குங்குமம் தவறுவது... தாலி, மெட்டி கழண்டு விழுவது நல்லதா? கெட்டதா?
குளிக்கும் போது தாலி கழண்டு விழுந்தாலே அல்லது கால் விரல்களில் இருந்து மெட்டி கழண்டு விழுந்தாலே அதை அபசகுனமாக நினைத்து பதறி போய் விடுவார்கள் அதுபோலத்தான் குங்குமம் கை தவறி கொட்டி விட்டாலும் பதற்றம் ஏற்
சென்னை: நாம் கைதவறி விழுவதும், திருமணமான பெண்ணின் கழுத்தில் இருந்து தாலி கழண்டு விழுவதையும் அபசகுனமாக கருத தேவை இல்லை. கோவிலில் கூட்ட நெரிசலில் நாம் வாங்கும் பிரசாதம் கைதவறி கீழே விழுந்துவிடும். இதுபோன்ற நிகழ்வுகள் எல்லாம் நம்முடைய அஜாக்கிரதையால் நிகழ்வதே தவிர இதெல்லாம் அபசகுனம் கிடையாது. தாலி கழண்டு விழுவது, மெட்டி கழண்டு விழுந்து மாயமாவதால் ஆபத்து எதுவும் நடக்காது கணவரின் மாங்கல்ய பலம் அதிகமாகும் என்கின்றனர் ஜோதிடர்கள்.
குளிக்கும் போது தாலி கழண்டு விழுந்தாலே அல்லது கால் விரல்களில் இருந்து மெட்டி கழண்டு விழுந்தாலே அதை அபசகுனமாக நினைத்து பதறி போய் விடுவார்கள் அதுபோலத்தான் குங்குமம் கை தவறி கொட்டி விட்டாலும் பதற்றம் ஏற்படும். பூஜை அறையில் ஏற்றி வைத்த தீபம் தானாக அணைந்தாலும் அந்த பதற்றம் வரும். இது ஒன்றும் அபசகுனம் அல்ல என்று கூறுகின்றனர் ஜோதிடர்கள்.
நம்மை மீறி நடக்கும் சில செயல்களையே நாம் சகுனமாக கருத வேண்டும். உதாரணத்திற்கு நாம் வெளியில் கிளம்பும்போது வாசலில் வந்து அண்ணாந்து பார்க்கையில் கண்ணில் கருடன் தென்பட்டால் அது நல்ல சகுனம். இது நம்மை மீறிய விஷயம். இதுபோல் நடக்கும் நிகழ்வுகளையே சகுனமாக கருதவேண்டும்.
கிரக தோஷம் நீங்கும்
மாங்கல்யம் கழண்டு விழுதல், மெட்டி, திருமண மோதிரம் காணாமல் போகுதல் போன்ற சகுனம் நல்லதாகும் இதனால் மாங்கல்ய பலம் அதிகமாகும். வீட்டில் பூஜை அறையில் காமாட்சி விளக்கு தவறுதல், பாம்பு கடிப்பது போல் கனவு காணுதல், பாம்பு நம் மேல் ஏறுதல், குங்குமம், விபூதி தவறுதல், பெரிய விபத்தில் இருந்து சிறு காயத்துடன் தப்பி பிழைத்தல் போன்றவைகளால் கிரகதோஷங்கள் நம்மை விட்டு விலகும் அறிகுறிகளாகும்.
அபசகுனம் கிடையாது
நம்முடைய வாழ்வில் நாம் புனிதமாக கருதும் விசயங்கள் சில சமயம் தவறும்போது அதை அபசகுனமாக நினைக்க வேண்டியதில்லை அதுவும் ஒரு யோகம்தான்,பரிகாரம்தான் அதனால் யதார்த்தமாக நிகழும் விசயங்களுக்கு எதிர்மறை சிந்தனைகளை நினைத்து மனதை குழப்பி கொள்ளாமல் நல்ல மன தைரியத்துடன் இருக்க வேண்டும். பெண் தெய்வங்களான துர்க்கை, லட்சுமி, சரஸ்வதிக்கு குங்கும அர்ச்சனை சிறப்பு.
தேங்காய் அழுகல்
இதே போல பூஜைக்கு வீட்டிலோ, பூஜையிலோ தேங்காய் உடைக்கும்போது அது அழுகிய நிலையில் இருந்தால் அதை நினைத்து கலங்க வேண்டாம்.
கோவிலில், பூஜையில் உடைக்கும் தேங்காய் அழுகியிருந்தால் அது நல்ல அறிகுறி என்றும் அவர்களை பிடித்து இருக்கும் தீய சக்திகள், கண் திருஷ்டி போன்றவை அகன்று போகிறது. எனவே இது நல்ல அறிகுறி என்று தான் கூறப்படுகிறது.
தேங்காயில் பூ இருப்பது
உடைக்கும் தேங்காய் கொப்பரையாக இருந்தால் அவர்களின் வீட்டில் சுப காரியங்கள் நடக்க வாய்ப்புகள் உள்ளது என்று பொருள். தேங்காய் உடைக்கும் போது அதில் பூ இருந்தால் அது பணவரவு, நல்ல லாபம், எதிர்பாராத விஷயங்கள் போன்றவை நடக்கும் என்பதை குறிக்கும் ஒரு சகுனமாகக் கருதப்படுகிறது.
கை வளையல் முக்கியம்
அதே போல வீட்டில் பெண்கள் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்றும் கூறியுள்ளனர். பெண்கள் இரவில் விளக்கு வைத்தவுடன் அழக் கூடாது. காலை ஆட்டக் கூடாது. மல்லாந்து படுக்கக் கூடாது. விளக்கு வைத்த பின் வளையல்களைக் கழற்றக் கூடாது. திருமணம் ஆன பெண்கள் கைகளில் வளையல் அணியாமல் உணவு பரிமாறக் கூடாது. செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் வீட்டை விட்டுச் சென்றால் இரவு வீடு திரும்பி விட வேண்டும். அன்று பிறர் வீடுகளில் தங்கக் கூடாது.
தீபம் ஏற்றுவது
வீட்டில் திருவிளக்கு ஏற்றுவதற்கு விளக்கெண்ணெய் தீபம் மிகவும் நல்லது. வீட்டில் குறைந்தது இரண்டு விளக்குகள் ஏற்ற வேண்டும். குத்துவிளக்கு கிழக்கு முகமாகவும், துணை விளக்கு வடக்கு முகமாகவும் இருத்தல் நல்லது. சுவாமியிடம் ஏற்றிய தீபத்தை வாயினால ஊதி அணைக்கக் கூடாது. பூக்களை வைத்துதான் தீபத்தை அணைக்க வேண்டும்.
தலையை விரித்து போடாதீங்க
இப்போ லூஸ் ஹேர் விடுவது ஸ்டைல் ஆகிவிட்டது. கோவிலுக்கு செல்லும்போதும் பூஜை செய்யும்போதும் பெண்கள் முடியைத் தொங்கவிடாமல் நுனி முடிச்சுப் போடவேண்டும். துளசி, வில்வம் இவற்றை செவ்வாய், வெள்ளி, அமாவாசை, பெளர்ணமி, துவாதசி, சாயங்காலம், இரவு நேரம் பறிக்கக் கூடாது.
வீட்டில் பூஜை செய்யும்போது பூத்தட்டை மடியில் வைத்து பூவெடுத்து பூஜை செய்யக் கூடாது.
கல் உப்பு
வீட்டை செவ்வாய்கிழமை, வெள்ளிக்கிழமை துடைக்க கூடாது. மற்ற நாட்களில் துடைக்கலாம். துடைக்கும் போது தண்ணீரில் ஒரு கை கல் உப்பு போட்டு துடைத்தால் கண் திருஷ்டி குறையும். வீட்டில் பணப்பெட்டி தென்மேற்கு திசையில் கிழக்கே பார்த்து அல்லது வடக்கே பார்த்து வைக்கலாம் அல்லது வடமேற்கு திசையில் கிழக்கே பார்த்து வைத்தால் பணம் சேரும் வாய்ப்பு அதிகம் என்கின்றனர் அனுபவசாலிகள்.