திருவாதிரை திருவிழா : நெல்லையப்பர் கோவில், சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில்களில் கோலாகல கொடியேற்றம்
மார்கழி மாத திருவாதிரை திருவிழா திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலிலும் குமரி மாவட்டம் தாணுமலையான் சுவாமி கோவிலிலும் கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.
திருநெல்வேலி: சிவபெருமான் நடனமாடிய பஞ்சசபைகளில் ஒன்றான தாமிர சபை எனப்படும் நெல்லையப்பர் கோவிலில் ஆருத்ரா தரிசன திருவிழா நேற்று கொடியேற்ற வைபத்துடன் கோலாகலமாக தொடங்கியது. குமரி மாவட்டம் தாணுமலையான் சுவாமி கோவிலிலும் திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு போதிய சமூக இடைவெளியை கடைபிடித்து சுவாமி தரிசனம் செய்தனர்.
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட தொன்மையானதும், புராதனமானதும், சைவ சமய குறவர்களில் ஒருவரான திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்களில் பாண்டிய நாட்டு தலங்களில் புகழ்பெற்றது நெல்லையப்பர் கோவில். அதோடு தமிழ்நாட்டில் மூன்று மூலவர்களை கொண்ட ஒரே கோவிலும் இது மட்டுமே.
இக்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஐப்பசி அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை மற்றும் மாசி மகா சிவராத்திரி விழாக்கள் புகழ்பெற்றதாகும்.
மார்கழி மாதம் நடைபெறும் திருவாதிரை திருவிழா இங்கு வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு வரும் டிசம்பர் 30ஆம் தேதியன்று ஆருத்ரா தரிசன விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு திங்கட்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்ற வைபத்தை முன்னிட்டு, அதிகாலை ஐந்து மணியளவில் மூலவரான நெல்லையப்பருக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகமும், அலங்கார பூஜையும் நடைபெற்றது. பின்னர் காலை ஆறு மணியளவில் தாமிரசபையில் உள்ள கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் போதிய சமூக இடைவெளியை கடைபிடித்து சுவாமி தரிசனம் செய்தனர்.
விழா நடைபெறும் நாட்களில் பெரிய சபாபதி சன்னதி முன்பாக தினமும் அதிகாலை ஐந்து மணி முதல் ஆறு மணி வரை மாணிக்க வாசகர் அருளிய திருவெண்பாவை வழிபாடு நடைபெறும். நான்காம் நாள் திருவிழா நாளான வியாழனன்று இரவு எட்டு மணி அளவில் சுவாமி-அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பஞ்சமூர்த்திகளுடன் திருவீதியுலா நடைபெறும். வரும் சனிக்கிழமையன்று மனோன்மணி அம்பாள் திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஒன்பதாம் திருவிழாவான வரும் 29ஆம் தேதியன்று இரவு முழுவதும் தாமிர சபையில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெறுகிறது. பத்தாம் நாள் திருவிழாவான டிசம்பர் 30ஆம் தேதியன்று அதிகாலை மூன்று மணியளவில் தாமிரசபை முன்பு பசு தீபாராதனையும், தொடர்ந்து அதிகாலை 3:30 மணி முதல் 4:30 மணிவரை நடராஜரின் திருநடன காட்சியான ஆருத்ரா தரிசனமும் நடைபெறுகிறது.
திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் - 7 #Margazhi,#Thiruppaavai
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில் மார்கழி திருவிழா
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலான சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி பெருந்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான மார்கழி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவானது தொடர்ந்து 30ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. விழாவையொட்டி நேற்று அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், 6 மணிக்கு மாணிக்கவாசகர் பூஜை, 9 மணிக்கு கொடி பட்டத்தை மேள தாளத்துடன் நான்கு ரத வீதிகள் வழியே ஊர்வலமாக எடுத்துச் சென்று மீண்டும் கோவிலுக்கு கொண்டு வந்தனர். மேள தாள பஞ்ச வாத்தியம், வெடி முழக்கத்துடன் தாணுமாலயன் சன்னதி எதிரே உள்ள கொடிமரத்தில் கொடி பட்டத்தை தெற்கு மண் மடம் பிரதீபன் நம்பூதிரி கொடி ஏற்றினார்.
திருவிழாவையொட்டி தினமும் வாகன பவனி, சப்பர ஊர்வலம், சமய சொற்பொழிவு, பக்தி இன்னிசை, பரதநாட்டியம், பட்டிமன்றம் உள்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. 9ஆம் திருவிழாவான 29-ந்தேதி காலை 8.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. இதில், சாமி தேர், அம்மன் தேர், பிள்ளையார் தேர் ஆகிய 3 தேர்கள் உலா வருகின்றன. அன்று இரவு 12 மணிக்கு சப்தாவரணம் காட்சியும், மறுநாள் அதிகாலை 4 மணிக்கு ஆருத்ரா தரிசனம், இரவு 9மணிக்கு மணிக்கு ஆறாட்டு நிகழ்ச்சி ஆகியவை நடைபெறுகிறது.