகத்திலேயே அபரஞ்சி தங்கத்திலான பெருமாள் சிலைகள் இரண்டு இடங்களில்தான் இருக்கின்றன. ஒன்று அழகர் கோவிலில், இன்னொன்று திருவனந்தபுரத்தில் உள்ள அனந்த பத்மநாபசுவாமி கோவிலில் உள்ளது.
அழகரின் அதிசயம்
அழகர் விக்ரகத்துக்கு இப்பகுதி மலைமேல் உள்ள நூபுர கங்கை நீரால் மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது. பிற நீரால் அபிஷேகம் செய்தால் கறுத்து விடக்கூடிய அதிசயம் நிகழும் என்று கூறப்படுகிறது. அபரஞ்சி என்பது தேவ லோகத் தங்கம் என்பதால், இந்தப் பெருமாளையும் தேவலோகப் பெருமாளாக பக்தர்கள் வணங்குகிறார்கள். அதனால்தான் மலைமீது ஏறி வந்து தன்னை தரிசிக்க முடியாத பக்தர்களுக்காக ஆண்டுக்கு ஒருமுறை மலையை விட்டு இறங்கி வந்து பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார் கள்ளழகர்.
கள்ளழகர் காட்சி
இந்த ஆண்டு சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டு விட்டதால் அழகர் மலையை விட்டு இறங்க முடியவில்லை. மலையை விட்டு இறங்காவிட்டாலும் கள்ளழகர் நாளை மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் தருகிறார். கருட வாகனத்தில் எழுந்தருளும் கள்ளழகர் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி மாலை 4.30 மணிக்கு கோவிலின் உட்பிரகாரத்தில் நடத்தப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது. இந்த நிகழ்ச்சிகளில் பக்தர்கள் நேரடியாக கலந்துகொண்டு தரிசனம் செய்ய அனுமதி இல்லை.
நேரலையில் சாப விமோசனம்
கள்ளழகரை நேரில் தரிசிக்க முடியலையே என்ற கவலையில் இருக்கும் பக்தர்களுக்காகவே மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் தரும் நிகழ்ச்சி https://tnhrce.gov.in/ என்ற இணையதளம், யூடியூப் மற்றும் முகநூல் மூலமாகவும் நிகழ்ச்சிகள் அனைத்தும் நேரடியாக ஒளிபரப்புகின்றனர். இந்த வருஷம் அழகரை ஆன்லைனில் மட்டுமே காணும் பாக்கியம் கிடைத்திருக்கிறது என்று ஆறுதல் பட்டுக்கொள்வதைத்தவிர வேறு வழியில்லை.