வைகாசி தேய்பிறை பிரதோஷம்..அமாவாசை..சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு வருகிற 27ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விருதுநகர்: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு வைகாசி பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு வருகிற 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் 31ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வரை 5 நாட்களுக்கு பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சதுரகிரியை அகஸ்தியர் உள்ளிட்ட சித்தர்கள், இந்த மகாலிங்க மலையை சித்தர்கள் வாழும் பூமி என்கின்றனர்.
காய கல்ப மூலிகைகள் நிறைந்த வனப்பகுதியில், சுந்தர மகாலிங்க மூர்த்தியும் மலை உச்சியில் பெரிய மகாலிங்க மூர்த்தியும் கோயில் கொண்டுள்ளனர்.

சதுரகிரி மலையில் ஓடுகின்ற தீர்த்தங்களும், மூலிகைகளும் பல நோய்களை தீர்க்க வல்லது. இந்த மலை ஏறி இறங்கினால் உடலில் உள்ள வியர்வை வெளியேறி, மூலிகை கலந்த காற்று பட்டு பல நோய்கள் குணமாவதாகச் சொல்கிறார்கள். இதனால் மாதந்தோறும் ஏராளமான பக்தர்கள் சதுரகிரி மலையேறி சாமி தரிசனம் செய்கின்றனர்.
வைகாசி மாத தேய்பிறை பிரதோஷம், அமாவாசையை முன்னிட்டு வரும் 27ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் காலை 7 மணி முதல் மதியம் 11 மணி வரை மட்டுமே கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வைகாசி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பிரதோஷம் மற்றும் அமாவாசை அன்று சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை, கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் வனப்பகுதியில் எளிதில் தீப்பற்றும் பொருட்களைக் கொண்டுச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இரவு நேரங்களில் மலைப்பகுதியில் தங்குவதற்கு கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.
மேலும் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் பக்தர்கள் இறங்கி குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் முகக்கவசம் அணிந்து தமிழக அரசின் கட்டுப்பாட்டு வழிமுறைகளை பின்பற்றி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அனுமதிக்கப்பட்ட நாட்களில் மழை பெய்தால் மலையேறி சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.











Click it and Unblock the Notifications