மாசி மகம் : கும்பகோணத்தில் சைவ, வைணவ ஆலயங்களில் கோலாகலம் - புனித நீராடினால் என்னென்ன நன்மைகள்
மாசி மகம் நாளில் கும்பகோணத்தில் உள்ள மகாமகம் தெப்பக்குளத்தில் புனித நீராடினால் ஏழு ஜென்ம பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.
தஞ்சாவூர்: தமிழ் மாதங்களில் மிகவும் மகத்துவமான மாதமாக போற்றப்படுவது மாசி மாதம் தான். இந்த மாதத்தில்தான் மாசி மகம் திருவிழா சிறப்பாக நடைபெறும். கோயில்களின் நகரம் என்று போற்றப்படும் கும்பகோணம் நகரப்பகுதிகளில் உள்ள புகழ்பெற்ற ஆதிகும்பேஸ்வரர், சக்ரபாணி கோயில் உள்ளிட்ட முக்கியமான சைவ-வைணவ கோயில்களில் இந்த ஆண்டு மாசி மகம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது. 17ஆம் தேதியன்று மகாமகம் குளத்தில் நண்பகல் 12 மணி முதல் 1 மணி வரை தீர்த்தவாரி வைபவம் நடைபெறும்.
தொண்டை மண்டலத்தில் காஞ்சி மாநகர் எப்படி கோயில்களின் நகரமோ, அது போல் தஞ்சை மாவட்டத்தில் கோயில்களுக்கு புகழ்பெற்றது கும்பகோணம் நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள கோயில்கள். இப்பகுதிகளில் உள்ள சைவ, வைணவ கோயில்களில், ஆண்டு தோறும் மாசி மகம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இத்திருவிழாவை முன்னிட்டு இக்கோயில்களில் கொடியேற்றம் முதல் தீர்த்தவாரி வரை பத்து நாட்கள் வெகு திருவிழா களைகட்டும். இத்திருவிழாவைக் கண்டு ரசிக்கவே நாடு முழுவதும் இருந்தும் பக்தர்கள் கும்பகோணம் நகருக்கு படையெடுத்து வருவார்கள். மாசி மகம் கும்பகோணத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மாசி மக நட்சத்திரத்தன்று விரதமிருந்து தீர்த்தமாடி கோயிலுக்கு சென்று வழிபட்டு வந்தால் பிறவிப் பெருங்கடலிலிருந்து விடுபடலாம் என்பது நம்பிக்கை.

மாசி மகம் எப்போது?
மாசி மாதம் பெளர்ணமியும், மகம் திதியும் சேர்ந்து வரக்கூடிய அற்புத நாள் மாசி மகம் என கொண்டாடப்படுகிறது.
மாசி மாதம் சிம்ம ராசியில் உள்ள மகம் நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சரிப்பார். இந்த ஆண்டு மாசி மகம்
பெளர்ணமியுடன் கூடிய மகம் நட்சத்திரம் 16.02.2022 அன்று புதன்கிழமை மாலை 3.14 மணிக்கு தொடங்குகிறது. 17ஆம் தேதி மாலை 04.10 மணிவரை மகம் நட்சத்திரம் உள்ளது.

கும்பகோணம்
பிற தலங்களில் செய்த பாவம் காசியில் தீரும். காசியில் செய்த பாவம் கும்பகோணத்தில் நீங்கும் என்பதே கும்பகோணத்தின் மகிமையாகும். ஒரு பிரளய காலத்தின் போது பிரம்மா மிதக்க விட்ட அமிர்தம் அடங்கிய குடத்தை சிவபெருமான் ஒரு பாணத்தால் அடித்து உதைத்து விட்டார். அமிர்தம் சிதறியது. உடைந்து போன குடம் சிதறி உருண்டு ஓடியது. அந்த குடம் நின்ற இடம் தான் கும்பகோணம். சிதறிய அமிர்தம் ஒன்று சேர்ந்த இடமே மகாமக குளம். அமிர்த துளிகள் லிங்கமானது. அவர் தான் கும்பேஸ்வரர்.

புனித நீராடல்
கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, சரயு, வேகவதி, சிந்து, கோதாவரி, காவேரி, தபதி, பிரம்மபுத்திரா, தாமிரபரணி, மகாநதி முதலான நதிகள் கைலாயம் சென்று பரமேஸ்வரனை வணங்கி மக்களின் பாவங்களை நாங்கள் வாங்கிக் கொள்கிறோம். எங்களிடம் வரும் பாவத்தை எப்படி தொலைப்போம் என கேட்டனர். அதற்கு பரமசிவன் நதிகளே! மகத்தன்று குடந்தையில் உள்ள மகாமக தீர்த்தத்தில் ஸ்நானம் செய்யுங்கள். பன்னிரெண்டு நதிகளும் மக்கள் செய்த பாவச்சுமைகளை அகற்றி புனிதம் பெற மகாமக குளத்தில் நீராடுவதாக ஐதீகம்.

சிவ ஆலயங்களில் மாசி மகம் விழா
இந்த ஆண்டு மாசி மகம் திருவிழா 8ஆம் தேதி கும்பகோணம் பகுதிகளில் உள்ள மாசி மகம் நிகழ்வுடன் தொடர்புடைய ஆதிகும்பேஸ்வரர் கோயில், காசிவிஸ்வநாதர் கோயில், காளகஸ்தீஸ்வரர் கோயில், சோமேஸ்வரர் கோயில், அபிமுகேஸ்வரர் கோயில் உள்ளிட்ட முக்கிய சிவன் கோயில்களில் கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.
கும்பகோணம் நகரின் முக்கிய கோயிலான ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் வரும் 11ஆம் தேதி அறுபத்து மூவர் திருவீதியுலா வைபவமும், 12ஆம் தேதியன்று ஓலைச்சப்பரமும், அதைத் தொடர்ந்து 15ஆம் தேதியன்று தேரோட்ட வைபவமும் நடைபெறுகிறது. வரும் 17ஆம் தேதியன்று மகாமகம் குளத்தில் நண்பகல் 12 மணி முதல் 1 மணி வரை தீர்த்தவாரி வைபவம் நடைபெறும். அதே போல், காசி விஸ்வநாதர் கோயில், அபிமுகேஸ்வரர் கோயில், கௌதமேஸ்வரர் கோயில்களின் சார்பில் வரும் 16ஆம் தேதியன்று மாலையில மகாமகம் குளக்கரையில் தேரோட்ட வைபவம் நடைபெற உள்ளது.

விஷ்ணு ஆலயங்களில் மாசி மகம் விழா
அதே போல், கும்பகோணம் நகரப் பகுதிகளில் உள்ள வைணவ கோயில்களில் முதன்மையானதாக இருக்கும் சக்ரபாணி கோயில், இராஜகோபாலசுவாமி கோயில், ஆதிவராகப்பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் மாசி மகம் திருவிழாவை முன்னிட்டு பத்து நாள் உற்சவம், வரும் 9ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. அதைத் தொடர்ந்து வரும் 12ஆம் தேதியன்று, கருடவாகனத்தில் ஓலைச்சப்பரமும், 17ஆம் தேதியன்று காலை 7 மணியளவில் சக்ரபாணி கோயில் தேரோட்ட வைபவமும் நடைபெறும். பின்னர் நண்பகல் 12 மணியளவில் காவிரி ஆற்றங்கரையில் உள்ள சக்கர படித்துறையில் அனைத்து வைணவ கோயில்களின் சார்பில் தீர்த்தவாரி வைபவமும் நடைபெறும். அதே போல் மாசி மகத்தை முன்னிட்டு புகழ்பெற்ற சார்ங்கபாணி கோயிலில் வரும் 17ஆம் தேதியன்று தெப்ப உற்சவம் நடைபெறும்.

புனித நீராடினால் நன்மைகள்
புண்ணிய நதிகளில் நீராடுவதற்கு மிகவும் உகந்த மாதமாகவும், சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஏற்றதாகவும் மாசி மாதம் உள்ளது. நீரின்றி அமையாது உலகு என்பதற்கு ஏற்ப, நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்பதை மக்களுக்கு உணர்த்தும் மாதமாக மாசி மாதம் விளங்குகிறது. மாசி மகம் நாளில் புனித நீராடினால் நம்முடைய அனைத்து தோஷங்களும் விலகி ஓடிவிடும் என்பது ஐதீகம். மக்கள் தெய்வங்களோடு சேர்ந்து நீராடி இறைவனை வழிபடுவதால் இந்த திருவிழா கடலாடும் விழா என்றும் அழைக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications