திருப்பதியில் குவிந்த பக்தர்கள் கூட்டம்...தரிசன டிக்கெட்டுகள் இல்லாமலேயே செல்ல பக்தர்களுக்கு அனுமதி
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். இலவச தரிசனம் டிக்கெட் பெருவதற்காக கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் பலர் காயமடைந்தனர்.
திருப்பதி: திருப்பதியில் பக்தர்கள் வருகை மிகவும் அதிகரித்துள்ள காரணத்தால் தரிசன டிக்கெட்டுகள் இல்லாமலேயே திருப்பதி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு தேவஸ்தானம் அனுமதி அளித்துள்ளது. இலவச தரிசன டிக்கெட்டுகள் தரும் கவுண்டர்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் நெரிசலில் சிக்கி பக்தர்களுக்கு காயம் ஏற்பட்டது.
திருமலையில் அருள்பாலிக்கும் ஏழுமலையானை தரிசனம் செய்ய தினசரியும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பக்தர்கள் கூட்டம் குறைவாகவே வந்தனர். கூட்ட நெரிசலில் சிக்காமல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடிந்தது.
தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதால் மீண்டும் தினசரியும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வரத் தொடங்கியுள்ளனர்.

குவியும் பக்தர்கள்
நேற்றைய தினம் பதினோராம் தேதி ஏழுமலையானை தரிசிக்க தேவையான டிக்கெட்டுகளுடன் வரும் பக்தர்கள் மட்டுமே திருப்பதி மலைக்கு செல்ல வேண்டும். 12ஆம் தேதி சாமி கும்பிடுவதற்கு தேவையான டிக்கெட்டுகளை வைத்திருக்கும் பக்தர்கள் நாளை காலை முதல் திருப்பதி மலைக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் தெரிவித்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட பக்தர்கள்
இதனால் அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் தேவஸ்தான ஊழியர்கள் மற்றும் போலீசார் ஆகியோருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் மலையடிவாரத்தில் சாலையில் நின்றவாறு அங்கிருந்து செல்ல இயலாது என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் உயர் அதிகாரிகளின் வழிகாட்டுதல் இல்லாமல் திருப்பதி மலைக்கு செல்ல அனுமதிக்க இயலாது என்று அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் பக்தர்களிடம் கண்டிப்பாக கூறிவிட்டனர்.

இலவச தரிசன டிக்கெட்டுகள்
இதனால் இலவச தரிசன டிக்கெட்டுகளை வாங்குவதற்காக இன்று திருப்பதிக்கு வந்த பக்தர்கள் மற்றும் 12ஆம் தேதி ஏழுமலையானை வழிபடும் வகையில் இலவச தரிசன டிக்கெட்டுகளை வாங்கிய பக்தர்கள் ஆகியோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

குவிந்த பக்தத்கள்
இன்றைய தினம் இலவச டோக்கன்களை வாங்குவதற்காக மட்டும் ஒரே நேரத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருப்பதியில் குவிந்தனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது சிலர் காயமடைந்தனர். பெரும்பாலானவர்களுக்கு டிக்கெட்டுகள் கிடைக்கவில்லை. எனவே பக்தர்கள் தேவஸ்தான ஊழியர்கள் விஜிலன்ஸ் துறையினர், போலீசார் ஆகியோர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆங்காங்கே சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

டிக்கெட் இன்றி திருமலை பயணம்
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பக்தர்கள் எனவே அவர்கள் மீது தடியடி பிரயோகம் செய்து விரட்டி அடிப்பது சரியான செயலாக இருக்காது . எனவே அவர்களை சமாதானம் செய்து அனுப்பும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டனர். ஆனால் பக்தர்கள் திருமலைக்கு செல்ல வேண்டும் என அடம் பிடித்தனர் . எனவே வேறு வழியில்லாத நிலையில் டிக்கெட்டுகள் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, நீங்கள் திருமலைக்கு செல்லலாம் என்று தேவஸ்தான ஊழியர்கள் பக்தர்களை திருமலைக்கு அனுப்பி வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications