சனி பெயர்ச்சி 2023: 30 ஆண்டுகளுக்குப் பின் இந்த 6 ராசிக்காரர்கள் வாழ்க்கையை புரட்டி போடப்போகும் சனி
சென்னை: 30 ஆண்டுகாலம் வாழ்ந்தவரும் இல்லை..30 ஆண்டுகாலம் தாழ்ந்தவரும் இல்லை என்று சொல்வார்கள். சனிபகவான் பயணத்தை வைத்தே அப்படி கூடியிருக்கின்றனர். சனிபகவான் ஒரு ராசி மண்டலத்தை கடக்க 30 ஆண்டு காலம் எடுத்துக்கொள்கிறார். திருக்கணித பஞ்சாங்கப்படி ஜனவரி 17 முதல் சனிபகவான் கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது வீடான கும்ப ராசியில் ஆட்சி பெற்று அமர்கிறார் சனிபகவான். இந்த இடப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று பார்க்கலாம்.
சனிபகவான் ஒருவரின் ஆயுள்காலத்தில் அர்தாஷ்டம சனியாக, கண்டச்சனியாக, அஷ்டம சனியாக ஆட்டி வைப்பார். ஏழரை ஆண்டுகாலம் ஏழரை சனியாக அமர்ந்து படிப்பினைகளைத் தருவார் .நிகழ உள்ள சனிப்பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி காலம் தொடங்குகிறது. சில ராசிக்காரர்களுக்கு அர்த்தாஷ்டம சனி, கண்டச்சனி, அஷ்டம சனி தொடங்குகிறது.
சனி பகவான் நீதிமான் எல்லோரையும் தண்டிப்பதில்லை. நல்லவர்களுக்கும் நேர்மையானவர்களுக்கும் சனிபகவான் எந்த சங்கடமும் கொடுப்பதில்லை. ஆணவத்தோடு ஆடுபவர்களின் தலையில் தட்டியும் குட்டியும் வைத்து படிப்பினையை தருவார் சனிபகவான்.
கடகம்
கடக ராசிக்காரர்களே உங்களுக்கு இது அஷ்டமத்து சனி காலம் என்பதால் அனைத்து விசயங்களிலும் கவனம் தேவை. பொது இடத்திலும் வேலை செய்யும் இடங்களிலும் தேவையற்ற பேச்சுகளை தவிர்ப்பது நல்லது, புதிய முயற்சிகளில் இறங்கி வெற்றி பெற பாடுபட வேண்டி இருக்கும். புதிய தொழில்கள் தொடங்குவதற்கு முன் நன்கு ஆலோசிக்க வேண்டும். கிடைத்த வேலையை திருப்திகரமாக செய்து வரவும். வேறு வேலை மாறும் முன் நன்கு ஆலோசித்து செய்யவும். வெளியூர் பயணங்களால் அலைச்சல்களும் வேதனைகளும் ஏற்படும். பெண்கள் தங்கள் உடல் நலனில் அக்கறை காட்டவும். சளித்தொந்தரவு, காய்ச்சல், பல் வலி, கண்ணில் குறைபாடுகள் வந்து நீங்கும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. யாரும் பணம் கடனாக கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம் கவனம் தேவை.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே சனிபகவான் கண்டச்சனியாக வரப்போகிறார். ஏழாம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியை பார்க்கும் சனி பகவான் சச மகா யோகத்தை தரப்போகிறார். உங்கள் செலவுகளைக் குறைத்து,சேமிக்கத் தொடங்குங்கள். சகோதரர்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். தாயாரின் உடல் நிலை சீராகும். சிலர் வேலை விசயமாக குழந்தைகளை விட்டு பிரிய நேரிடும் அல்லது அவர்கள் உங்களை விட்டு பிரிவார்கள். பொறுப்பும் குடும்ப பாரமும். தானாகவே வந்து உங்கள் தலையில் உட்கார்ந்து கொள்ளும். சுபகாரியங்கள் நடக்க சற்று போராட வேண்டி இருக்கும். உடல் ஆரோக்யத்தில் அதிக கவனம் தேவை. பிள்ளைகளின் எதிர்காலத்துக்காகக் கொஞ்சம் சேமிக்கத் தொடங்குவீர்கள். வேலை செய்யும் இடத்தில் பொறுப்பு கூடும். இந்த கால கட்டத்தில் மனதையும் உடலையும் ரிலாக்ஸ் ஆக வைத்துக்கொள்ளுங்கள்.
சனி பெயர்ச்சி பலன் 2023: கும்பத்திற்கு இடம் மாறும் சனி பகவான். கோடிகளில் புரளும் யோகம் யாருக்கு?
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே சனி அர்த்தாஷ்டம சனியாக இருந்தாலும் நான்காம் வீட்டில் ஆட்சி பெற்று அமரப்போவதால் யோகம்தான் ஏற்படும். வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கவும். வேலைக்கு ஏற்ற ஊதிய உயர்வும் கிடைக்கும். கையில் பணப்புழக்கம் சரளமாக இருக்கும். தங்க நகைகளை கவனமாகக் கையாளுங்கள். குழந்தைகளின் வருங்காலம் குறித்து ஒரு வித பயம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களைக் ஆலோசிக்காமல் எந்த ஒரு முக்கிய முடிவும் எடுக்க வேண்டாம். புதிய தொழில் தொடங்க வாய்ப்பும், லாபமும் கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி, தகவல் தொடர்பு துறைகளில் லாபம் அதிகரிக்கும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். சனி பகவானால் ஏற்படும் பாதிப்புகள் குறைய அனுமனை வணங்க நன்மைகள் நடைபெறும்.
மகரம்
மகர ராசிக்காரர்களே..இன்னும் இரண்டரை ஆண்டு காலம் சனிபகவான் ஏழரை சனியில் பாத சனியாக நீடிக்கிறார். சனி ஜென்ம ராசியில் இருந்து இரண்டாவது வீட்டிற்கு செல்கிறார். வார்த்தைகளில் கவனமும் நிதானமும் அவசியம். குடும்ப உறுப்பினர்களிடையே பேசும் வார்த்தைகளில் கவனம் அவசியம். விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. எதிர்பாராத தனவரவும் பொருள் வரவும் கிடைக்கும். கடனாக கொடுத்த பணம் வட்டியுடன் வந்து சேரும். கைக்கு வராத பணம் வந்து சேரும். ஏற்றுமதி இறக்குமதி நல்ல லாபகரமாக அமையும். தாய் மாமன்களால் எதிர்பாராத நன்மை ஏற்படும். பணியிடங்களில் வேலைப்பளு ஏற்படும். பாத சனி காலம் என்பதால் கால்களில் கவனம் தேவை. குடும்பத்தோடு புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். ஆலய தரிசனம் மன அமைதியைத் தரும்.
கும்பம்
சனி பகவான் உங்கள் ராசியில் ஜென்ம சனியாக வரப்போகிறார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி பகவான் உங்கள் ராசியில் ஆட்சி பெற்று அமர்கிறார். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உணவு விசயத்திலும் கவனம் அவசியம். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து காணப்படும். உறவினர்களிடம் இதுவரை இருந்த வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி நட்பும் நேசமும் உருவாகும். வீட்டில் விலையுயர்ந்த பொருள்களை கவனமாகப் பார்த்துக்கொள்ளவும். யாரையும் நம்பி முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். புதிய தொழில் வியாபாரத்தில் அதிக அளவில் முதலீடுகளை செய்ய வேண்டாம். ஜென்ம சனியால் ஏற்படும் பாதிப்புகள் குறைய சனிக்கிழமை பெருமாள் கோவில்களுக்கு சென்று அனுமனை வெற்றிலை மாலை சாற்றி வணங்கி வரலாம்.
மீனம்
30 ஆண்டுகளுக்குப் பிறகு ஏழரை சனி தொடங்குகிறது. சனிபகவான் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்யப்போவதால் எவ்வளவு பணம் வந்தாலும் கூடவே விரைய செலவுகளும் அதிகரிக்கும். இதுவரை வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. வேலைக்காக வெளியூர் மற்றும் வெளிநாடு செல்ல சந்தர்ப்பங்கள் சாதகமாக வந்து சேரும். தொழில் செய்ய கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி லாபகரமாக அமையும். உறவினர்களால் நன்மைகள் ஏற்படும். அடுத்தடுத்து மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். சனியால் ஏற்படும் சங்கடங்கள் நீங்க காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி தினத்தில் விளக்கு ஏற்றி வழிபடலாம். தன்வந்திரி பீடத்தில் நடைபெற உள்ள சனி தோஷ நிவர்த்தி யாகத்தில் பங்கேற்கலாம்.