காதலுக்கு கண் இல்லையா? காதல் நாயகன் சுக்கிரன் 12 ராசிகளில் அமர்ந்துள்ள பலன்
ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிரன் பலமாக இருப்பது மிக மிக அவசியம். மகிழ்ச்சிக்கும், இனிமையான திருப்திகரமான திருமண உறவுக்கும் காதல் நாயகன் சுக்கிரனின் அருள் அவசியம் தேவை.
Recommended Video
சென்னை: காதலுக்கு கண் இல்லையா என்று கேட்பார்கள். அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. காதல் கிரகம் சுக்கிரனை வைத்துதான் இந்த வார்த்தையே வந்துள்ளது. வெள்ளிக்கிழமையான இன்று காதல் நாயகன் சுக்கிரன் பற்றி தெரிந்து கொள்வோம்.
காதலை நிறைவேற்றுவதில் நவக்கிரகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதிலும் சுக்கிரனின் பங்கு இதில் மகத்தானது. இவரே காதல், காம நாயகன். எனவேதான் திருமணத்திற்கு பார்க்கும் போது சுக்கிரனின் நிலையை பார்க்கின்றனர்.
சுக்கிரன் மீனத்தில் உச்சம் பெறுகிறார், ரிஷபம் துலாமில் ஆட்சி பெறுகிறார், கன்னியில் நீசம் அடைகிறார். உயிர்களில் காதல் உணர்வு, காம உணர்ச்சி , வாழ்க்கைத் துணை ,செல்வ நிலை, அந்தரங்க உறுப்புகள் ஆகியவற்றிற்கு காரண கர்த்தாவாகிறார்.
அசுரகுரு சுக்கிரன்
பிரம்மாவின் மானசீக புத்திரராக கருதப்படும் பிருகு முனிவருக்கு பிறந்தவர் தான் சுக்கிர பகவான். இவர் காசிக்கு சென்று அங்கு ஒரு சிவலிங்கத்தை படைத்து, நீண்டகாலம் தியானம் செய்ததன் விளைவாக சிவ பெருமானின் அருளால் அமிர்த சஞ்சீவினி மந்திரத்தை கற்று இறந்தவரை உயிர்பிக்க செய்தார். மேலும் அசுரர்களால் குருவாக போற்றப்பட்டார். சுக்கிரரின் பக்தியால் நெகிழ்ந்த சிவபெருமான் இவரை நவக்கிரகங்களில் ஒருவராக நியமித்தார். தொலைக்காட்சியில் புராண சீரியல்களில் பார்க்கும் போது ஒரு கண்ணை மூடியபடியே ஒருவர் அசுரர்களுக்கு அட்வைஸ் செய்வாரே அவர்தான் சுக்கிரன்.
கண் இழந்த சுக்கிரன்
மஹாபலி சக்கரவர்த்தி வாமனருக்கு தானம் கொடுக்க வந்த போது கமண்டலத்தின் துவாரத்தை வண்டு உருவில் சுக்கிராச்சாரியார் சென்று அடைத்துக்கொண்டார். அந்த துவாரத்தில் உள்ள அடைப்பை நீக்கும் பொருட்டு தர்பை புல்லினால் குத்தும்போது சுக்கிராச்சாரியார் கண்களில் தரப்பை புல் குத்த சுக்கிராச்சாரியார் ஒரு கண்ணை இழக்கிறார். கண்ணை இழந்து வாடும் சுக்கிராச்சாரியார் பூலோகத்துக்கு சென்று மாங்காட்டில் தவம் இருந்து சிவன் அருளாள் கண் பார்வையை பெற்றார். காதலுக்குரிய கிரகமான சுக்கிரன் இவ்வாறு கண்களை இழந்ததால் தான காதலுக்கு கண் இல்லை என்று வழக்கு தோன்றியது.
சொகுசான வாழ்க்கை
சுக்கிரனின் ஆதிக்கம் இருந்தால்தான் ஒருவன் பூமியில் சொகுசான வாழ்க்கையை வாழமுடியும். நமக்கு அழகை, வசீகரத்தை வழங்குவதில் முன்னிலை வகிக்கும் கிரகமும் இது தான். அதிர்ஷ்டத்தை வழங்குவதும் சுக்கிரனின் பார்வையே. எனவேதான் வசதியாக வாழ்பவர்களைப் பார்த்து உனக்கு சுக்கிரதிசையா என்று கேட்கின்றனர்.
சுக்கிரன் செவ்வாய் ராகு கூட்டணி
பொதுவாக சுக்கிரன் ஒருவருக்கு மிகவும் பலம் பெறுவது கூடாது. அமுதமாக இருந்தாலும் அளவுக்கு மிஞ்சினால் நஞ்சு தான்.காமத்தை சுக்கிரன் ஆட்சி செய்கிறான். கோபத்தை செவ்வாய் ஆட்சி செய்கிறான். ஒருவர் ஜாதகத்தில் இருவரும் சேர்ந்து விட்டாலோ ஒருவரை ஒருவர் பார்த்து விட்டாலோ இருவரும் பரிவர்த்தனை ஆகி விட்டாலோ இருவரும் சனியுடனோ, ராகுவுடனோ சேர்ந்தாலும் நிலைமையை நன்றாக கவனிக்க வேண்டும். இந்த ஜாதகர்கள் காம சுகத்தில் திளைப்பவர்கள். அவர்களுக்கு ஏற்ற ஜோடியை இணைப்பதுதான் நல்லது.
ஜாக்கிரதை மக்களே
மேஷம் மற்றும் விருச்சிகத்தில் சுக்கிரன் அமைந்தால்,அவரது பெயர் பெண்களால் கெடும். ஏகப்பட்ட சச்சரவுகளை வாழ்வில் சந்திக்க நேரும். சுக்கிர திசையில் இது பல மடங்காகும். காரணம் மேஷம், விருச்சிகம் செவ்வாயின் ஆதிக்கம் பெற்ற வீடாகும்.
அதிர்ஷ்டம் கூடி வரும்
சுக்கிரனுக்கு ரிஷபம்,துலாம் சொந்த வீடு. ஒருவரது ராசியில் பிறக்கும்போதே சுக்கிரன் தனது சொந்த வீடுகளான ரிஷபம்,துலாமில் இருந்தால் அவர் தனது முயற்சியால் பெரும் செல்வம்,பெயர்,புகழ் அரசாங்க வேலை எல்லாவற்றையும் அடைவார்.
பொருள் சேரும்
மிதுனத்தில் இருந்தால்,அவர் நிர்வாக திறமை கொண்டவராகவும் நல்ல புத்திசாலியாகவும் இருப்பார்.அரசு வேலை கிடைத்து நிறைய பொருள் சேர்க்க வாய்ப்புண்டு. கடகத்தில் இருந்தால், அவர்களுக்கு அகங்காரம் இருக்கும்.இதனால் துன்பங்களை அனுபவிக்க நேரிடும். சிலருக்கு இரு தாரங்கள் அமைந்து துன்பப்படும் சூழ்நிலையும் உண்டாகும்.
சிம்மம், கன்னி
சிம்மத்தில் இருந்தால் மனைவி மூலம் நிறைய வருமானம் வரும்.இவரை விட இவர் மனைவி புகழ்பெற்றவராக இருப்பார்.பெண் குழந்தைகள் பிறக்க வாய்ப்பு அதிகம். நீச வீடான கன்னியில் சுக்கிரன் அமைந்தால் ராசிக்காரர் ஏழ்மை நிலை ஏற்படும். அதே நேரத்தில் நீசபங்கமடைந்து விட்டால் அவருக்கு ராஜயோகம் கூடி வரும்.
மகரம் கும்பம்
சனியின் வீடான மகரம்,கும்பத்தில் சுக்கிரன் இருந்தால் அவர் தப்பான ஆசை கொண்டவராக இருப்பார். சனி வீட்டில் சுக்கிரன் இருப்பதால் பல பெண்களிடம் பழக்கம் ஏற்பட வாய்ப்புண்டாகும். இல்லற வாழ்வு இதமாக இருக்காது.
மீனராசியில் சுக்கிரன்
தனது உச்ச வீடான மீனத்தில் சுக்கிரன் இருந்தால் அந்த ராசிக்கார ஏதாவது ஒரு கலையில் வல்லவராக இருப்பார்.அதன் மூலம் புகழும்,செல்வாக்கும் பெறுவார்.
பரிகாரம் செய்யுங்க பலன் உண்டு
ஜாதகத்தில் சுக்கிரன் பாதகமாக அமைந்தவர்கள், சுக்கிரப் பரிகாரத் தலங்களை வெள்ளிக்கிழமை தரிசிப்பது நல்லது. கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருப்பவர்களும் சுக்கிர வழிபாட்டால் மீண்டும் ஒன்று கூடுவார்கள். கும்பகோணம் அருகில் உள்ள கஞ்சனூர், மயிலாப்பூர் வெள்ளீஸ்வரர் ஆலயம், குன்றத்தூர் அருகில் உள்ள மாங்காடு ஆகிய ஆலயங்கள் சுக்கிர பரிகார தலங்கலாகும்.