வைத்தீஸ்வரன் கோவில் அம்மனுக்கு மாட்டு வண்டியில் சீர்வரிசை...குல தெய்வத்தை கும்பிட குவியும் மக்கள்
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நகரத்தார் மக்கள் குலதெய்வ வழிபாடு செய்ய குவிந்துள்ளனர்.
மயிலாடுதுறை: சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாத சுவாமி கோவில் உள்ளது. சிறப்பு வாய்ந்த இந்த ஆலயத்தில் காரைக்குடி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டு வருகின்றனர்.
தேவார பாடல் பெற்ற ஸ்ரீ தையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமி கோயிலில் செல்வமுத்துக்குமார சுவாமியும் செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன், தன்வந்திரி சுவாமிகள் தனி சன்னதியில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர்.
இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் இரண்டாவது செவ்வாய்க்கிழமை குலதெய்வ வழிபாடு நடத்துவதற்காக,காரைக்குடி,கந்தர்வகோட்டை, சிவகங்கை, பரமக்குடி,மானாமதுரை,திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வைத்தீஸ்வரன்கோயிலுக்கு வருவது வழக்கம்.

நகரத்தார் வழிபாடு
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றால் வழிபாடு தடைப்பட்ட நிலையில் இந்தாண்டு திரளான மக்கள் வழிபாடு செய்ய வந்துள்ளனர். நகரத்தார் மக்கள் கிராமம் கிராமமாக சித்திரை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து புறப்பட்டு இரண்டாவது செவ்வாய்க்கிழமை இங்கு வந்து சேர்கின்றனர்.

மாட்டு வண்டிகளில் சீர் வரிசை
குலதெய்வ வழிபாடாகவும் அதே சமயம் ஸ்ரீதையல்நாயகி அம்மன் தங்கள் ஊர் பெண் என்ற ஐதீகத்தின்படி மக்கள் சீர்வரிசையை கூண்டு வண்டிகளில் ஏற்றி நடைபயணமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
இந்த ஆண்டும் பாதயாத்திரையாக சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கோயிலுக்கு வந்தனர்.

தையல் நாயகி அம்மன்
கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பங்கேற்று தையல்நாயகி அம்மனை தரிசனம் செய்தனர். தாங்கள் வேண்டுகளுக்காகவும் வழிநடைக்கு துணையாகவும் கொண்டு வந்த கம்புகளை வேண்டுதல் நிறைவேறியதற்கு காணிக்கையாக கோவில் கொடிமரத்தில் செலுத்தினர். மேலும் விளக்கேற்றியும் தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். மீண்டும் மறு வேண்டுதல் நிறைவேற வேண்டி அங்கிருந்து ஒரு குச்சியை தங்கள் வீடுகளுக்கு கொண்டு செல்கின்றனர்.

பல தலைமுறைகளாக தொடரும் வழக்கம்
பூம்புகார் பகுதியில் இருந்து குடியேறிய நகரத்தார் மக்கள் காரைக்குடி, கீழச்சிவல்பட்டி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வருகின்றனர். பல தலைமுறைகளாக தொடரும் இந்த வழக்கம் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக பாதயாத்திரைக்கு யாரும் வர இயலவில்லை.

குல தெய்வ வழிபாடு செய்ய குவியும் மக்கள்
இந்தாண்டு கொரோனா தொற்று குறைந்து அரசு கொரோனா கட்டுபாடுகளை முழுமையாக தளர்த்தியுள்ளதால் நகரத்தார் வழிபாடு செய்வதற்காக நேற்று மாலை முதல் வைத்தீஸ்வரன் கோவில் நகரில் குவிந்து வருகின்றனர்.
திருவிழாவை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பக்தர்கள் வசதிக்காக சீர்காழி,மயிலாடுதுறை,தஞ்சை,திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications