திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் - 2 #Margazhi,#Thiruppaavai
திருப்பாவை - பாடல் 2
வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத்துயின்ற பரமன் அடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.
பாடல் விளக்கம்:
பாவை நோன்பு நோற்பவர்களுக்கு இரண்டாம் பாசுரத்தில் ஆண்டாள் சில கோட்பாடுகளை விதிக்கிறாள். நோன்பில் ஈடுப்பட்டவர்கள் செய்ய வேண்டிய நான்கு விஷயங்களையும், தவிர்க்க வேண்டிய ஆறு விஷயங்களையும் தெரிவிக்கிறாள்.
அதிகாலையில் எழுந்து நீராடுவது முதல் கடமை இறைவனின் நாமங்களையும், பாடல்களையும் பாடுவது இரண்டாவது கடமை. இறைவனுக்குத்தான் பூக்கள், மனிதர்களுக்கு அல்ல எனவே மார்கழியில் பூக்களை சூடாமல் இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்கிறாள் ஆண்டாள். நெய், பால் சாப்பிடாமல், கண்களுக்கு மை தீட்டி அழகு படுத்தாமல், பொய் சொல்லாமல், அடுத்தவர்களைப் பற்றி புறம் பேசாமல் இருக்க வேண்டும். நம்மால் முடிந்த வரை ஏழை எளியவர்களுக்கு தானம் வழங்க வேண்டும். மற்றவர்கள் மகிழ்ந்து கொண்டாடும் வகையில் நம்முடைய நோன்பு இருக்க வேண்டும் என்கிறாள் ஆண்டாள் நாச்சியார்.
திருவெம்பாவை பாடல் - 2
பாசம் பரஞ்சோதிக்கென்பாய் இராப்பகல் நாம்
பேசும் போதெப்போது இப்போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி இவையுஞ் சிலவோ விளையாடி
ஏசும் இடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்
ஈசனார்க்கு அன்பர் யாம் ஆரேலோர் எம்பாவாய்.
பாடல் விளக்கம்: சிறந்த அணிகலன்களை அணிந்தவளே! இரவும் பகலும் நாம் பேசும் பொழுது, என் பாசமெல்லாம் எப்பொழுதும் என் அன்பு, மேலான ஒளிப் பிழம்பான இறைவனுக்கு என்று கூறுவாய். இப்பொழுது அருமையாகிய படுக்கைக்கே, அன்பு வைத்தனையோ? என்று பெண்கள் வெளியில் இருந்து கேட்கின்றனர்.
அதற்கு அவளோ.... பெண்களே! சீச்சி நீங்கள் பேசும் நகை மொழிகளில் இவையும் சிலவாகுமோ! என்னோடு விளையாடிப் பழித்தற்குரிய சமயம் இதுதானோ? இது இறைவனை பாட வேண்டிய நேரம் என்று கூறுகிறாள்.
தேவர்களும் வழிபடுதற்கு நாணுகின்ற தாமரை மலர் போன்ற திருவடியை அன்பருக்குக் கொடுத்தருள எழுந்தருளும் ஒளி உருவன்; தில்லைச் சிற்றம்பலத்து இறைவனுக்கு, அன்பு பொருந்திய நாம் உனக்கு யார்?
அருமையான அணிகலன்களை அணிந்த தோழியே! இராப்பகலாக எங்களுடன் அமர்ந்து பேசும் போது "ஜோதி வடிவான நம் அண்ணாமலையார் மீது நான் கொண்ட பாசம் அளவிடற்கரியது என்று வீரம் பேசினாய். ஆனால், இப்போது நீராட அழைத்தால் வர மறுத்து மலர் பஞ்சணையில் அயர்ந்து உறங்குகிறாய், என்கிறார்கள் தோழிகள்.
உறங்குபவள் எழுந்து, "தோழியரே! சீச்சி! இது என்ன பேச்சு! ஏதோ கண்ணயர்ந்து விட்டேன் என்பதற்காக இப்படியா கேலி பேசுவது? என்றாள். அவளுக்கு பதிலளித்த தோழியர்,"கண்களை கூசச்செய்யும் பிரகாசமான திருவடிகளைக் கொண்ட சிவபெருமானை வழிபட தேவர்களே முயற்சிக்கிறார்கள். ஆனால், அவர்களால் முடியவில்லை. நமக்கோ, நம் வீட்டு முன்பே தரிசனம் தர வந்து கொண்டிருக்கிறான். அவன் சிவலோகத்தில் வாழ்பவன், திருச்சிற்றம்பலமாகிய சிதம்பரத்தில் நடனம் புரிபவன். நம்மைத் தேடி வருபவன் மீது நாம் எவ்வளவு தூரம் பாசம் வைக்க வேண்டும், நீயே புரிந்து கொள்வாயாக, என்று கூறுகின்றனர்.