வைகுண்ட ஏகாதசி : ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு- ரத்ன அங்கி அணிந்து உலா வந்த நம்பெருமாள்
வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் சொர்க்கவாசல் திறப்பு கோலாகலமாக நடைபெற்றது.
திருச்சி: ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட எகாதசி விழா கோலாகலமாக நடைபெற்றது. ரத்ன அங்கி அணிந்து கிளி மாலை சூடி சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளிய நம்பெருமாளை ஏராளமானோர் தரிசனம் செய்தனர். கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக நம்பெருமாளையும், மூலவரையும் தரிசனம் செய்ய இரவு 8 மணிக்கு மேல் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் மகாவிஷ்ணுவின் 108 திவ்ய தேசங்களில் முதன்மையானது. இந்த ஆலயத்தில் மார்கழி மாதத்தில் வளர்பிறை ஏகாதசி மோட்ச ஏகாதசியாக வைகுண்ட ஏகாதசி விழாவாக 20 நாட்கள் கொண்டாடப்படும்.
இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 14 ஆம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. மறுநாள் முதல் பகல் விழா பத்து நாட்கள் நடைபெற்றது. தினசரியும் ஒவ்வொரு அலங்காரத்திலும் நம்பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பத்தாம் நாள் நேற்றைய தினம் மோகினி அலங்காரத்தில் பெருமாள் எழுந்தருளினார்.
ராப்பத்து விழாவின் முதல்நாள் வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு மூலவர் ஸ்ரீரங்கநாதர் முத்தங்கி சேவையிலும் நம்பெருமாள் ரத்ன அங்கி சேவையிலும் சேவை சாதித்தனர். அதிகாலை 3.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு அதிகாலை 4.45 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசலில் எழுந்தருளினார்.
நம்பெருமாளுடன் கோவில் ஊழியர்களும், காவல்துறை அதிகாரிகளும் சொர்க்கவாசல் வழியாக சென்றனர். காலை 8 மணிக்கு மேல் சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். இரவு 8 மணிக்கு மேல் சேவை கிடையாது.
ஜனவரி 4ஆம் தேதி வரைக்கும் மூலவர் முத்தங்கி சேவை, பரமபதவாசல் திறப்பு ஆகியவற்றிக்கு பக்தர்கள் https://srirangam.org என்ற கோவில் இணையதளத்தில் கட்டணமில்லா தரிசனம் மற்றும் விரைவு வழி தரிசனம் ஆகியவற்றிற்கு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். முன்பதிவு செய்த நேரத்தில் இருந்து 30 நிமிட நேரத்திற்கு முன்பாக கோவிலுக்கு வரவேண்டும் என நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே நம்பெருமாளை தரிசிக்க பக்தர்கள் அதிகாலை முதலே காத்திருக்கின்றனர்.
வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி திருச்சி போலீஸ் கமிஷனர் லோகநாதன் தலைமையில் 5 காவல்துறை கண்காணிப்பாளர்கள் உள்பட உள்பட 2500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில், மதுரை கூடல்அழகார் பெருமாள் கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில், தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவில்களில் அதிகாலையில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் முக கவசம் அணிந்து பெருமாளை தரிசனம் செய்தனர்.