திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா: மாப்பிள்ளைசாமி... மச்சான் சாமி என்று யாரை அழைப்பார்கள் தெரியுமா
திருச்செந்தூர் முருகனை மீனவர் குல மக்கள் மாப்பிள்ளை சாமி மச்சான் சாமி என்று அழைக்கின்றனர்.
திருச்செந்தூர்: மீனவர் குலத்தில் பிறந்த இந்திரனின் மகள் தெய்வானையை முருகப் பெருமான் மணந்ததாக பரதகுல பாண்டிய வம்ச நூலில் உள்ளதால், இன்றைக்கும் மீனவர்கள் முருகனை, மச்சான் சாமி என்று அழைக்கின்றனர். ஆறுமுகப் பெருமானின் உற்சவர் குமாரவிடங்க பெருமான் மாப்பிள்ளைச் சாமி எனப்படுகிறார். மாப்பிள்ளை சாமியை வணங்குபவர்களுக்கு மணக்கோல பாக்கியம் கிடைக்கும்.
குரு பகவான் பூஜித்த தலம் திருச்செந்தூர் சுப்ரமணியர் ஆலயம். இது வியாழ தலம். குரு திசை குரு புத்தி நடப்பவர்கள். திருமண தடை உள்ளவர்கள் திருச்செந்தூர் வந்து முருகனை தரிசனம் செய்தால் திருமண தடைகள் நீங்கும் என்பது நம்பிக்கை. திருச்செந்தூரில் கந்தசஷ்டி விரதம் இருப்பவர்களுக்கு திருமண தடை நீங்கும், குழந்தைபேறு கிடைக்கும். செய்யும் செயல்களில் வெற்றி கிடைக்கும்.
சஷ்டி விரதம் ஆறு நாட்கள் அனுஷ்டிக்கப்படுகிறது. சஷ்டி விரத காலத்தில் திருச்செந்தூர் முருகன் சந்நிதானத்தில் அமர்ந்து விரதம் இருந்தால், நினைத்த காரியங்கள் நடக்கும். தீராத வயிற்றுவலி உடையவர்கள் திருச்செந்தூர் முருகன் சந்நிதியில் கந்தசஷ்டி கவசம் பாடினால் குணமாகும் என்று பால தேவராய சுவாமிகள் கூறியிருக்கிறார்.
ஆறுமுகப் பெருமானின் உற்சவர்- குமாரவிடங்க பெருமான். திருமணங்களுக்கு இவரே எழுந்தருளுவதால் மாப்பிள்ளைச் சாமி எனப்படுகிறார். சூரனை சம்ஹாரம் செய்து தெய்வானையை மணந்த முருகனை மச்சான் சாமி என்று மீனவர்கள் அழைக்கின்றனர்.

புராண கதை
திருச்செந்தூர் தலம் குரு பரிகாரத் தலமாக விளங்குகிறது. வியாழ பகவானான குரு திருச்செந்தூர் தலத்தில் வழிபட்டு தன் யந்திரத்தை ஸ்தாபித்துள்ளார். தட்சன் நடத்திய யாகத்தில் கலந்துகொண்டதால் சிவநிந்தை செய்த பாவத்துக்கு ஆளாகியிருந்தார்கள் தேவர்கள். இதன் விளைவாக தேவர்களின் வலிமை குறைந்து, சூரபத்மனின் கை ஓங்கிவிட்டது. ஈரேழு பதினான்கு உலகங்களிலும் அவனது அதிகாரம் கொடிகட்டிப் பறந்தது.
சூரபத்மனுக்கு பயந்து தேவர்கள் ஓடி மறைந்தனர். இந்திரன் இருக்கும் இடமே தெரியவில்லை. தேவர்களின் குருவான பிரகஸ்பதி கிடைத்தால், அவரையும் ஒழித்துவிடக் கங்கணம் கட்டித் திரிகிறான் அசுர வேந்தன். இதற்கெல்லாம் தீர்வு என்ன என்ற கேள்வி குருபகவானுக்குள். மனதில் ஆர்ப்பரிக்கும் எண்ணங்களுடன், கானகத்தின் வழியே சென்றுகொண்டிருந்தார் குருபகவான்.
சூரபத்மனின் தலை நகரமான வீரமகேந்திரபுரிக்கு அருகில் இருந்த காட்டுக்குள் வந்தார் குருபகவான். அங்கே ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்து, சிவனை நினைத்து தவத்தில் மூழ்கினார். அப்போது கயிலையில் சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து அக்னியாக உதித்த குமாரனைக் கண்டார் குரு.
அன்னையின் சிலம்பில் இருந்து வீரபாகு, வீரகேசரி, வீரமகேந்திரன், வீர மகேசன், வீர புரந்தரன், வீர ராக்ஷஸன், வீர மார்த்தாண்டன், வீர ராந்தகன், வீரதீரன் ஆகிய நவ வீரர்கள் தோன்றினர். கார்த்திகைப் பெண்கள் மூலம் வளர்ந்து ஆளான முருகப்பெருமானும் நவ வீரர்களும், சூரனை வெல்வதற்குப் படை திரட்டிப் புறப்பட்டு, குருபகவான் தவமிருக்கும் இந்தக் கானகத்துக்கும் வந்து சேர்ந்துவிட்டார்கள்.
தேவேந்திரனின் வேண்டுகோளுக்காக தேவகுரு வியாழ பகவான், சூரபத்மனைப் பற்றிய அனைத்து விவரங்களையும் முருகப்பெருமானுக்கு எடுத்துக் கூறினார். அனைத்தையும் கவனமாகக் கேட்டுக் கொண்ட கந்தன், குருபகவானிடம் விடைபெறும் முன், 'தேவகுருவே! என்னைத் தரிசிக்கத் தாங்கள் தவமியற்றிய திருத்தலம் இது. இனி இங்கே நாம் இருவரும் சமமாக மதிக்கப்படுவோம் என்று கூறினார்.
யுத்தம் முடிந்து, நான் இங்கு கோயில் கொள்ளும்போது, திருச் சீரலைவாய் எனும் இந்தப் புண்ணியப்பதியும் தங்களின் பெயரால் குரு ஸ்தலமாகவே விளங்கும் என்றும் கூறிச் சென்றார். அதுமுதல் திருச்செந்தூரில் குரு பகவானாக, புத்திரப்பேறு அருளும் தேவனாக, ஞானம் அருளும் ஞான குருவாக அருள்பாலிக்கிறார்

சஷ்டி விரத பலன்
திருச்செந்தூரில் கந்தசஷ்டி விரதம் இருப்பவர்களுக்கு திருமண தடை நீங்கும், குழந்தைபேறு கிடைக்கும். செய்யும் செயல்களில் வெற்றி கிடைக்கும். மாப்பிள்ளையை சாமியை வணங்குபவர்களுக்கு மணக்கோல பாக்கியம் கிடைக்கும். மீன் பிடிக்கும் பரதவர் குலத்தில் பிறந்த தெய்வானையை, முருகப் பெருமான் மணந்ததாக பரதகுல பாண்டிய வம்ச நூலில் உள்ளது. எனவே, பரதவர்கள் முருகப்பெருமானை 'மச்சான் சாமி' என்று பாசத்துடன் அழைக்கின்றனர்.
போர் நடந்த இடம் என்பதால், செந்திலாண்டவர் கோயில் அருகில் உள்ள கடல் நீர் சற்றே சிவந்து ரத்த நிறமாயிருக்கிறது. கடற்கரையில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியின்போது கடல்நீர் உள்வாங்கும் அற்புதம் இன்றும் தொடர்கிறது. சூரசம்ஹாரம் முடிந்ததும் செந்திலாண்டவர் எதிரே கண்ணாடி வைத்து, கண்ணாடிக்கு அபிஷேகம் நடைபெறும். இதை 'சாயாபிஷேகம்' (சாயா- நிழல்) என்பர்.

நாழிக்கிணறு
காயத்ரி மந்திரத்தின் எழுத்துகளே இங்கு 24 தீர்த்தங்களாக விளங்குகின்றன என்பது ஐதீகம். முருகப்பெருமான், படை வீரர்களின் தாகம் தணிக்க வேலாயுதத்தால் நீர் ஊற்று ஒன்றை ஏற்படுத்தியதாக கந்த புராணம் கூறுகிறது. ஒரு சதுர அடி பரப்பளவில் திகழ்கிறது இந்தத் தீர்த்தம். அதை 'ஸ்கந்த புஷ்கரணி' என்று சொல்கிறார்கள். ஒரு படியைக் கொண்டு முகக்கும் அளவே மிகக் குறுகிய அளவில் நீர் இருப்பதால், ஒருபோதும் வற்றாத இதற்கு நாழிக் கிணறு என்றும் பெயர் உண்டு. இதில் நீராடிய பிறகே கந்தபெருமானை தரிசிக்க வேண்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

மாமரம் வளராத காரணம்
செந்தூரில் முருகப்பெருமான் முதலில் தங்கிய இடம் 'சிங்க கொழுந்தீசர்' என்ற சிவன் கோயில். இந்தக் கோயிலில் உற்சவங்கள் கிடையாது. முருகன் தந்தையைப் பார்ப்பதற்காக இங்கு எழுந்தருள்கிறார். முருகன் கோயிலுக்கு அருகே, கடற்கரையையொட்டி இருக்கும் வள்ளிக் குகை தரிசிக்க வேண்டிய முக்கிய இடங்களில் ஒன்று. மாமரமாக மாறிய சூரபதுமனை வேலாயுதத்தால் முருகப் பெருமான் இரண்டாகப் பிளந்தார். அதன் ஒரு பகுதி சேவலாகவும், மற்றொன்று மயிலாகவும் மாறியது. அதனால் இங்கு மாமரங்கள் வளர்வதில்லை.












Click it and Unblock the Notifications