குழந்தைகளுக்கு நல்ல புத்தகங்களை வழங்கி புதனின் ஆசி பெறச் செய்யுங்கள்!
- அஸ்ட்ரோ சுந்தராஜன்.
சென்னை: இன்று ஏப்ரல் 2ம் தேதி சர்வதேச குழந்தைகள் புத்தக தினமாக உலகெங்கும் கொண்டாடப்படுகின்றது.1967 ஆம் ஆண்டு முதல் டானிஷ் குழந்தை எழுத்தாளர் ஹான்ஸ் கிருஸ்டியன் ஆண்டர்சன் பிறந்த தினத்தை சர்வதேச குழந்தைகள் புத்தக தினமாக கொண்டாடுகின்றனர்.
புத்தகம் என்பது பள்ளிக்கூடத்திற்கு பொதி சுமப்பதை போல பிஞ்சுகள் எடுத்து செல்லும் புத்தகங்களை மட்டும் குறிப்பதில்லை. பாடதிட்டத்தினை தாண்டி ஏராளமான விஷயங்கள் மொட்டுகள் கற்றுக்கொள்ள வேண்டும்.புத்தங்களின் பயன்களை ஊர் அறியும். அறிந்தும் செயல்படுத்த முடியாமல் இருப்பது மாபெரும் தவறு. சின்ன வயதிலேயே படிக்கும் ஆர்வத்தினை ஏற்படுத்தினால், குழந்தைகள் வளர வளர ஆர்வமும் பெருகும். புத்தகங்களை படிக்க வேண்டும் என்ற போது, அவர்களை புத்தக புழுவாகவும் மாற்றிவிடக்கூடாது.
பெரியவர்களின் புத்தக வாசிப்பே குறைந்துவிட்ட இன்றய காலத்தில் குழந்தைகள் புத்தக தினம் கொண்டாடபடுவது வினோதமாகி விட்டது. இருந்தாலும் இது என்னுடைய நினைவுகளை சற்று பின்னோக்கி அழைத்து செல்கிறது. சிறுவயதில் என்னுடைய வாசிப்பு ஆரம்பித்தது பூந்தளிர், கோகுலம், அம்புலிமாமா,பாலமித்ரா, ராணிகாமிக்ஸ் போன்ற வண்ண படங்கள் நிறைத்த விக்ரமாதிதணும் வேதாளமும்,தென்னாலி ராமன் இரும்பு கை மாயாவி மந்திரவாதி மாண்ட்ரேக், ஜேம்ஸ்பாண்ட் 007, டைஹர்-ஹென்றி துப்பறியும் கதைகள் போன்ற சில இன்னும் என் நினைவில் உள்ளது.
அப்போதெல்லாம் இத்தகைய புத்தகங்கள் வைதிருப்பவர்களை சுற்றி எப்போதும் ஒரு கும்பல் இருக்கும்.கதை சொல்வதிலும் கேட்பதிலும் ஆர்வம்மிக்க காலம் அது, இத்தகைய புத்தகங்கள் வாசிக்க கிடைக்கும் என்பதினாலேயே நிறைய குழந்தைகள் அரசாங்கம் நடத்தும் நுலகங்களில் உறுப்பினர் ஆனார்கள் அங்கே மாலை நேரங்களில் இந்த புத்தகங்களுக்கு பெரிய போட்டியே இருக்கும். மேலும் 10 காசுகள் 20 காசுகள் கொடுத்து வாடகை நூலகங்களில் படித்திருப்பதை நினைவுரும்போது மிகவும் இனிமையாக இருக்கிறது.
குழந்தைகளின் புத்தக வாசிப்பிற்கான ஜோதிட காரணங்கள்:
ஜோதிடத்தில் புதனுக்கும் புத்திக்கும் தொடர்பு உள்ளது. புத பகவான் அறிவு, ஆற்றல், வித்தைக்கு காரண கர்த்தாவாக விளங்குபவர். அவர் 'வித்யாகாரகன்' என அழைக்கப்படுகிறார். புத்திதாதா என்றும், தனப்ரதன் என்றும் சிறப்பிக்கப்படுகிறார். எண்ணங்களின் சேர்க்கையே மனம். மனத்தை ஆள்பவன் சந்திரன். அந்த சந்திரனின் புத்திரன்தான் புதன். எனவேதான் மனத்தின் எண்ண ஓட்டத்துக்கும் அறிவுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. புத்தகங்கள் படிப்பதால் அறிவு வளரும் என்பதால் புத்தகத்திற்க்கும் புதனே காரகர் ஆகிறார்.
ஒரு குழந்தையின் ஜாதகத்தில் புதனின் பலம் நிறைந்திருந்தாலே அவர்களுக்கு எதையாது படிக்கும் பழக்கம் இருந்துக்கொண்டே இருக்கும். புத்தகத்தின் காரகர் புதபகவான் என பாரம்பரிய ஜோதிட நூல்கள் கூறுகின்றன. அது பாட புத்தகமாக இருந்தாலும் சரி! கதை புத்தகங்களாக இருந்தாலும் சரி! புத பகவான் தான் காரகர். முக்கியமாக காகிதத்தின் காரகரே புதபகவான் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
யாருக்கு இருக்கும் படிக்கும் பழக்கம்?
1. குழந்தைகளுக்கு எப்போதும் நற்சிந்தனை தைரியமாகவும் கவலைகள் ஏதும் இல்லாமல் இருக்க லக்னம் லக்னாதிபதி சந்திரன் ஆகியவர்களின் நிலை முக்கியமானதாகும். என்றாலும் ஒருவருக்கு புத்தி ஒழுங்காக செயல்பட புதன் ஜாதகத்தில் பலமாக இருக்க வேண்டும். ஒரு குழந்தைக்கு லக்னம், லக்னாதிபதி, சந்திரன், புத்திகாரக புதன் ஆகிய நால்வரும் நல்ல நிலையில் இருந்து தொடர்பு பெற்றுவிட்டால் புத்தகங்கள் படிக்கும் பழக்கம் இயற்க்கையாகவே இருக்கும்.
2. குழந்தைகள் ஜாதகத்தில் புதன் பலமாக 6/8/12 மற்றும் அசுபர்கள் தொடர்பு இல்லாமல் இருந்தால் நல்ல புத்திசாலிகளாக விளங்கிடுவார்கள். மிதுனம் அல்லது கன்னியை லக்னமாக கொண்டு ஆட்சி உச்சம் பெற்றுவிட்டாலும் மிக சிறந்த கல்விமான்களாக விளங்குவர். மிதுன லக்னத்திற்க்கு சுக்கிரனின் வீடாகிய துலாம் ஐந்தாம் பாவமாக வருவதால் மிதுன ராசி லக்ன காரகர்களுக்கு பாட புத்தகம் மட்டுமின்றி ஜென ரஞ்சகமான கதை புத்தகங்களையும் விரும்பி படிப்பார்கள்.
3.ஜாதகத்தில் புதன் பலமாக இருப்பது பல நலன்களை சேர்க்கும். புதன் பலவீனமாக இருக்கிற பட்சத்தில் உடல்ரீதியாகவும் சில கோளாறுகள் ஏற்படலாம். புதன் பலவீனமாக இருந்தாலும், நீச்சம் மற்றும் 6, 8, 12 ம் இட கிரகங்களுடன் சேர்ந்தாலும் ஒற்றைத் தலைவலி, கை கால் வலிப்பு, நரம்பு தளர்ச்சி, பய உணர்வு, சஞ்சலம், சபலம், புத்தி சுவாதீனம் இல்லாமை, கழுத்து நரம்பு வலி, ஆகிய பிரச்னைகள் ஏற்படலாம்.மேலும் புத்தகங்கள் படிப்பதில் ஆர்வத்தை குறைக்கும்.
4. ஜாதகத்தில் புதன் பலம் இருந்தால்தான் கணிதத்தில் தேர்ச்சியும், நிபுணத்துவமும் ஏற்படும். சகல கணிதங்களுக்கும் மூலகர்த்தா புதன் ஆவர். இதை வைத்தே பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று சொல்வார்கள். அதாவது, புதனின் அருளாசி இருந்தால் பொன், பொருள் வாங்கும் யோகம் உண்டாகும் என்பது பொருள். மேலும் கதை புத்தகத்தில் வரும் குறுக்கெழுத்து போட்டிகள், சுடோகு போன்றவற்றிற்க்கு விடையளிக்கவும் புதனின் பலம் மிகவும் முக்கியமாகும்.
5. கல்விகாரகன், அறிவுகாரகன் எனப் போற்றப்படும் புதன் பகவான் ஒருவர் ஜாதகத்தில் ஆட்சியோ, உச்சிமோ பெற்று ஜென்ம லக்னத்திற்கோ சந்திரனுக்கோ கேந்திர ஸ்தானங்களில் அமைந்திருந்தால் பத்திர யோகம் உண்டாகிறது. பத்திர யோகம் அமைந்துள்ள ஜாதகருக்கு நல்ல அறிவாற்றல், சிறப்பான ஞாபக சக்தி, புக்தி கூர்மை யாவும் அமையும் புதன பகவான் பலம் பெற்று பத்திர யோகம் உண்டாகி இருந்தால் நல்ல உடல் ஆரோக்கியமும், ரத்த ஓட்டமும் உண்டாகி உடல் நிலை சிறப்பாக இருக்கும்.
6. ஜாதகத்தில் புதன் ராகு சேர்க்கை பெற்றவர்கள் புத்தகங்களை அதிவேகமாக படிப்பதில் திறமையுள்ளவர்களாக இருப்பார்கள். மற்றும் புதனோடு சுக்கிர சேர்க்கை பெற்றவர்கள் எலக்ட்ரோனிக்ஸ் மீடியம் எனப்படும் மின்னனு புத்தகங்களையும் படிப்பார்கள்.
7. சில குழந்தைகளின் ஜாதகங்களில் ஜாதகங்களில் புதன் கேது சேர்க்கை, புதன் சுக்கிர சேர்க்கை, புதன் சந்திர சேர்க்கை போன்றவை அமைந்திருந்தால் தேவையற்ற புத்தகத்தை படித்து பிஞ்சிலேயே பழுத்தவர்களாக இருப்பார்கள்.
8. எந்த லக்னமாக இருந்தாலும் புதன் சுக்கிரனின் வீட்டில் இருந்தால் முக்கியகாம ரிஷபத்தில் இருந்தால் அவர்களுக்கு புத்தகங்கள் படிப்பதில் பிடிவாதமாக இருப்பார்கள். ரிஷபத்தில் புதன் ராகு/கேது சேர்க்கை பெற்று நின்று விருச்சிகத்திற்க்கு தொடர்பு ஏற்படுத்தினால் அவர்கள் புத்தகம் படிப்பதற்க்கு அடிமையாகவே இருப்பார்கள்.
குழந்தைகளுக்கு புத்தகம் படிக்கும் ஆர்வம் வளர ஜோதிடம் கூறும் வழிகள்:
1. புதபகவானை வணங்குவதன் மூலம் புத்தகம் படிக்கும் ஆர்வம் வளரும். கும்பகோணத்தில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் இருக்கும் திருவெண்காடு புதன் ஸ்தலமாகும். தனி சன்னதியில் புத பகவான் அருள்புரிகிறார். மற்றும் மதுரையில் மீனாட்சி அம்மன் புதன் அம்சமாகவே இருக்கிறார்.
2. புதனின் அதிதேவதை விஷ்னு பகவானாவார். அசுரர்களிடமிருந்து வேதத்தை காக்க மகாவிஷ்னு எடுத்த அவதாரங்களில் ஸ்ரீ ஹயக்ரீவர் அவதாரம் குறிப்பிடத்தக்கது. ஸ்ரீ லக்ஷமி ஹயக்ரிவர் கல்விக்கதிபதியான சரஸ்வதியன் குரு என புரானங்கள் போற்றுகின்றன. ஸ்ரீ லக்ஷமி ஹயக்ரிவ மூர்த்தியை செங்கல்பட்டுக்கருகே இருக்கும் செட்டிபுண்ணியம், கடலூர் திருவஹிந்திபுரம் போன்ற ஸ்தலங்களில் வணங்குவது கல்வியறிவையும் பெருக்குவதோடு புத்திக்கூர்மையையும் அளிக்கும். மேலும் கல்வித்தடை நீங்கும்.
3. புதனுக்குகந்த தானியமான பச்சை பயறு சுண்டல், பயத்தலாடு போன்றவை செய்து நவக்கிரக புதனுக்கு அல்லது ஸ்ரீலக்ஷமி ஹயக்ரீவ மூர்த்திக்கு நிவேதனம் செய்து குழந்தைகளையும் சாப்பிட செய்து அவர்களையே பல குழந்தைகளுக்கு வினியோகம் செய்யவிடுவது குழந்தைகளின் கல்வி தடை நீங்கும் சிறந்த பரிகாரமாகும். மேலும் புத்தியையும் திறமையையும் வளர்க்கும் புத்தகங்களை படிக்க வழிவகுக்கும்.
4. புதனோடு கேது சேர்க்கை பெற்று வயதிற்க்கு மீறிய கண்ட கண்ட புத்தகங்களை புத்தகமாகவும் வலைதளத்திலும் படிக்க நேர்ந்தால் ஞான காரகரான கேதுவின் அதிதேவதை வினாயகரை தியானித்து பின் படிக்க ஆரம்பித்தால் மறதி நீங்கும்.
குழந்தைகளுக்கு புத்தகங்கள் வெறும் கேளிக்கை மட்டும் அளிக்கவில்லை. கலைத்திறனை நாட்டுப்பற்றை, நல்ல சிந்தனைகளை, குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை, கல்வியின் அவசியத்தை போன்ற பல நன்மைகள் அளிக்கும் புத்தக வாசிப்பை மீண்டும் குழந்தைகள் பெற பெற்றோராகிய நாமும் சிறிது பாடுபட்டு அவர்களின் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க இந்த நாளில் இருந்து முயற்சிக்கலாம்.