தம்பதியர் ஒற்றுமை காக்கும் கார்த்திகை சோம வார விரதம்
குற்றாலம்: கார்த்திகை மாதம் திங்கட்கிழமை களில் பெண்கள் திருமாங்கல்யம் நிலைக்க வேண்டுமென சிவாலயங்களில் வழிபாடு நடத்தி விரதமிருப்பது காலங்காலமாய் இந்துக்களிடையே இருந்துவரும் வழக்கம்.
ஒளி மாதமான, கார்த்திகை சோமவார நாட்களில் சிவதரிசனம் செய்தால், குடும்ப ஒற்றுமை ஏற்படும். பிரச்னைகளை கணவனும், மனைவியும் இணைந்து சமாளிக்கும் மனதிடம் உண்டாகும் என்பது ஐதீகம்.

கார்த்திகை மாதம் திங்கள்கிழமை சோமவார விரதத்தை சந்திரன் அனுஷ்டித்ததாகவும், அதன் காரணமாக சோமவார விரதம் எனப் பெயர் வந்ததாகவும் சொல்வர். "சோமன்' என்றால் "சந்திரன்'. அவனை தலையில் சூடிய சிவனை "சோமசுந்தரர்' என்பர்.
நவக்கிரகங்களில் சந்திரன் ‘மனோகாரகன் ஆவார். இவரே மனிதர்களின் மனதில் எழும் எண்ணங்களை நிர்ணயிப்பவராக இருக்கிறார். குழப்பமான அல்லது தெளிவான முடிவெடுப்பதற்கு காரணகர்த்தா இவரே. எனவே, மனக் குழப்பம் நீங்கி தெளிவு பிறக்க திங்கள்கிழமைகளில் சிவவழிபாடு செய்வது சிறப்பு பெறுகிறது.
சங்கு அபிஷேகம்
சங்கு லட்சுமி கடாட்சமுடையது. எனவே, இந்நாளில், செல்வ அபிவிருத்திக்காக சிவனுக்கு சங்காபிஷேகம் செய்கின்றனர். சிவபெருமான் அபிஷேகப் பிரியர். அன்று அவருக்கு சங்காபிஷேகம் செய்வதால் சமுதாயத்துக்கும் நாம் நன்மை செய்தவர்களாவோம்.
இந்த அபிஷேகத்தால் உலகில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்படும். மழை தேவையான அளவுக்குப் பொழியும் என்பதும் சங்காபிஷேகத்தின் நோக்கம். நவம்பர்17,24, டிசம்பர் 1, 8,15ல் சிவாலயங்களில் சங்காபிஷேகம் தரிசிக்கலாம்.
சங்காபிஷேகத்தின் பலன்:
சங்கபிஷேகத்தால் சகோதர ஒற்றுமையும் வளரும். சங்கு செல்வத்தின் அம்சம் என்பதால், செல்வ அபிவிருத்திக்காகவும் சங்காபிஷேகம் செய்வர். இதைத் தரிசிப்பவர்களுக்கும் லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.
செல்வ விருத்தி
வீடுகளில் நுழைவு வாயில் தரையில் சங்கு பதிக்கும் வழக்கம் இருக்கிறது. சில வீடுகளின் வாசல் முன்பும் சங்கைக் கட்டுவதுண்டு. இதனால் திருஷ்டி தோஷம் நீங்கி செல்வம் விருத்தியாகும்.இந்த நாட்களில் சிவாலயங்களில் சங்காபிஷேகம் காண்பது சிறப்பு வாய்ந்தது.
சோம வார விரதம்
சோமவாரத்தன்று பகலில் ஒரு பொழுதோ அல்லது இரவிலோ உபவாசம் (சாப்பிடாமல் இருப்பது) இருக்க வேண்டும். ஒரு மூத்த அந்தணரையும், அவரது மனைவியையும் வீட்டுக்கு அழைத்து, அவர்களை சிவபார்வதியாகக் கருதி. அவர்களுக்கு புத்தாடை எடுத்துக் கொடுத்து, இயன்றவரை தானம் கொடுக்க வேண்டும். சிவாலயங்களில் சிவபெருமானுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து, பக்தர்களுக்கு விநியோகிப்பதுடன், அன்னதானமும் செய்ய வேண்டும்.
தம்பதியர் ஒற்றுமை
கணவனும், மனைவியும் ஒற்றுமையுடன் வாழவும், தீர்க்காயுளுடன் வாழவும் இந்த விரதத்தை அனுஷ்டிக்கலாம். இந்நாளில் தம்பதி சமேதராக சிவன் கோயிலுக்குச் சென்று வழிபட்டு வர வேண்டும். வாழ்வில் தவறு செய்யாத மனிதர்களே இல்லை. இதற்காக மனம் வருந்துவோர் இந்த விரதத்தை அனுஷ்டித்து, இனி அவ்வாறு தவறு செய்யாமல் இருக்க உறுதி எடுத்தால், அவர்களது பாவங்கள் களையப்படும் என்பது நம்பிக்கை. பதவி உயர்வுக்காகவும் இந்த விரதத்தை அனுஷ்டிக்கலாம்.
குற்றாலநாதர் கோவில்
குற்றால அருவியில் நீராடுவது இந்நாளில் மிகமிக விசேஷம். ஏனெனில், இங்குள்ள குற்றாலநாதர் கோயிலே சங்கு வடிவமுடையது. இதனைத்தொடர்ந்து இன்று அகத்திய முனிவருக்கு திருமணக் கோலத்தில் காட்சியளித்த சிவபெருமான்,பார்வதி தம்பதிகள் வாழும் இடமாக கருதப்படும் குற்றாலத்தில் காலைமுதலே ஆயிரக்கணக்கான பெண்கள் அருவியில் நீராடி குற்றலநாதரை வழிபட்டு விரதத்தை தொடங்கினர். இன்று அதிகாலை முதல் அருவியில் பெண்கள் மட்டுமே குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.அதன் பின்னே சபரிமலைக்கு மாலை அணிவிக்கும் ஐயப்ப பக்தர்கள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications