ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் - தேரோட்டம் ரத்து
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 வைணவ தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர்த்திருவிழா 11 நாட்கள் சிறப்பாக நடைபெறும்.
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக சித்திரைத் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கருட மண்டபத்தில் கருட வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார் நம்பெருமாள்.
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 வைணவ தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர்த்திருவிழா 11 நாட்கள் சிறப்பாக நடைபெறும்.
இந்த ஆண்டிற்கான சித்திரை தேர்த்திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு கொடிமர மண்டபம் வந்தார். காலை 5.30 மணிக்கு மேல் மேஷ லக்னத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து கண்ணாடி அறையை சென்றடைந்தார். தொடர்ந்து பிற்பகல் 2 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை பேரிதாடனம் நடைபெற்றது.

நம்பெருமாள் புறப்பாடு
நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் புறப்பட்டு மாலையில் கருடமண்டபம் சென்று, சந்தனு மண்டபம் வந்தடைந்தார்.
சந்தனு மண்டபத்தில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு யாகசாலையை சென்றடைந்தார். அங்கு நம்பெருமாள் திருமஞ்சனம் கண்டருளுளினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார்.

நம் பெருமாள் தரிசனம்
விழாவின் இரண்டாம் நாளில் கற்பக விருட்ச வாகனத்திலும், இன்று காலை சிம்ம வாகனத்திலும், மாலையாளி வாகனத்திலும், நம்பெருமாள் எழுந்தருளினார். செவ்வாய்க்கிழமையன்று காலை இரட்டை பிரபை வாகனத்திலும், மாலை கருடவாகனத்திலும், 5ஆம்தேதி காலை சேஷவாகனத்திலும், மாலை அனுமந்த வாகனத்திலும் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.

நெல்லளவு கண்டருளும் நம்பெருமாள்
6ஆம் தேதி காலை தங்க ஹம்ச வாகனத்திலும், மாலை யானை வாகனத்திலும் நம்பெருமாள் எழுந்தருளி கோவில் வளாகத்தில் வலம் வந்து கருடமண்டபத்தில் எழுந்தருளுகிறார். 7ஆம் தேதி நெல்லளவு கண்டருளுகிறார். 8ஆம்தேதி காலை வெள்ளி குதிரை வாகனத்திலும், மாலை தங்க குதிரை வாகனத்திலும் கருடமண்டபத்தில் எழுந்தருளுகிறார்.

கருட வாகன சேவை
9ஆம் நாள் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் நடைபெறும். ஆனால் கொரோனா பரவல் தடை உத்தரவின் காரணமாக நம்பெருமாள் சித்திரை தேருக்கு பதிலாக அன்று காலை 6.30 மணிக்கு கருடமண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளுகிறார். 10ஆம் தேதி சப்தாவரணம் நடைபெறுகிறது. விழாவின் நிறைவு நாளான 11ஆம் தேதி நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் எழுந்தருளுகிறார்.












Click it and Unblock the Notifications