திருச்செந்தூரில் கந்த சஷ்டித் திருவிழா..அக்டோபர் 30ல் சூரசம்ஹாரம்..அலை கடலென திரளப்போகும் பக்தர்கள்
தூத்துக்குடி: முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் கந்த சஷ்டிப் பெருவிழா வரும் அக்டோபர் 25ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார விழா அக்டோபர் 30ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்க் கடவுளான முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடாக திகழ்வது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி ஆலயம். இக்கோயிலில் வருடந்தோறும் நடைபெறும் திருவிழாக்களில் முக்கியமானது ஐப்பசி மாதம் நடைபெறும் சூரசம்ஹாரத் திருவிழாவாகும்.
இவ்விழாவினைக் காண்பதற்கு தமிழகம் முழுவதும் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூருக்கு படையெடுத்து வருவது வழக்கம். இவ்விழாவின் முக்கிய வைபவமாக கடற்கரையில் நடைபெறும் சூரசம்ஹாரத் திருவிழாவைக் காண ஏராளமான பக்தர்கள் கூடுவதுண்டு. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா நோய்த்தொற்று அபாயம் காரணமாக, பக்தர்கள் யாருக்கும் அனுமதியின்றி சூரசம்ஹாரத் திருவிழாவின் அனைத்து நிகழ்வுகளையும் கோயில் வளாகத்திற்குள்ளேயே மிக எளிமையாக நடத்தி முடித்தனர். பக்தர்கள் இந்நிகழ்வுகளை ஆன்லைன் மூலமாகக் கண்டு தரிசித்தனர்.

கந்த சஷ்டி விழா
நடப்பு ஆண்டு கந்த சஷ்டிப் திருவிழா வரும் அக்டோபர் 25ஆம் தேதி தொடங்குகிறது. இதை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்ரமணியர் ஆலயத்தின் இணை ஆணையர் ம.அண்புமணி செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடப்பு ஆண்டு கந்த சஷ்டித் திருவிழா வரும் அக்டோபர் 25ஆம் தேதி யாக சாலை பூஜையுடன் இனிதே தொடங்குகிறது. அதை முன்னிட்டு அன்றைய தினம் அதிகாலை சுமார் 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 1:30 மணியளவில் விஸ்வரூப தரிசனமும், 2 மணியளவில் உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 5:30 மணிக்கு ஸ்ரீஜெயேந்திநாதர் யாகசாலைக்கு புறப்பாடு வைபவமும், தொடர்ந்து யாகசாலை பூஜையும் நடைபெறும்.

சுப்ரமணியசுவாமி கோவில்
காலை 9 மணியளவில் உச்சிக்கால பூஜையும், பிற்பகல் 3 மணியளவில் சாயரட்சை தீபாராதனையும், மற்ற கால பூஜைகளும் வழக்கம் போல நடைபெறும். 2ஆம் நாள் முதல் 5ஆம் நாள் வரையும் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சுமார் 3:30 மணியளவில் விஸ்வரூப தரிசன வைபவமும், அதிகாலை 4 மணியளவில் உதயமார்த்தாண்ட அபிஷேகமும், அதைத் தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடைபெறும்.

சூரசம்ஹாரத்திருவிழா
அக்டோபர் 30ஆம் தேதியன்று, 6ஆம் நாளன்று, கந்த சஷ்டித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரத் திருவிழாவன்று, அதிகாலை 1 மணியளவில் நடை திறக்கப்பட்டு, 1:30 மணியளவில் விஸ்வரூப தரிசனமும், 2 மணியளவில் உதயமார்த்தாண்ட அபிஷேகமும், காலை 9 மணியளவில் உச்சிக்கால அபிஷேகமும், பிற்பகல் 1 மணியளவில் சாயரட்சை தீபாராதனையும், மாலை சுமார் 4 மணிக்கு மேல் கடற்கரையில் சூரசம்ஹார வைபவமும் நடைபெறும்.

திருக்கல்யாண வைபவம்
அக்டோபர் 31ஆம் தேதியன்று, திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு, அதிகாலை 3 மணியளவில் கோயில் நடை திறக்கப்பட்டு, 3:30 மணியளவில் விஸ்வரூப தரிசனமும், அதிகாலை 4 மணியளவில் உதயமார்த்தாண்ட அபிஷேகமும், அதைத் தொடர்ந்து வழக்கமான மற்ற பூஜைகளும் நடைபெறும். அதிகாலை 5 மணியளவில் தெய்வானை அம்மன் தபசுக் காட்சிக்கு புறப்பாடு வைபவமும், மாலை சுமார் 6:30 மணியளவில் சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை அம்மன் தோள் மாலை மாற்றி நிகழ்வும், இரவில் திருக்கல்யாண வைபவமும் நடைபெறும்.

லட்சக்கணக்கான பக்தர்கள்
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா நோய்த் தொற்று அபாயம் காரணமாக கந்த சஷ்டித் திருவிழா பக்தர்கள் யாரும் இன்றி மிகவும் எளிமையாக நடைபெற்றது. ஆனால், தற்போது இந்நோயின் தாக்கம் முற்றிலும் நீங்கிவிட்டதால், இந்த ஆண்டு நடைபெறும் கந்த சஷ்டித் திருவிழாவைக் கண்டு தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications