புரட்டாசியில் மனதார பெருமாளை வழிபடுங்கள்!..கஷ்டங்களை தீர்க்க கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவார்!!
சென்னை: புரட்டாசி மாதத்தில் அசைவ உணவுகளைத் தவிர்த்து விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிடைக்கும். செல்வத்தை காட்டும் தங்க மலர்களை விட பக்தியோடு மண் மலர்களை சூடி வழிபட்டாலும் அதனை பக்தியோடு ஏற்றுக்கொண்டு அந்த பக்தருக்கு முக்தியை கொடுத்தவர் பெருமாள்.
மாதங்களில் நான் மார்கழி என்றார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர். பெருமாளுக்கு உகந்தது புரட்டாசி மாதம். திருப்பதி ஏழுமலையான் எனக்கு உகந்த மாதமும் புரட்சி மாதம்தான் அதிலும் சனிக்கிழமைதான் அவருக்கு உகந்த நாள். புரட்டாசி சனிக்கிழமைக்கு இருக்கும் மகத்துவமே தனித்துவமானது.
புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால் செல்வ வளம் பெருகும். தூய்மையான பக்தியோடு பெருமாளை, திருப்பதி ஏழுமலையானை வணங்கினால் ஏழையாக இருந்தாலும் வைகுண்ட பிராப்தியை அளிப்பார். இதற்கு உண்மையாக நடந்த சம்பவமே சாட்சியாக உள்ளது.
தூக்கி ஜெயில்ல போடுங்க சார்! சும்மா இருந்த ஜிபி முத்துவை ஊதி கெடுத்த டிடிஎஃப் வாசன்! புது ட்ரெண்ட்!
ஏழுமலையான் கோவில்
திருப்பதி வெங்கடாசலபதிப் பெருமாளை புரட்டாசி சனிக்கிழமைகளில் வணங்குவது பெரும் புண்ணியம். முடிந்தவர்கள் திருப்பதிக்கே சென்று ஏழுமலையானை வணங்கலாம். திருப்பதிக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டில் வெங்கடாசலபதி திருவுருப் படத்தை வைத்தும் கும்பிடலாம். புரட்டாசி சனிக்கிழமை பூஜைக்குரிய பொருட்களை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். திருமலை வெங்கடேசப் பெருமாளின் படம் ஒன்றை வைத்து மாலை போட்டு வெங்கடேச அஷ்டகம் சொல்லிப் பூஜை செய்ய வேண்டும். சிலர் வெங்கடேசப் பெருமாளின் முகத்தை மட்டும் வைத்து பூஜை செய்வதுண்டு. துளசி இலைகளால் பெருமாளை அர்ச்சிப்பது மிகவும் உகந்தது.
திருப்பதி ஏழுமலையான்
பல கோடி சொத்துக்களின் அதிபதியாக இருக்கும் ஏழுமலையானுக்கு தினந்தோறும் கோடி கோடியாக உண்டியல் காணிக்கை சேருகிறது என்றாலும் அவருக்கு படையல் மண்பானையில் வைக்கப்படும் தயிர்சாதம்தான். மன்னன் கொடுத்த தங்கப் பூ மாலையை விட மண்ணால் குயவர் செய்த மாலையை அன்போடு ஏற்றுக்கொண்டவர் திருப்பதி ஏழுமலையான்.
தங்க தாமரை பூக்கள் அர்ச்சனை
மன்னன் தொண்டைமானுக்கு ஏழுமலையான் மீது பக்தியோடு பாசமும் அதிகம். ஏழுமலையான் திருவேங்கடவனுக்கு ஆலயம் அமைத்து தினமும் பொன்மலர்களால் அர்ச்சனை செய்வதற்குரிய ஏற்பாடுகளை செய்திருந்தான். ஒருநாள் பூஜையின்போது பொன்மலர்களுக்கிடையே மண்மலர்களும் வந்து விழுந்தது. தனது வழிபாட்டில் ஏதேனும் பிழை இருக்குமோ என உள்ளுக்குள் வருந்தினான்.
ஏழுமலையான் பக்தர்
பீமய்யா என்ற குயவன் ஒருவன் வாழ்ந்து வந்தான். பிறவியிலேயே அவனுக்கு கால் ஊனம். தனது குலத்தொழிலான மண்பாண்டங்கள் செய்தலை நேர்மை தவறாமல் ஏழுமலையான் மீது அயராத பக்தி கொண்டு செய்து வந்தான். வேங்கடவனும் அவன் பக்திக்கு மெச்சி, தன் திருவுருவத்தை அவனுக்கு கனவில் காட்டி பின்பு மறைந்து விட்டார். பீமய்யாவுக்கு திருமால் கனவில் காட்சியளித்த நாள் புரட்டாசி மாத சனிக்கிழமை விடியற்காலை நேரம்.
திருப்பதி ஏழுமலையான் உருவம்
பீமய்யாவும், தனது கனவில் தோன்றிய திருமாலின் வடிவத்தை அப்படியே செய்தான். அதன்பின்னர் மண்ணால் ஏழுமலையானின் உருவத்தை வடித்து, மலர்கள் தூவி வழிபட்டு வந்தான். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை நாளில் தவறாமல் விரதம் அனுசரித்து வந்த பீமய்யன், பெருமாளின் சிந்தனையிலேயே தொழிலையும் செய்து வந்தான். இப்படி தொழில் செய்து கொண்டிருக்கும் போதே, கண்மூடி தியானத்தில் ஆழ்ந்து விடுவான். அச்சமயயங்களில் தான் என்ன செய்கிறோம் என்பதை அறியாத நிலையிலேயே, பிசைந்து கொண்டிருக்கும் களி மண்ணையே மலர்களாக பாவித்து பெருமாளுக்கு அர்ச்சிப்பான்.
கனவில் வந்த பெருமாள்
இது இப்படியிருக்க குழப்பத்திலிருந்த தொண்டைமான் ஒருநாள் அபூர்வக் கனவொன்றைக் கண்டான். அக்கனவில் வேங்கடநாதன் தோன்றி, தமது பக்தன் பீமய்யன் செய்யும் பூஜையே நீயும் செய்து பார் அப்போது உண்மை விளங்கும் என்று கூறி மறைந்தார். தொண்டைமானும் திருமால் குறிப்பிட்ட இடத்துக்கு சென்று பீமய்யன் செய்யப்போகும் பூஜையை மறைந்திருந்து கவனித்தான். உடனே பீமய்யனைச் சென்று கட்டித் தழுவிக்கொண்ட தொண்டைமான் அவனிடம் உன் பக்தி உயர்வான பக்தி. உனது வழிபாட்டைத் திருமால் ஏற்றுக் கொண்டு விட்டார் என்பதை நான் புரிந்து கொண்டேன் என்றான்.
முக்தி அளித்த பெருமாள்
ஏழுமலையான் அன்றைய தினம் பீமய்யனின் கனவிலும் தோன்றினார். அதைப்பார்த்த பீமய்யாவின் மெய்சிலிர்த்தது. உன் பக்தியின் பெருமையை என்று பிறர் கூற அறிகின்றாயோ அன்றே உனக்கு முக்தி அளித்து, வைகுண்டத்திற்கு அழைத்துக் கொள்வேன் எனக் கூறியிருந்தார். புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து, ஏழுமலையானை மனம் உருக வழிபட்டால், செல்வமும், நிம்மதியும் கிடைக்கும் என்பதோடு, முக்தியும் வாய்க்கும் என்பது ஐதீகம்.
மண்பானை நைவேத்தியம்
புரட்டாசி மாத சனிக்கிழமை விரதத்துக்கு இப்படியொரு மகத்துவம் இருக்கிறது. பெருமாளின் ஆணைப்படி அந்த பக்தரைக் கவுரவிக்கும் வகையில் இப்போதும், திருப்பதி ஏழுமலையானுக்கு மண்சட்டியில் தான் நைவேத்யம் செய்யப்படுகிறது. திருப்பதி வெங்கடாசலபதிப் பெருமாளை புரட்டாசி சனிக்கிழமைகளில் வணங்குவது பெரும் புண்ணியம். முடிந்தவர்கள் திருப்பதிக்கே சென்று ஏழுமலையானை வணங்கலாம். திருப்பதிக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டில் வெங்கடாசலபதி திருவுருப் படத்தை வைத்தும் கும்பிடலாம். பெருமாள் உண்மையான பக்தியை ஏற்றுக்கொள்வார்.
பெருமாளுக்கு படையல்
புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் விரதம் இருப்பவர்கள் பெருமாளுக்கு சிலர் பலவகை உணவுகளை படைத்து வழிபாடுவார்கள். சர்க்கரைப் பொங்கல், புளி சாதல், மிளகு சாதம், தேங்காய் சாதம், தயிர்சாதம், எள்ளு சாதம், கொண்டைக்கடலை சுண்டல், உளுந்த வடை, மிளகு வடை செய்வார்கள். சனிக்கிழமை தாளிகை என்று சொல்வார்கள். இந்த படையலுக்கு செய்யும் உணவில் வெங்காயம், வெள்ளைப்பூண்டு சேர்க்க மாட்டார்கள். பெருமாளுக்கு தூய பச்சரிசி மாவினாலே விளக்கு செய்து அதில் நெய் விட்டு தீபமேற்ற வேண்டும். பெருமாள் படத்தின் முன்னர், இப்படி நெய் தீபம் ஏற்றுவதால் வறுமை நீங்கி, வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படும்.