திடீரென ஒளிபரப்பான சினிமா பாட்டு..அதிர்ந்து போன ஏழுமலையான் பக்தர்கள் - என்னாச்சு?
: திருப்பதி ஆன்மிக சேனலில் சினிமா பாடல்கள் ஒளிபரப்பியதால் பக்தர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
திருமலை: திருப்பதி ஆன்மிக சேனலில் சினிமா பாடல்கள் ஒளிபரப்பியதால் பக்தர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். சினிமா பாடல்களை ஒளிபரப்பியது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
திருப்பதி ஏழுமலையான் கோயில் சார்பில் இந்து தர்ம பிரசாரத்தின் பாகமாக, 'ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி தொலைக்காட்சி இயங்கி வருகிறது. இதில் தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி ஆகிய 4 மொழிகளில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது.
தெலுங்கில் ஒளிபரப்பு செய்யப்படும் நிகழ்ச்சிகள், திருமலையில் ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் காணும் விதமாக சிஆர்ஓ, அலுவலகம், கல்யாண கட்டா உள்ளிட்ட 4 இடங்களில் பெரிய எல்இடி திரைகள் வைக்கப்பட்டுள்ளன. இதில், 24 மணி நேரமும் ஆன்மிக நிகழ்ச்சிகள் மட்டுமே ஒளிபரப்பாகும்.

பக்தர்கள் தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தமிழ் புத்தாண்டுக்கு முன்பு வரை 40 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்து வந்தனர். சாமி தரிசனம் செய்வதற்காக திருப்பதியில் 3 இடங்களில் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வந்தது.

கூட்டம் அதிகரிப்பு
பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் இலவச தரிசன டிக்கெட் வழங்கும் கவுண்டர்கள் மூடப்பட்டு அனைத்து பக்தர்களும் இலவச தரிசனத்தில் நேரடியாக அனுமதிக்கப்பட்டனர். கடந்த சில நாட்களாக ஏழுமலையான் கோவிலில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். நேரடியாக பக்தர்கள் அனுமதிக்கப்படுவதால் விரைந்து சாமி தரிசனம் செய்ய முடிகிறது.

2 மணி நேரத்தில் தரிசனம்
சனிக்கிழமையன்று காலையில் ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனத்தில் 7 குடோன்கள் மட்டுமே நிரம்பி வழிந்தது. இதனால் 2 மணி நேரத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். திருப்பதியில் நேற்று 63,084 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 28,563 முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.12 கோடி உண்டியல் காணிக்கையாக வசூலானது.

பக்தி சேனலில் சினிமா பாடல்கள்
ஏழுமலையான் கோவில் பக்தி தொலைக்காட்சியில் திடீரென மாலை 5.40 மணி முதல் 6.15 மணி வரை விளம்பர இடைவேளைக்குப் பிறகு திடீரென சினிமா பாடல்கள் ஒளிபரப்பானது. இதை கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையறிந்த டிவி சேனல் ஊழியர்கள் உடனே அதனை நிறுத்தி ஆன்மிக நிகழ்ச்சிகளை ஒளிபரப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

காரணம் என்ன?
இதுகுறித்து தேவஸ்தான அதிகாரிகள் கூறுகையில், ''செட்டாப் பாக்சில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒளிபரப்பில் ஏற்பட்ட குளறுபடியால் அரைமணி நேரம் இதுபோன்ற நிலை ஏற்பட்டது. பின்னர் அவை சரி செய்யப்பட்டது,'' என்றனர். ஏற்கனவே பக்தருக்கு அனுப்பிய தேவஸ்தான தொலைக்காட்சி யூடியூப் லிங்க்கில் தவறுதலாக ஆபாச படம் ஒளிபரப்பானது. இது குறித்த புகாரின் பேரில் 4 ஊழியர்களை தேவஸ்தானம் பணி நீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.

லட்டுக்கு தட்டுப்பாடு
திருப்பதியில் லட்டுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், கூடுதல் லட்டு தேவைப்படும் பக்தர்களுக்கு ஒரு குடும்பத்துக்கு இரண்டு என்ற வீதத்தில் மட்டுமே இனி லட்டு வழங்கப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications