புண்ணியம் நிறைந்த புரட்டாசியில் பெருமாள் தரிசனம் - தர்ப்பணமும் தானமும் தலைமுறையைக் காக்கும்
புரட்டாசி மாதப்பிறப்பு நாளில் பெருமாளை தரிசனம் செய்வதும் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்து அன்னதானம் செய்வதும் சிறப்பானது என்று முன்னோர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை: புரட்டாசி மாதம் பெருமாள் வழிபாட்டிற்கு ஏற்ற மாதம். புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்குச் சென்று ஏராளமானோர் வழிபடுவார்கள். புரட்டாசி மாதம் வெள்ளிக்கிழமை பிறக்கிறது. முதல் நாளன்று பெருமாளை வழிபடுவதுடன் நம்முடைய முன்னோர்களுக்கும் தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது சிறப்பு. ஏழைகளுக்கு அன்னதானம் கொடுப்பதன் மூலம் முன்னோர்களின் ஆசி கிடைக்கும். காரியத்தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும்.
புரட்டாசி மாதம் முன்னோர்கள் வழிபாடு, இறை வழிபாடு, சக்தி வழிபாடு என அனைத்து அம்சங்களையும் அடக்கியிருக்கிறது என்பதே. பித்ருக்களை வழிபடும் மகாளயம், பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் நவராத்திரி இவையும் சேர்ந்து புரட்டாசிக்குப் பெருமை சேர்க்கிறது.
கடவுளுக்கு காணிக்கை மற்றும் நேர்த்திக்கடன்கள் செலுத்த புரட்டாசி மாதமே சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது.
புனித மிக்க புரட்டாசி மாதத்தில் விரதங்கள் கடைபிடித்தால் அதிகம் புண்ணியம் கிடைக்கும். ஜாதக அமைப்பின்படி சனி, புதன் திசை நடப்பவர்கள் நல்லெண்ணெய் தீபம் போட்டு வழிபட தடைகள் அனைத்தும் நீங்கும். பாவங்கள் நீங்கி புண்ணியமும் சுபயோக சுபங்களும் கூடி வரும். எமபயம் நீங்கவும், துன்பங்கள் விலகவும் புரட்டாசி மாதத்தில் காக்கும் கடவுளான விஷ்ணுவை வணங்க வேண்டும்.
புரட்டாசி மாதம் ராசிச் சக்கரத்தின் கன்னி மாதத்தில் வருகிறது இது கன்னி மாதம். கன்னி மூலையில் அமைந்திருக்கும் விநாயகரை வழிபடுவது கூடுதல் பலன்களைத் தரும். புரட்டாசி மாதம் வளர்பிறை சதுர்த்தி திதியில் சித்தி விநாயக விரதம் இருந்து வழிபட்டால் எதிரிகள் தொல்லை இல்லாமல் போய் விடும். புரட்டாசி மாதம் சங்கட ஹர சதுர்த்தி தினத்தன்று விநாயகரை நினைத்து விரதம் கடைபிடித்தால் சுகபோக வாழ்வு கிடைக்கும். புரட்டாசி மாதம் வளர்பிறை அஷ்டமி தினம் முதல் ஓராண்டுக்கு விநாயகருக்கு அருகம்புல் சார்த்தி அர்ச்சனை செய்து வழிபட்டால் உடல் வலிமை உண்டாகும்.
சனிக்கிழமை மட்டுமின்றி திங்கட்கிழமையும், புதன்கிழமையும் பெருமாள் வழிபாட்டுக்கு உகந்த நாட்களாகும். இந்த விரத வழிபாடுகள் மகாலட்சுமியின் மனதை மகிழ்ச்சி அடையச் செய்யும். புரட்டாசி மாதம் பவுர்ணமி தினத்தன்று லட்சுமியை இந்திரன் வணங்குவதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அன்று வலம்புரி சங்கில் பசும்பால் ஊற்றி மலர்களால், அலங்கரித்து வழிபட்டால் சகல செல்வங்களும் வந்து சேரும். பவுர்ணமி தினத்தில் அம்மனுக்கு நைவேத்தியமாக இளநீர் படைக்க வேண்டும். இந்த பூஜையால் குடும்பத்துக்கு தேவையான செல்வங்கள் வந்து சேரும் என்பது ஐதீகம்.
ஆவணி மாதம் இன்றுடன் முடிகிறது புரட்டாசி மாதம் செப்டம்பர் 17ஆம் தேதி பிறக்கிறது. முதல்நாளில் பெருமாளை தரிசனம் செய்வது சிறப்பு. பெருமாளுக்கு துளசி மாலை சார்த்தி வழிபடுவது சிறப்பு. பிரம்ம முகூர்த்தம் என்று சொல்லப்படுகின்ற அதிகாலை நேரம் 4.30 முதல் 6 மணிக்குள்ளான பொழுதில் எழுந்திருக்க வேண்டும். குளித்து விட்டு பெருமாளை வணங்குவது சிறப்பு.
கஜேந்திரன் என்னும் பெயர் கொண்ட யானை, திரிகூடமலையில் உள்ள யானை கூட்டத்தின் தலைவனாக வாழ்ந்தது. ஒரு நாள் தாகம் தணிக்க தனது யானை கூட்டத்துடன் நீர்நிலையை நோக்கி சென்றபொழுது அந்த குளத்தில் வாழும் ஒரு முதலை கஜேந்திரனின் கால்களை பற்றியது. முதலையின் வாயில் அகப்பட்ட கால்களுடன் உயிருக்கு போராடிய கஜேந்திர யானை, ஒரு தாமரை மலரை தனது தும்பிக்கையால் பற்றி வான் நோக்கி ஆதிமூலமே ஹரி...ஹரி என்று ஏழு முறை கூவி அழைத்தது. விரைந்து வந்த பெருமாள் தனது சக்ராயுதத்தால் முதலையின் தலையை துண்டித்து யானையை விடுவித்து மோட்சம் அளித்தார்.
திருத்தணி, திருச்செந்தூர், சமயபுரம் கோவில்களில் இனி 3 வேளையும் அன்னதானம் - தொடக்கி வைத்த முதல்வர்
அதுபோல நமது துன்பங்களையும், துயரங்களையும் களையும் பொருட்டு ஹரி...ஹரி என்று ஏழு முறை சொல்லவேண்டும். அதன் பின்னர் நீராடி விட்டு திருநாமம் போட்டுக்கொண்டு பெருமாள் சந்நதியில் அமர்ந்து திருப்பல்லாண்டு, திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை முதலானவற்றை சொல்லலாம். பெருமாள் தரிசனம் முடிந்த பின்னர் கோவில் வாசலில் ஏழைகளுக்கும் பசியோடு இருப்பவர்களுக்கும் உணவு வாங்கி கொடுப்பதும் இறையருள் கிடைக்கச் செய்யும். மறைந்த நம்முடைய முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும்.